சுயமரியாதைச் சுடரொளிகள்!

viduthalai
3 Min Read

1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.

அடையாறு கோ. அரங்கநாதன்

அடையாறு கோ. அரங்கநாதன் என்றால், அவர் ஓர் அசையாத ‘அடையாறு ஆலமரம்’ என்றே சொல்ல வேண்டும்.

கட்டுக்கடங்காக் கழகப் பற்றுடன் திராவிடர் கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறையும் சென்று இருக்கிறார்.

புதுச்சேரியில் 1928இல் (அக்டோபர் 10) பிறந்த இத்தோழரின் பெற்றோர் கோவிந்தராசு – முனியம்மாள்.

சிறுவயதிலேயே தந்தையைப் பறி கொடுத்த நிலையில்   தாயாரோடும்,  நான்கு சகோதரர் –  சகோதரிகளுடனும் சென்னை மயிலை வந்து சேர்ந்தார். கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் அவலம்.

மயிலையில் கழகத் தோழர்கள்  அமைத்த திருவள்ளுவர் மன்றமே (1946) அவருக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்தது. தையல் கலைஞர் மு. வெங்கடேசன்தான் அந்தப் பகுதியில் கழகத் தோழர்களை உருவாக்கிய ஆசான்.

‘விடுதலை’ வழியாக கல்விக் கற்றார்

‘விடுதலை’யை மற்றவர்கள் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கேட்டு அதன் வழியாகத்தான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார்.

தொடக்கத்தில், பக்தி சூழலில் அவர் கையில் அவரது தாயார் கிருஷ்ணர் உருவத்தை பச்சை குத்தி விட்டார். அத்தகைய ஒரு தோழர் கருஞ்சட்டை வீரராகி, பச்சை நாத்திகராகி விட்டார்.

முதலில் மயிலைப் பகுதி திராவிடர் கழகச் செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர் கிழக்கு சென்னை மாவட்ட செயலாளராகவும், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவராகவும் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.   ‘நவ இந்தியா’, ஈ.வெ.கி. சம்பத் நடத்திய தமிழ்ச் செய்தி, கி.வா.ஜெகநாதன் நடத்திய ‘கலைமகள்’ இதழில் அச்சுக் கோப்பாளராக பணியாற்றினார்.

‘செங்கோல்’ இதழை ம.பொ.சி. நடத்திக் கொண்டு இருந்தார்.  அங்கும் அரங்கநாதன் பணி செய்துள்ளார். கலைமகளில் அவர் 22 ஆண்டு காலம் பணியாற்றினார்.

1973இல் நடந்த ஒரு நிகழ்ச்சி – அரங்கநாதனின் தன்மானத்தைச் சீண்டக் கூடிய ஒரு சம்பவம்.

‘‘கலைமகள்’’ அச்சகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்திரசேகரன் என்னும் பார்ப்பனர் ஒருவர், (இவர் காஞ்சி சங்கராச்சாரியாராக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அண்ணன் மகன்).

அச்சுக்கோப்பாளரான அரங்கநாதன் அந்த அய்யரின் பக்கத்தில் சென்ற போது ‘‘டேய் சூத்திரா! என்ன பக்கத்தில் வருகிறாய்?’’ என்று கத்தினாராம். அவ்வளவுதான். அந்த இளைஞரின், மான மறவரின் கருஞ்சட்டை உள்ளம் கொதி நிலையை அடைந்தது. கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் அந்தப் பார்ப்பனரின் சிண்டை நறுக்கித் தூக்கி எறிந்து விட்டார்.

அவ்வளவுதான் கலைமகள் அலுவலகமே ‘தீ’ பிடித்துக் கொண்டது. அய்ம்பதுக்கும் மேற்பட்ட பார்ப்பனர்கள் ஒன்றுகூடி விட்டனர். கி.வா. ஜெகநாதனும் இருந்தார்.

கி.வா.ஜெ. தோழர் அரங்கநாதனைப் பார்த்துக் கேட்டார். ‘‘என்ன அரங்கநாதன் இப்படி செய்து விட்டீர்களே!’’

அரங்கநாதன் சொன்ன பதில் ‘‘அய்யா இந்த அய்யர் என்னை  சூத்திரன் என்று சொன்னதால் உணர்ச்சி வசப்பட்டு இப்படி செய்து விட்டேன்’’ என்று கூறினார். (அப்படி அறுக்கப்பட்ட பார்ப்பனரின் சிண்டைக்கூட வெகு நாள் பத்திரப்படுத்தி வைத்திருந்தார் தோழர் அரங்கநாதன்.

இந்த இடத்தில் பார்ப்பனர்களின் சாமர்த்தியத்தைக் கவனிக்க வேண்டும். ‘‘சரி, சரி’ ஏதோ நடந்து விட்டது. இங்கே நடந்த சமாச்சாரம் வெளியில் தெரியக்கூடாது வெளியில் சொல்லக் கூடாது’’ என்று கேட்டுக் கொண்டார்களாம்.

இவர் இணையர் ராஜேஸ்வரி பள்ளிக்கூட ஆசிரியை ஆவார். மூன்று மகன்கள், ஒரு மகள் அனைவரும் கழகக் கொள்கையில் உறுதியானவர்கள். இயக்கத்தைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசாத, பேசத் தெரியாத பிரச்சார வாகனம் என்று இவரைச் சொல்ல வேண்டும்.

25.12.2007 அன்று சென்னை மயிலாப்பூர் பகுதியில் பெரியார் படிப்பக திறப்பு விழா தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். கூட்டம் முடிந்து காரில் வீடு திரும்பும்போது, அடையாறு அரங்கநாதன்   பேருந்தைப் பிடிக்க வேகமாக நடந்து சென்று கொண்டு இருந்தார். இதைப் பார்த்த கழகத் தலைவர் அவர்கள் காரை நிறுத்தச் சொல்லி தோழர் அரங்கநாதனை காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். இதை நினைவு கூர்ந்த அரங்கநாதன்   உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டார். இதுதான் திராவிடர் கழகம். இதுதான் கழகத்தின் தலைமை. இதுதான் இயக்கத் தொண்டர்களின் சிறப்பு.

மறைவிற்கு முதல் நாள் வளசரவாக்கத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார். 1.10.2011 அன்று மறைந்தார்.

தொகுப்பாளர்:  தமிழ்க்கோ

(கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய ‘‘சுயமரியாதைச் சுடரொளிகள்’’ என்ற நூலிலிருந்து)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *