சிறப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக மாறுகிறது ஜார்ஜ் டவுன் மூன்றாவது நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

Viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 27 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக ஜார்ஜ் டவுன் 3-ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளரும், மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியின் தாளாளருமான எம்.ஜி.தாவூத் மியாகான், தங்களது கல்லூரி மற்றும் அறக்கட்டளை நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரான மேனாள் நாடாளுமன்ற அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023-ஆம் ஆண்டு எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

 

ஆனால் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த எழும்பூர் குற்றவியல் நடுவர், மனுதாரரின் குற்றச்சாட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இருப்பதால் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தினார். அதன்படி சிறப்பு நீதிமன்றத்தை நாடியபோது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப பரிந்துரைக்கப்படும் வழக்குகளை மட்டுமே தங்களால் விசாரிக்க முடியும் என்றும், தமிழ்நாட்டில் அரசின் உத்தரவுப்படி நேரடியாக எந்த வழக்கையும் விசாரணைக்கு எடுக்க முடியாது என்றும் கூறி மறுத்தது.

 

அதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிரான தனது வழக்கை விசாரிக்க சென்னையில் பிரத்யேக குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அமைத்து உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாவூத் மியாகான் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் கடந்தாண்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் தாவூத் மியாகான் தொடர்ந்திருந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளையும், அரசுத் தரப்பில் வழக்குரைஞர் எஸ்.வினோத்குமாரும், உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் வழக்குரைஞர் அருண் அன்புமணியும் ஆஜராகி வாதிட்டனர்

 

அப்போது தமிழ்நாட்டில் அரசுத் தரப்பில், சென்னையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்க பிரத்யேக குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக ஜார்ஜ் டவுன் 3-ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, ஜவாஹிருல்லா, அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக மனுதாரர் ஜார்ஜ் டவுன் 3-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடலாம், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *