சட்டமன்ற உறுப்பினர்களுக்கான உள்ளூர் தொகுதி நிதி ரூ.5 கோடியாக குறைத்தது ஒன்றிய பிஜேபி அரசு

viduthalai
4 Min Read

புதுடில்லி, ஜூன் 25 ஆண்டுதோறும் வழங்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான உள்ளூா் பகுதி மேம்பாட்டு எல்.ஏ.டி நிதியை ரூ.15 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக பாஜக தலைமையிலான டில்லி அரசு குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி

கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அக்டோபரில், எம்.எல்.ஏ.க்களுக்கான எல்ஏடி நிதியை ரூ.10 கோடியிலிருந்து ரூ.15 கோடியாக அப்போதைய ஆம் ஆத்மி அரசு உயா்த்தியது. இந்த நிலையில்,நிகழாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியுற்றது.

இந்த நிலையில், டில்லி அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய உத்தரவின்படி, மே 2 அன்று அமைச்சரவை முடிவின்படி சட்டமன்ற உறுப்பினர் எல்ஏடி நிதி, ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியாக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 2.5.2025ஆம் தேதியிட்ட அமைச்சரவை முடிவு எண். 3187இன்படி, சட்டமன்ற உறுப்பினர்   எல்ஏடி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு 202526 நிதியாண்டிலிருந்து ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது ஒரு நிதி ஆதார தொகுப்பு நிதியாக இருக்கும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட மூலதன இயல்புடைய பணிகளுக்கும், சொத்துக்களை பழுதுபாா்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் உச்சவரம்பு இல்லாமல் செலவிடப்படலாம் என்றும் அமைச்சா்கள் குழு உத்தரவிட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்  எல்ஏடி நிதியின் கீழ் அரசாங்கம் ரூ.350 கோடியை ஒதுக்கியதாக ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினர்  கூறினாா். அதாவது, தில்லியில் உள்ள 70 சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு தலா ரூ.5 கோடியாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில், 2021–-2022 மற்றும் 2022-2023 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் ரூ.4 கோடி வழங்கப்பட்டது. இது 2023-2024இல் ரூ.7 கோடியாக உயா்த்தப்பட்டது.

பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை
ஏழு இடங்களில்  ரூ.20 கோடியில்
நடை மேம்பாலம்  பணிகள் தீவிரம்

காட்டாங்கொளத்தூர், ஜூன் 25  தமிழ்நாட்டில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக உள்ள சென்னை – திருச்சி சாலை, தற்போது நான்குவழி சாலையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால், இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனிடையே பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழி சாலை 8 வழி சாலையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்ட நிலையில், சிங்கப்பெருமாள் கோவில் முதல் திருச்சி வரை 8 வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்றது வருகின்றன.

ஏராளமானோர் உயிரிழந்தனர்

இந்நிலையில் நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், சாலை குறுக்கிடும் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து உள்ளனர். இதனை தவிர்க்க சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்கோவில் வரை 7 இடங்களில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ரூ.20.48 கோடியில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பெருங்களத்தூர் இரணியம்மன் கோயில், வண்டலூர் ரயில் நிலையம், தைலாவரம் எஸ்டான்சியா டெக்பார்க், பொத்தேரி வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், மறைமலை நகர் பேருந்து நிலையம் மற்றும் சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 7 இடங்களிலும் 61 மீட்டர் நீளம் கொண்ட 60 டன் எடை கொண்டது இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. முக்கிய சாலை என்பதால் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து சமூக ஆர்வலர் ஈஸ்வரன் கூறியது: பரபரப்பான சாலையாக விளங்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஏழு இடங்களில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

இதனால் விபத்துகள் குறைவதோடு வாகனங்கள் தங்கு தடை இன்றி செல்ல வழிவகை ஏற்படும். தற்போது அமைக்கப்பட்டு வரும் நடை மேம்பாலங்கள் அனைத்திலும் எஸ்கலேட்டர் வசதி அல்லது லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும். இந்த வசதி இல்லையெனில் பொதுமக்கள் இதனை பயன்படுத்தாமல் மீண்டும் சாலையை கடந்து செல்வார்கள். இதனால் ஏற்படும் விபத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியாது.

மேலும் 3 நடைமேம்பாலம் தேவை

மேலும், மறைமலைநகர் நகராட்சி கீழக்கரணை பகுதி மற்றும் மகேந்திர சிட்டி, நந்திவரம் பகுதியிலும் மக்களின் வசதிக்காக நடைமேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருவதால் மற்ற பகுதியில் அமைக்கப்பட்டு வருவது போல் இங்கும் நடை மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *