சென்னை, ஜூன் 22- குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் இனி அரசின் குடிநீர் லாரிகளும் ஓடாது. காவல் துறை யுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப் பட்டது.
கனரக வாகனங்கள்
சென்னையில் தனியார் நிறுவனத்தின் குடிநீர் லாரி மோதி ஒரு சிறுமி பலியானார். இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமான ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள் ளார். அதே போல் அனுமதி இல்லாத நேரத்தில் கனரக வாகனத்தை அனுமதித்த காவல் துறை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.மேலும் காவல் துறை, காலையில் 6 மணிக்கு மேல் நகரில் கனரகவாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தனர்.
அதனால் தமிழ்நாடு அரசின் குடிநீர் வாரியத்தின் குடிநீர் லாரிகளை இயக்குவதிலும் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் நகரின் பல்வேறு இடங்களில் லாரி மூலம் கிடைக்கும் குடிநீரை நம்பி இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பேச்சுவார்த்தை
எனவே குடிநீர் வாரியம் காவல் துறையுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி இந்த பேச்சு வார்த்தை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று (21.6.2025) நடந்தது. அதில் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய், கூடுதல் காவல் துறை ஆணையர் (போக்குவரத்து) கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது வினய், அரசின் குடிநீர் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அதனை காவல் துறையினரும் ஏற்றுக்கொண்டனர். எனவே அதில் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நேரமான காலை 7.30 மணி முதல் காலை 9.30 மணி வரை மட்டும் குடிநீர் லாரிகளை இயக்க வேண்டாம் என்று முடிவு செய்யப் பட்டது.
விடுமுறை நாள்களில்…
பள்ளி விடுமுறை மற்றும் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை நாள்களில் தடை நேரமான காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை லாரிகளை இயக்கலாமா? என்று குடிநீர் வாரியம் சார்பில் காவல் துறையினரிடம் கேட்கப்பட்டது. இப்போதைக்கு அனைத்து நாட்களிலும் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை குடிநீர் லாரிகளை இயக்க வேண்டாம் என்று மட்டும் முடிவு எடுத்துள்ளதாக திட்ட வட்டமாக கூறி விட்டனர்.
மாலையில்…
மேலும் மாலையில் குழந்தைகள் வீடு திரும்பும் நேரத்தில் கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்பட்டு இருக்கிறதா? என்று அதிகாரிகளிடம் கேட்ட போது, “காலையில் பள்ளிக்கு செல்லும்போது தான் அவர்கள் வேகமாக கிளம்பிசெல்ல வேண்டிய நிலை இருக்கிறது. மாலையில் அந்த பிரச்சினை இல்லை”. இருப்பினும் காவல் துறை, மாலையில் எந்தந்த வழித்தடங்களில் குடிநீர் லாரிகள் செல்லும் என்ற பட்டியலை கேட்டுள்ளதாக கூறினார்.