ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் – 7 “பறவை முகத்தை, மனித முகமாக்கிய மருத்துவம்”

Viduthalai

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

கட்டுரை, ஞாயிறு மலர்

காரிருள் விலகி காலை மலர்ந்த நேரம். காக்கைகள் கரைந்தன; குருவிகள் சிறகடித்துப் பறந்து சிலிர்ப்பை ஏற்படுத்தின. தென்மேற்கு தென்றல், மெல்லிய சாரலோடு குன்னூரை நனைத்துக் கொண்டிருந்த காலைப்பொழுதின் மேகங்கள் பஞ்சுப் பொதிகளாய் கதிரவனின் கதிர்களை மூடியிருந்தது. நேரம் தவறாமல் மருத்துவமனைக்குச் செல்வதை வழமையாகக் கொண்டவர்கள் நானும், எனது இணையர் மரு.பிறைநுதல் செல்வியும் (மேனாள் திராவிடர் கழகப் பொருளாளர்). என் புறநோயாளிகள் பகுதிக்குச் சென்று அமர்ந்தேன். காத்திருப்போரிடத்தில் ஒரு சிறுவனும், அவனது பெற்றோரும்(?), ஒரு நடுத்தர வயது ஆணும், பெண்ணும் அமர்ந்திருந்தனர். செவிலியர் ஆரம்ப ஆயத்தங்களை முடித்தவுடன், வெளியே அமர்ந்திருந்த அவர்களை உள்ளே அழைத்தேன். உள்ளே வந்தவுடன் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டேன்.

அந்த அம்மாதான் பேசினார். “சார், நாங்க இங்க “கிளின்டேல்” எஸ்டேட்ல வேலை செய்யறோம். (அது ஒரு தேயிலைத் தோட்டம், குன்னூரின் அருகே உள்ளது.) இவன் எங்க பையன். பெயர் சரவணன். ரெண்டாவது படிக்கிறான். இவனுக்கு வாய் திறக்க முடியாது. எங்க எஸ்டேட் ஆஸ்பத்திரியில் எனக்குப் பிரசவம் பாக்கப் போனோம். குழந்தை கழுத்தில் கொடி சுத்திக் கிடக்குது. இங்கு பிரசவம் பார்க்க முடியாது என்று அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சுட்டாங்க.

நாங்களும் அங்க போனோம். அங்கும் சுகப் பிரவசம் ஆகாததால், கடைசியாக ஆயுதம் போட்டு (Forceps Delivery) குழந்தையை எடுத்தார்கள். குழந்தையும் நன்றாக இருந்துச்சு. நாங்களும் சந்தோஷமா வீட்டுக்குப் போனோம். ஆனா, எங்க சந்தோஷம் ஓரிரு வருஷந்தான் நீடிச்சுச்சு. ஆரம்பத்துல நல்லா, பால் குடிச்சு, நல்லா வளர்ந்த குழந்தை ஓரிரு வருஷத்திலே சாப்பிட முடியாம கஷ்டப்பட ஆரம்பிச்சுச்சு. கெட்டியான உணவை பையனால் சாப்பிட முடியவில்லை. “வாயைத் திற” என்று குழந்தையிடம் சொன்னா, அவனால முழுசா வாய திறக்க முடியல. டாக்டரிடம் கொண்டு சென்று  காண்பித்தோம். அவரும் பாத்துட்டு பெரிய ஆஸ்பத்திரியில் காட்டச் சொன்னார். கோயம்புத்தூரில், பெரிய ஆஸ்பத்திரியில் போய் காண்பித்தோம். ஒன்னுமே சரியா ஆகல. இப்படி நிறைய ஆஸ்பத்திரிகளுக்கெல்லாம் போய் காட்டினோம்.

ஒரு பிரயோஜனமும் இல்ல. இதுக்கு நடுவே பையன் வளரத் தொடங்கிடுச்சு. சரியா சாப்பிட்றதே இல்ல. வாய் ஒரு விரல் செல்லக்கூடிய அளவுதான் தொறக்கும். மெதுவா கொஞ்ச, கொஞ்சமா சாப்பாடு கொடுப்போம். பையன் மெதுவா சாப்பிடுவான். ஒரு நேரம் சாப்பிட ஒரு மணி நேரம் கூட ஆயிடும். பையன் முகத்தில் மூஞ்சியும் வளரல. கீழ் நாடி சின்னதாவே இருந்தது. முகமே அழகா இல்லாம போச்சு. சாப்பிடவும் சரியா முடியல. அதனால இப்பல்லாம் ஸ்கூல் கூட போகத் தகராறு செய்யறான்.

நாங்க உங்களப் பத்திக் கேள்விப்பட்டோம். அதனால இங்க கூட்டியாந்தோம். எம் புள்ளய எப்படியாவது சரி பண்ணிடுங்க சாமி” என்று தன் மகனின் பிரச்சினையை கண்ணீரோடு அந்த அம்மா சொல்லி முடித்தார். அந்தம்மாவோடு வந்த அவர் கணவரும், “சார், நீங்கத்தான் எம் புள்ளய நல்லா பண்ணிக் கொடுக்கோணும்!” என்று கூறினார்.

அவர் கண்ணிலும் கண்ணீர். “சரி, பார்க்கலாம்” என்று கூறி அவர்கள் பையன் சரவணனைச் சோதிக்க அழைத்தேன். பையன் உடல் பரிசோதனைகளையெல்லாம் பார்த்தேன். எல்லாம் இயல்பாக இருந்தது. பொதுவாக சற்று ஒல்லியாக வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமல் அவன் இருந்தான். முகத்தைச் சோதித்தேன். முகத்தின் கீழ் நாடி முழுமையாகவே வளர்ச்சியின்றி இருந்தது. வாயும் ஒரு விரல் இடைவெளியளவில்தான் திறந்தது. அதற்கு மேல் அவனால் திறக்க முடியவே இல்லை.

“பையன் எங்காவது கீழே விழுந்தானா?” என்று கேட்டேன். “இல்லை” என்று அவன் பெற்றோர் பதில் கூறினர். நான் மீண்டும், மீண்டும் அந்தக் கேள்வியை அவர்களிடம் கேட்க, அவர்கள் உறுதியாக அவன் கீழே விழுந்ததே இல்லை என்று பதில் கூறினர். அவர்கள் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. பொதுவாக கீழே விழுந்து, கீழ்த் தாடையில் அடிபட்டால்தான் இதுபோன்ற பிரச்சினை தோன்றும்.

அப்படி எதுவும் நடக்காத போது, எப்படி இது போன்று  பிரச்சினை ஏற்பட்டது என்று சற்று குழப்பம் ஏற்பட்டது. பையனை ஆய்வு செய்யத் துவங்கினேன். பையனின் கீழ் நாடி மூட்டு வளர்ச்சியின்றி சிதைந்து இருப்பதை அறிந்தேன். இரண்டு புற மூட்டும் வளர்ச்சியில்லாமல் இருந்ததை கண்டவுடன் மீண்டும் வியப்பு. பொதுவாக யாருக்கும் மூட்டுகள் வளர்ச்சியின்றி இருக்க எந்தக் காரணமுமில்லை. ஊடுகதிர் (X-Ray) எடுத்துப் பார்க்க முடிவெடுத்து, அதையும் செய்தேன். அந்தப் படத்தில் இரண்டு புற மூட்டுகளையும் தனித்தனியே அறிய முடியவில்லை. மண்டை ஓட்டோடு இணைந்தவாறு அவை இருந்தன. அதனால்தான் அவனுக்கு வாயும் சரியாகத் திறக்க முடியவில்லை என்பதும், கீழ்நாடி வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது என்பதையும் கண்டு பிடித்தேன். இரண்டு புறமும் மூட்டுகளில் பாதிப்பு இருந்ததால், கீழ் நாடி வளர்ச்சியே இல்லாமல் போனது.

இந்தக் குறைபாட்டை உடைய முகத்தை “பறவை முகம்” (Bird’s face) அல்லது “புறா முகம்” (Pigeon’s face) என்று குறிப்பிடுவோம். சிறுவர்கள் கீழே விழுந்து, முகவாய் அடிபடுவதால்தான் மூட்டுகளில் இந்தப் பாதிப்பு ஏற்படும். வாயும் திறக்க முடியாது. முகத்தின் வளர்ச்சியும் பாதிப்படையும். ஆனால், இந்தப் பையன் கீழேயும் விழவில்லை. பாரம்பரிய மூட்டுப் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பும் இல்லை. பின் மூட்டுகள் எப்படி இப்படி சிதைவடைந்தன என்பது என் மனதில் ஒரு பெரிய கேள்வியாக எழுந்தது. மீண்டும் அந்தப் பையன் மருத்துவக் குறிப்புகளை ஆய்வு செய்தேன். அந்த தீவிர ஆய்வின் காரணமாக அந்தக் குறைபாட்டிற்கான காரணத்தை என்னால் உணர முடிந்தது. மூட்டுச் சிதைவிற்கு வேறு எந்தச் காரணமும் இல்லாதபோது, ஒரே ஒரு காரணம்தான் இருக்க வாய்ப்பு. அந்தப் பையன் (பிரசவம் ஆகி) பிறந்த போது ஆயுதம் போட்டுத்தான் வெளியே எடுத்திருக்கிறார்கள். பொதுவாக அந்த ஆயுதத்தின் இரண்டு புற உறுப்புகளும் (Forceps Blades) குழந்தையின் முகத்தின் பக்கவாட்டில் பொருத்தித்தான் குழந்தையை வெளியே, பேறு காலத்தில் இழுப்பார்கள். மகப்பேறு மருத்துவர்கள் இந்த மருத்துவத்தை சிறப்பாகச் செய்வார்கள். கெட்ட வாய்ப்பாக இந்தக் குழந்தைக்கு முகத்தின் பக்கவாட்டில் போட்ட ஆயுதத்தின் உறுப்புகள் மூட்டுகள் இருந்த பகுதிகளை அழுத்தியுள்ளது. அதன் விளைவாக கீழ்த்தாடை மூட்டுகள் வளர்ச்சி மய்யங்கள் (Growth Centres) அடிபட்டுள்ளன. அந்த மூட்டுகள் முழுமையாக சிதைவடைந்து இருக்கக்கூடிய நிலை அந்தப் பையனுக்கு ஏற்பட் டுள்ளது. இது ஓர் அரிய நிகழ்வு. பொதுவாக எந்த ஆயுதப் பிரசவங்களிலும் இது நிகழாது. தீய வாய்ப்பாக சரவணன் என்கின்ற இந்தப் பையனுக்கு இதுபோல் ஆகியுள்ளது. வேறு எந்த முன் சிக்கல்களும், அடிபடுதல் போன்ற சிக்கல்களும் இல்லாத பொழுது, இதுபோன்ற நிலை அந்த சிறுவனுக்கு ஏற்பட ஒரே காரணம், மகப்பேறு நிகழ்ந்த பொழுது, ஆயுதங்களைப் பயன்படுத்தியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன்.

வழமைபோல் அந்தச் சிறுவனுக்கு முதலில் வாயைத் திறக்கும் மருத்துவம் செய்ய முடிவெடுத்தேன். நோயாளியை மருத்துவமனையில் சேர்த்தேன். வழமையான பரிசோதனைகள் செய்யப்பட்டன. அனைத்துப் பரிசோதனைகளும் சீராக இருந்தன. அறுவை மருத்துவத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. அந்த நாளும் வந்தது. வழக்கம் போல் மிகுந்த இடையூறுகளைக் கடந்து, மயக்குநர் மயக்க மருந்துக் குழாயை, மூச்சுக் குழாய்க்குள் செலுத்தி மயக்கம் கொடுத்தார். நோயாளி மயங்கியதும், அறுவை மருத்துவத்தைத் துவக்கினேன். காதின் முன்புறம் கீறல் போட்டு, ஒவ்வொரு பகுதியாக விலக்கி, நரம்புகள், இரத்தக் குழாய்களை நீக்கி, மூட்டு இருந்த பகுதிகளை அடைந்தேன். அங்கே இயல்பான அளவிலோ, அமைப்பிலோ மூட்டு இல்லை. வளர்ச்சி சிறிதும் இன்றி சிறுத்து, மூட்டு என்று கண்டறிய முடியாத நிலையிலே மூட்டு இருந்தது.

மண்டை ஓட்டோடு அது இணையாமல் தனியாகத்தான் இருந்தது. (அதனால்தான் நோயாளிக்கு ஓரளவு வாய் திறக்க முடிந்துள்ளது). நான் நினைத்தது போல்தான் பேறுகாலத்தின் போது, ஆயுதத்தால்தான் இந்த நிலை என்பது உறுதியானது. இந்த மாதிரி வளர்ச்சியடையாத மூட்டுகளை நீக்கிவிட்டு, செயற்கை மூட்டைப் பொருத்துவோம். நான் இருந்த சிறிய, அரசு மருத்துவமனையில் அந்த வசதிகள் இல்லாததால், மூட்டு மாற்று மருத்துவத்திற்குப் பதில், முகத்தில் மாற்றங்கள் செய்வது என்று முடிவெடுத்தேன். முகம் முழுவதும், கீழ்த்தாடையே இல்லாத நிலையில், வேறு இடத்திலிருந்து எலும்பை எடுத்து முகத்தில் பொருத்துவது என்று முடிவெடுத்தேன். அவ்வளவு பெரிய எலும்பு வேண்டுமென்றால் இடுப்பு எலும்பிலிருந்துதான் பகுதி எலும்பை எடுத்து முகத்தில் பொருத்த வேண்டும். அறுவை மருத்துவத்தை மீண்டும் ஒரு நாள் செய்ய முடிவு செய்து, மூட்டுகள் இருந்த பகுதியை மூடினேன்.

அடுத்தமுறை அறுவை மருத்துவத்திற்கு நாள் குறித்து, அறுவை மருத்துவம் செய்தோம். இடுப்பு எலும்பு பகுதியை திறந்து, 10 செ.மீ அளவுக்கு எலும்பை எடுத்து, முக எலும்பு இருந்த பகுதியில் வளர்ச்சியடையாத அந்த முக எலும்பின் மேல், இடுப்பு எலும்பைப் பொருத்தினேன். முகம் இயல்பாக மாறியதைப் பார்த்து, மகிழ்ந்து, அறுவை மருத்துவ காயத்தை மூடினேன். நோயாளி நலமடைந்தவுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். பெற்றோர்களுக்கு ஏக மகிழ்ச்சி, எனக்கும்தான். தங்கள் பையனை மீண்டும் படிக்க அனுப்புவதாக மகிழ்ச்சியோடு கூறி விடைபெற்றனர் அவனது பெற்றோர்கள்.

15 ஆண்டுகளுக்கு பின். சில மாதங்களுக்கு முன் சரவணனையும், அவன் பெற்றோர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 25 வயது வாலிபனாக “அழகான முகத்தோடு” என் முன் நின்றார் சரவணன். பட்டப் படிப்பு முடித்து, அரசுப் பணியில் இருப்பதாகவும், தன்னுடைய மறு வாழ்வுக்கு நானே காரணம் என்று நன்றியோடு குறிப்பிட்டார். சிறு வயதில் வளர்ச்சியடையாத முகத்தோடு இருந்தபொழுது எடுத்த நிழற்படத்தையும், அறுவை மருத்துவம் முடிந்த உடன் எடுத்த நிழற்படத்தையும் (கட்டுரையோடு உள்ள படங்கள்) அவரிடம் காண்பித்தேன். மனம் கொள்ளாத மகிழ்ச்சியோடு, மீண்டும், மீண்டும் நன்றியை சரவணனும், வயது முதிர்ந்த அவன் பெற்றோர்களும் கூறி விடைபெற்றனர்.

நன்றிகளுக்கு உரியவர்கள் தந்தை பெரியாரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களும்தான் என்ற நினைவுகளோடு அவர்களுக்கு விடை கொடுத்தேன்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *