சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025)

viduthalai
6 Min Read

‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (23)

பதினோராவது ஆண்டு

‘குடிஅரசு’ தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்தது. 11ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் எழுதப்பட்ட தலையங்கம்

நமது ‘குடிஅரசு’க்கு ஒன்பதாமாண்டு நிறைந்த பிறகு இப்போது இரண்டு வருஷம் கழித்து பதினோராவது ஆண்டில் பதினோராவது மாலையின் முதல் மலராக இவ்வார இதழ் ஆரம்பமாகின்றது.

இதுவும் இந்தப்படி மே மாத முதல் வாரத்திலேயே ஆரம்பமாகி இருக்க வேண்டியதானது பல காரணங்களால் தவறிவிட்டது. கூடிய சீக்கிரம் குடிஅரசின் பத்தாமாண்டு விழா நடத்த உத்தேசித்துள்ளோம். பத்தாவது ஆண்டிற்கும் ‘குடிஅரசு’ மாலையாய் இல்லாமல் “புரட்சி” மாலையாகவும், “பகுத்தறிவு” மாலையாகவும் வெளியாக்க வேண்டி ஏற்பட்டுவிட்டதால் அவ்விரண்டின் பேரால் உள்ள மலர்களை 10வது ஆண்டு மாலையாக வைத்துக் கொண்டு இப்போது குடிஅரசு பதினோராவது ஆண்டு மாலையாக இதைப் பிரசுரிக்கின்றோம்.

‘குடிஅரசு’ தோன்றிய காலம் முதல் நாளது வரை அது எப்படிப்பட்ட கொள்கையுடன் நிலவி வந்திருக்கின்றது என்பதைப் பற்றியும், குடிஅரசு இந்த பதினோராவது வருஷ காலத்தில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி வந்திருக்கின்றது என்பதைப் பற்றியும் வாசகர்களுக்கு ஞாபக மூட்ட வேண்டியதில்லை யென்று கருதுகிறோம்.

அது 1925 வருஷம் மே மாதம் 2ஆம் தேதியில் திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெஞ்ஞான சிவாச்சாரியார் சுவாமிகள் என்பவர்களால் துவக்க விழா செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் முதல் மாலை முதல் மலரில் –

“தேசம், தேசம் எனக் கூக்குரல் இடுவது நமது நோக்கமன்று.”

“மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும்.”

என்கின்ற இரு வாக்கியங்களையும் முக்கிய நோக்கமாகக் குறிப்பிட்டு அந்நோக்கம் நிறைவேற்றப்பட ‘குடிஅரசு’ தன்னாலியன்ற அளவு தன் முழு பலத்தையும் உபயோகித்துப் பாடுபட்டு வந்து இருக்கின்றது.

குடிஅரசின் ஆசிரியர் தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஒரு தீவிர பிரபல காங்கிரஸ் வாதியாயும் ஒத்துழையாமைவாதியாயும் இருந்தவர்.

அதற்கு சாட்சியம் என்னவென்றால், அவர் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கும், மாகாண காங்கிரஸ் வேலைக் கமிட்டிக்கும் பல வருஷங்கள் காரியதரிசியாகவும், தலைவராகவும் இருந்தார்.

காங்கிரசின் பேரால் பல முறை ஏ, பி, சி. வகுப்புப் பிரிவுகள் இல்லாத காலத்தில் சிறை சென்றார்.

அதோடு மாத்திரமல்லாமல் அவர் பேரில் ஏற்பட்ட பல ஜாதித் துவேஷ – வகுப்புத் துவேஷ கேசுகளிலெல்லாம் எதிர்வியாஜ்ஜியமாடாமல் விட்டு விடுவதோடு சர்க்கார் நீதியில் நம்பிக்கை இல்லை என்றும் சொன்னவர். தமிழ்நாட்டில் பல சத்தியாக்கிரகத்தையும், சட்ட மறுப்பையும், மறியல்களையும் நடத்தி பல நூற்றுக்கணக்கான தொண்டர்களைச் சிறைக்கனுப்பினார்.

தமிழ்நாடு காங்கிரசின் சார்பாய் இந்தியா முழுவதற்குமே முதல் முதல் கதர் ஸ்தாபனம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி அதற்கு பல வருஷம் தலைவராய் இருந்து தமிழ்நாட்டிலும், மலையாளத்திலும் பல கிளை ஸ்தாபனங்களையும் தன் கையால் திறந்து வைத்தார்.

இரவும் பகலும் வீட்டிலும் பிராயணத்திலும் ராட்டினமும் கையுமாகவே இருந்து சுற்றிச் சுற்றி, அதனால் கையில் வினை ஏற்பட்டு அதற்காக தோழர் காந்தியாரிடமிருந்து கொஞ்ச காலத்துக்கு ராட்டினம் சுற்ற வேண்டியதில்லை என்னும் விதி விலக்குப் பெற்றார். மாகாண காங்கிரஸ் மகாநாடுகளிலும், நூற்றுக்கணக்கான ஜில்லா, தாலுகா, கிராம காங்கிரஸ் மகாநாடுகளிலும் தலைமை வகித்திருக்கிறார்.

சர்க்காரால் 40, 50க்கு மேற்பட்ட 144 தடை உத்தரவுகள் பெற்றிருக்கிறார். காங்கிரஸ் ஸ்தாபனங்களாலும், ஸ்தல ஸ்தானங்களாகிய முனிசிபாலிட்டி, யூனியன், பஞ்சாயத்து ஆகியவைகளாலும் சுமார் 500க்கு மேற்பட்ட வரவேற்புகளும் பத்திரங்களும் பெற்றார்.

இம்மாதிரியான காங்கிரஸ் தொண்டில்தான் மாத்திரம் அல்லாமல், தனது மனைவியார், சகோதரியார், சகோதரர் முதலாகிய குடும்ப அங்கத்தினர்களும் காங்கிரசில் ஈடுபட்டு மறியல் முதலியவைகள் செய்து தோழர் காந்தியார் முதலியவர்களால் தனிப்பட்ட நற்சான்றிதழ்ப் பத்திரங்களும் பெற்றிருக்கிறார்.

இவ்வளவு மாத்திரமல்லாமல் தோழர் ராமசாமி அவர்கள் இன்றுள்ள தேச பக்தர்களுக்கு 100க்கு 90 பேர்களைப் போல தங்கள் பிழைப்புக்கு வேறு மார்க்கம் இல்லாமல் தேச பக்தியை வயிற்றுப் பிழைப்பு வியாபாரமாகக் கொண்டோ அல்லது பல வக்கீல்கள் டாக்டர் ஆகியவர்களைப் போல் தங்கள் தொழில் செல்வாக்குப் பெறுவதற்காக தேச பக்தியை ஒரு முதற்படியாய்க் கொண்டோ அல்லது தங்கள் தொழில்களில் முன்னேற்றமடைய  முடியாது என்று கருதி அதை விட்டுவிட்டு தேசபக்தியின் பேரால் விளம்பரமும் வாழ்வும் பெறலாம் என்றோ மற்றும் பலவித தனிப்பட்ட சுயநலத்தைக் கருதியோ காங்கிரசில் சேர்ந்தவர் அல்ல என்பதையும் பொது மக்கள் அறியத்தக்க இரண்டொரு உதாரணங்களையும் காட்டிவிட்டு மேல் செல்லுவோம்.

அதாவது தோழர் சி.ராஜகோபலாச்சாரியார் சேலம் முனிசிபல் சேர்மனாய் இருக்கும்போது தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஈரோடு முனிசிபல் சேர்மனாயும், கோவை ஜில்லா போர்டு மெம்பராயும் அரசாங்கத்திற்கு மிகமிக நல்ல பிள்ளையாயும் பட்டம், நற்சாட்சிப் பத்திரம் ஆகியவைகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டவராயும் இருந்தார்.

தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் சேலம் சேர்மென் பதவியை ராஜினாமா செய்தவுடன், தோழர் ஈ.வெ.ராமசாமி தனது முனிசிபல் சேர்மன் பதவி, ஜில்லா தாலுகா போர்டு மெம்பர்கள் பதவி முதலாகி யவைகளை ஒருங்கே ஒரே நாளில் ராஜிநாமா கொடுத்து விட்டவர்.

அக்காலத்தில் வருஷம் 1000 ரூபாய் இன்கம்டாக்ஸ் (வருமான) வரியாக சர்க்காருக்கு செலுத்தக்கூடிய லாபமுள்ள வியாபாரம் நடத்தி வந்தவர் என்பது மாத்திரமல்லாமல் அவரது வர்த்தகப் புகழையும், திறமையையும் அரசாங்கத்தார் மதித்ததற்கு அறிகுறியாய் முன் கூறப்பட்ட சேர்மென் முதலிய பதவிகளை ராஜிநாமா செய்த பிறகும்கூட அவருக்கு இந்த மகாண (இன்கம்டாக்ஸ்) வருமான வரி ஆபீஸ் உத்தியோகஸ்தரல்லாத விசாரணைக் கமிட்டியில் ஒருவராக இந்தியா கவர்ன்மெண்டாரால் நியமிக்கப்பட்டு அதற்கு தினம் 100 ரூ. படியும், இரட்டை முதல் வகுப்பு பிரயாணச் செலவும் பெற அனுமதிக்கப்பட்டவர்.

ஆகவே, இப்படிப்பட்ட நிலையில் இருந்த ‘குடிஅரசு’ ஆசிரியர் இந்த 10 வருஷ காலமாய் காங்கிரசையும், தேசபக்தக் கூட்டத்தையும் விட்டு விலகி தேசாபிமானப் பட்டத்தையும், தியாகமூர்த்திப் பட்டத்தையும் வெறுத்து இன்று அவற்றைத் தாக்கிப் பாமர மக்களிடையிலும், அரசாங்கத்தாரிடையிலும், அதிருப்தி பெற்று எதிர் நீச்சல் போன்ற கஷ்டமான தொண்டில் ஏன் ஈடுபட்டு இருக்கிறார்? என்பதை முதலில் வாசகர்கள் உணர வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.

என்னவெனில் முதலாவது:- இன்றும் நேற்றும் மாபெரும் தியாகி என்றும் பாரதமாதாவின் அருந்தவப் புதல்வரென்றும் மகா தீவிர வாதியென்றும் விளம்பரப்படுத்தப்பட்ட தோழர் வ.வே.சு. அய்யர் அவர்களால் காங்கிரஸ் நிதியைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘தேச பக்தி புகட்டும்’ ஆசிரமமாகிய சேரன்மாதேவி குருகுலத்தில் கற்பிக்கப் பட்ட ஜாதி வித்தியாசப் பிரிவுகளை ஆசிரமத்தைப் பொறுத்தவரை கூட ஒழிக்க சம்மதப்படாமலும், ஒழிக்கப்படவேண்டும் என்று காரியக் கமிட்டியில் பார்ப்பனரல்லாதார் ஓட்டு பலத்தைக் கொண்டு தீர்மானித்த வுடன் தோழர்கள் சி.ராஜகோபாலாச்சாரியார் டாக்டா டி.எஸ்.எஸ்.ராஜன், டாக்டர் டி.வி.சாஸ்திரியார், கே.சந்தானம், என்.எஸ்.வரதாச்சாரியார் முதலிய “சீர்திருத்தப்” பார்ப்பன தேச பக்தர்கள் ராஜிநாமா கொடுத்து கமிட்டியில் இருந்து விலகியதும், குருகுல ஆசிரமத்துக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்த தோழர் வரதராஜுலு அவர்கள் மீது சில பார்ப்பனர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்ததும் (அது நிறைவேற வில்லை), அதுபோலவே தோழர் ஈ.வெ.ராமசாமி பேரிலும் (அதற்கும் சிறிது நாள்களுக்கு முந்தியே தோழர் ஈ.வெ.ரா. மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவரானவுடன்) தோழர் வ.வே.சு. அய்யர் அவர்களால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதுமான காரியங்கள் (அதுவும் நிறைவேறவில்லை) ஒரு புறம் காங்கிரசு பார்ப்பனரிடம் அதிருப்தி ஏற்படச் செய்ததோடு, இரண்டாவதாக காஞ்சிபுரம் மாகாண (கான்பரன்ஸ்) மகாநாட்டில் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களால் கொண்டு வரப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை விஷயாலோசனைக் கமிட்டியிலும மகாநாட்டிலும் பிரேரேபிக்கவே அனுமதி தராமல் தலைவரின் தனி அதிகாரத்தின் கீழ் எதேச்சாதிகாரமாய் நிராகரிக்கப்பட்டதுமே முக்கியக் காரணமாகி அப்பொழுதே தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் அந்த மகாநாடு கூட்டத்திலிருந்து எழுந்து,

“காங்கிரசினால் பொது மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை உணர்ந்து விட்டேன்” என்றும்,

“இன்று முதல் ஜாதி ஒழிப்புக்கும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கும் நான் தனியே நின்று உழைக்கும் வேலையைக் கைக்கொள்ளப்போகிறேன்”  என்றும்,

“காங்கிரசின் யோக்கியதையையும், அதைக் கைப்பற்றி தங்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பார்ப்பனர்களுடையவும், அவர்களது அடிமைகளுடையவும், கூலிகளுடையவும் யோக்கியதையையும் பாமர மக்கள் உணரும்படி செய்வதையே எனது முக்கியத் தொண்டாகக் கொள்ளப் போகிறேன்.”

என்றும் சொல்லிவிட்டு சிலர் தோழர்களுடனும் பெருத்த கரகோஷத்துடனும் மகாநாட்டை விட்டு வெளியேறினார்.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *