திருவெறும்பூர், ஜூன்14- திரைத்துறையில் சாதித்த திராவிடர் இயக்கத் தலைவர்கள் என்ற தலைப்பில் திருவெறும்பூரில் பெரியார் பேசுகிறார் 8 ஆவது நிகழ்ச்சி 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.இர.அரசெழிலன் தலைமை வகித்தார். சி.பஞ்சலிங்கம் முன்னிலை ஏற்றார். சவு.சந்திரன் வரவேற்புரை வழங்கினார்.
“திராவிட இயக்க சினிமா” எனும் தலைப்பில் காரைக்குடி தோழர் குமரன்தாஸ் சிறப்புரை ஆற்றினார். கடந்த நூறு ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்கள் கடந்து வந்த பாதையை, நேர்த்தியாய் அணிவகுத்துக் கூறினார். ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் “விடுதலை வேட்கை” தொடர்பான திரைப்படங்கள் அதிகம் வந்ததாகக் கூறினார். அதுதொடர்பான படங்களின் பெயர்களையும் நினைவு கூர்ந்தார்.
அதேபோன்று தமிழ்த் திரைப்படங்களில் புராண, இதிகாசத்தை வலியுறுத்தி வந்த திரைப்படங்கள் குறித்தும் அழுத்தமாக எடுத்துக் கூறினார். படங்களின் வாயிலாக ஹிந்து மதம் தன்னை எப்படி வளர்த்துக் கொண்டது என்பதையும் குறிப்பிட்டார்.
இப்படிப் பல்வேறு கால கட்டங்களில் ஏதாவது ஒரு தத்துவம் அல்லது செய்திகள் திரைப்படங்களின் மூலம் கடத்தப்பட்டே வந்துள்ளது. தமிழ்நாட்டிற்குப் பொன்னான காலம் என்பது திராவிடர் இயக்கத் தலைவர்கள் திரைத்துறையில் ஈடுபட்டதே ஆகும் என்பதை அழகுற எடுத்துக் காட்டினார்.
ஒலி அமைப்பு இல்லாமல், மவுனப் படங்கள் வந்த போதே, சில சமூக எண்ணம் கொண்ட காட்சிகள் இடம்பெற்றன. பின்னாளில் ஒரு சில இயக்குநர்கள் முற்போக்கு வசனங்களைப் படங்களில் வைத்தனர். தொடர்ந்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, நடிகர்களில் எம்.ஆர்.இராதா, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.இராஜேந்திரன், எம்.ஜி.இராமச்சந்திரன் கே.ஆர்.இராமசாமி உள்ளிட்ட பலரும் முற்போக்குச் சார்ந்த வசனங்களைப் பேசத் தொடங்கினர்.
குறிப்பாக அதற்கு முன் சமஸ்கிருதம் கலந்த தமிழில் வசனங்கள் இருந்த நிலையில், திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் திரைத் துறையில் நுழைந்ததும் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. இனிய தமிழும், சிறப்பான உச்சரிப்பும் அதிகரித்தன. இப்படியான சூழலில் திராவிட இயக்கத் திரைப்படங்களின் பொற்காலம் என்பது கலைஞர் அவர்கள் வந்ததற்குப் பிறகு தான் அதிகரித்தது. பராசக்தி திரைப்படத்தில் இடம் பெற்ற நாத்திக வசனங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
திரைப்படத்தில் கதாநாயகர் பெயரைப் போடுவதற்கு முன்பே கதை – வசனம் கலைஞர் மு.கருணாநிதி என முக்கியத்துவம் கொடுத்துப் போடும் காலமாக மாறியது. பகுத்தறிவுக் கருத்துகள், புராண எதிர்ப்பு, பெண்ணுரிமைச் சிந்தனைகள், தமிழ்மொழியின் சிறப்புகள், ஹிந்தி திணிப்பு, கல்வியின் முக்கியத்துவம், பொதுவுடமைக் கருத்துகள், சமூக நீதி, இட ஒதுக்கீடு எனத் திராவிடர் இயக்கச் சிந்தனைகள் அனைத்துமே திரைத்துறையில் இடம்பெறத் தொடங்கின.
கலைஞர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அதற்குப் பின் வந்த படங்களிலும் தமிழ்நாட்டிற்கே உரிய முற்போக்குச் சார்ந்த காட்சிகளும், வசனங்களும் அதிகம் வெளி வரத் தொடங்கின. திராவிடர் இயக்க உணர்வோடு மிக அதிக காலம் திரைத்துறையில் பணியாற்றியவரும் கலைஞர் அவர்கள் தான்.
அதற்குப் பிறகான சில ஆண்டுகளில் திராவிட இயக்கச் சிந்தனைகள் சற்றுக் குறைவாகவே காணப்பட்டன. அவை மீண்டும் புத்தெழுச்சிப் பெற வேண்டும். அதேநேரம் இன்றைய கால கட்டத்தில் இளம் இயக்குநர்கள் பலர் மிகச் சிறப்பான தத்துவங்களை வெகுஜன மக்களை ஈர்க்கும் வகையிலும், சமூக மாற்றத்தைக் கொண்டு வரும் சூழலிலும் படங்களை எடுத்து வருகின்றனர். இது இன்னும் அதிகரிக்க வேண்டும். ஒரு கொள்கையை மக்களிடம் கொண்டு செல்லவும், சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும், கடந்த 100 ஆண்டுகளாகத் திரைத் துறையைப் பயன்படுத்தியவை திராவிட இயக்கங்களே”, எனத் தோழர் குமரன்தாஸ் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மு.சேகர், போ.ஜெகதீஸ்வரன், இரா.தமிழ்ச்சுடர், அ.சிவானந்தம், ஜீ.ராய் ராயன், ந.சபரி, செல்வம் முடியரசன், ம.பி.அனுராதா, பு.வி.கியூபா, க.புனிதா, சு.சாந்தி சு.அறிவுச்செல்வன், சு.அன்புச்செல்வன், மேக்னா, ப.கவு.யாழினி, சி.ஆ.கயல், ம.சங்கிலிமுத்து, ரெ.காமராஜ், ச.கணேசன், ம.ஆறுமுகம், ஆ.அறிவுச்சுடர், விசயராகவன், வி.சி.வில்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை வெ.ரூபியா ஒருங்கிணைக்க, தோழர் பாண்டிக்குமார் நன்றி கூறினார்.