ஆக்ரா, ஜூன் 9- உ.பி. கோயிலில் குரங்கு தூக்கி சென்ற பெண் பக்தரின் கைப்பையை, 8 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ளது பிருந்தாவன் பங்கி பிகாரி கோயில். பிருந்தாவன் நகரில் அமைந்துள்ள இக்கோயிலில் ராதாகிருஷ்ணர் மூலவராம்.
இக்கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். அலிகாரை சேர்ந்த அபிஷேக் அகர்வால் என்பவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 5ஆம் தேதி பங்கி பிகாரி கோயிலுக்கு வந்தார். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அனைவரும் கோயிலில் இருந்து வெளியில் வந்தனர்.
அப்போது எங்கிருந்தோ திடீரென வந்த குரங்கு ஒன்று, அபிஷேக் மனைவி வைத்திருந்த கைப்பையை பிடுங்கிக் கொண்டு ஓடியது. அதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் வைர நெக்லஸ் உட்பட ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் இருந்தன. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உள்ளூர் மக்களும் காவல்துறையினரும் விரைந்து வந்து குரங்கை தேட ஆரம்பித்தனர். அதற்குள் அந்த குரங்கு மரத்துக்கு மரம் தாவி சென்று விட்டது.
அதன்பின், காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். ஒரு குழுவினர் குரங்கு சென்ற பகுதிகளில் தேட ஆரம்பித்தனர். சுமார் 8 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அபிஷேக் மனைவியின் கைப்பை, ஒரு புதரில் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பையை மீட்டு அபிஷேக்கிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இத்தகவலை மதுரா டிஎஸ்பி சதார் சந்தீப் குமார் சிங் தெரிவித்தார்.
பிருந்தாவன் கோயிலில் இதுபோல் நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2015ஆம் ஆண்டு மும்பை பெண் ஒருவரிடம் இருந்த கைப்பையை குரங்கு ஒன்று பிடுங்கி சென்றது. பையில் என்ன இருக்கிறது என்று அந்த குரங்கு புரட்டி புரட்டி பார்த்தது. அப்போது பையில் இருந்த ரூ.1.5 லட்சம் பணம் அங்கிருந்த பக்தர்கள் மீது கொட்டியது குறிப்பிடத்தக்கது.