ஆந்திராவின் திருப்பதி கோவிலின் ‘லட்டு பிரசாதம்’ தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக பெரும் பிரச்சினை கடந்த ஆண்டு கிளம்பியது; இதற்காக துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திருப்பதி படிகளில் உருண்டே கோவிலுக்குச் சென்றார்.
இந்த நிலையில் திருப்பதி லட்டுவிற்கான நெய் என்ற பெயரில் வேதிப்பொருள் கலந்த தாவரஎண்ணெய்யை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நெய்யை அனுப்பியது உத்தரப் பிரதேசம் போலே பாபா என்ற பெயரில் இயங்கிவரும் சாமியாரின் நிறுவனம் ஆகும்.
இந்தச்சாமியாரின் கால் தட மண்ணை எடுக்கச்சென்று 200க்கும் மேற்பட்டோர் கடந்த ஆண்டு மரணமடைந்தனர். இவ்வளவு பேர். மரணமடைந்தும் சாமியார் மீது எப்.அய்.ஆர். கூடப் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கலப்பட நெய் தொடர்பாக சிபிஅய் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நெய்க்குப் பதில் ரசாயனம் கலந்த தாவர எண்ணெய்யை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கியது என்பது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த போலே பாபா நிறுவனம் சிபிஅய் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
தேவஸ்தானத்தில் போலே பாபா டெய்ரி நிறுவனம் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதால் நேரடியாக ஒப்பந்தம் பெற முடியாமல், ஏ.ஆர்.டெய்ரி என்ற பெயரை பயன்படுத்தி மோசடியாக ஒப்பந்தம் பெற்று விநியோகித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான குற்றச்சாட்டில் சிபிஅய் தொடர்புடையவர்களைக் கைது செய்துள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பிணை வழங்க சி.பி.அய். நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் உணவாக உண்ணும் ஒரு பொருளில் ரசாயனம் கலந்து விற்றுள்ளது சாமியார் போலாபாபா நிறுவனம் என்று தெரிந்த பிறகும் சி.பி.அய். சாமியார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த நிறுவனத்தின் மீது மட்டும் பெயரளவிற்கு வழக்குப் பதிவு செய்துள்ளது.
எப்படி இருக்கிறது இவர்களின் யோக்கியதை? சாமியார் என்பதால் மோசடிப் பேர் வழி மீது வழக்கில்லை – இதுதான் காவி ஆட்சியான பா.ஜ.க.வின் ‘தனித்தன்மை!’
ராம்தேவ் என்ற சாமியார் ஒருவர் டில்லி உத்தரப்பிரதேசங்களில் கொடி கட்டி ஆள்கிறார். ஏதோ மருத்துவக் கல்லூரியில் படித்து ஆய்வு செய்து பெரும் பட்டங்களை எல்லாம் சுமந்தவர் போல விதவிதமான மருந்துகளை விற்பனை செய்தார்.
இந்தியா முழுமையும் கிளைகள் என்பது கூடுதல் பிரதாபம். வருமானவரி பாக்கி வழக்கும் இவர்மீது உண்டு.இவை எல்லாம் என்னாயிற்று என்றே தெரியவில்லை.
இப்பொழுது திருப்பதி வெங்கடாசலபதிக்கு நெய் வியாபாரத்தில் நாமம். நாமதாரிக் கடவுளுக்கே நாமம் சாத்துகிறார்கள்.
நாத்திகவாதிகளை விட ஆத்திகர்களுக்குத்தான் கடவுளாவது – கத்தரிக்காயாவது என்பது மிக நன்றாகவே தெரியும்.
கடவுள், மதம் என்று வந்துவிட்டால், அவ்வளவுதான் – பேச்சு, மூச்சு இருக்காது! சட்டம் இறுக்கிக் கண்களை மூடிக் கொள்ளும்.
சி.பி.அய்., சி.பி.அய். என்று உச்சாணிக் கொம்பில் வைத்துப் பேசுவார்கள். அந்த
சி.பி.அய். இந்த மோசடிமீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?
உணவுப் பொருளில் ரசாயனம் கலப்பது என்பது – மக்களின் உயிரோடு விளையாடுவது ஆகாதா? கடவுள் சக்தியின் யோக்கியதை – சாமியார்களின் யோக்கியதை – மதப் போதை ஏறிய அரசு – இவையெல்லாம் கூட்டணி வைத்தால் இதுவும் நடக்கும் – இதற்கு மேலும் நடக்கும் – அப்படித்தானே! எச்சரிக்கை! எச்சரிக்கை!!