தொழிலாளர்களும் மக்கள் கடமையும் இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது?

2 Min Read

நமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த சமயமெல்லாம் ஒரே ஒரு விஷயத்தை விடாமல் வற்புறுத்தி வந்திருக்கிறோம். அதாவது தொழிலாளிகள் என்போர்கள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது என்றும் அரசியலில் உழைக்கிறவர்கள் என்பவர்களைத் தொழிலாளர் சங்கத்தில் தலைவர்களாக்கிக் கொள்ளக்கூடாது என்பதைப் பற்றியும் தொழிலாளர்களுக்குத் தனியாக தொழிற் கட்சி என்பதாக ஒரு கட்சி அரசியல் தத்துவத்தோடு இருக்கவேண்டும் என்றும் எவ்வளவோ தடவை வெகு அழுத்தமாக வற்புறுத்தி வந்திருக்கிறோம். இவ்வலியுறுத்தலுக்கு நாகைத் தொழிலாளர் சங்கத்தவரே கொஞ்சம் காது கொடுத்து வந்தனர். மற்றபடி மற்றத் தொழிலாளர்களும் தொழிலாளர் களுக்குத்  தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல அரசியல் வாழ்வுக் காரர்களும் நம்மீது பாய்ந்து வந்தனர்.

ஆனால் இப்போது தொழிலாளர்கள் விஷயத்தில் மிகுதியும் அறிவுள்ளவர் என்று சொல்லும் ஸ்ரீமான் ஜோஷி முதல் கொண்டு அதையே சொல்ல ஆரம்பித்து விட்டனர். அதாவது சென்னையில் கூடின தொழிலாளர் மகாநாட்டுத் தலைவரான ஸ்ரீஜோஷி “ஓர் அரசியல் கட்சியிலும் தொழிலாளர் சேரக்கூடாது” என்றார். தொழிலாள சகோதரர்களுக்கும் ஏறக்குறைய இந்த உணர்ச்சி தோன்றி வருகிறதையும் பார்க்கிறோம். தவிர, அரசியல் வாழ்வுக்காரரை நம்பக் கூடாது என்று நாம் அதே வேலையாகச் சொல்லி வருவதற்குத் தக்க சான்று இவ் வருஷத்திய சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தல்களில் தொழிலாளர்கள் விஷயத்திலும் அரசியல் புரட்டர்கள் காட்டி விட்டார்கள். தொழிலாளர்கள் காங்கிரசில் சேர வேண்டும். தொழிலாளர்களுக்காக காங்கிரசுதான் உழைத்து வருகிறது என்று சொல்லி இதுவரை தொழிலாளர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பதவி பெற்று வந்த ஆசாமிகள் இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு ஒரு தொழி லாளரே பிரதிநிதியாக இருக்கிறோம் என்பதாக எண்ணி கார்ப்பரேஷன் கவுன் சிலர் ஸ்தானத்திற்கு ஒரு தொழிலாளி நின்றவுடன் அவரை ஒழிக்க காங்கிரஸ் காரர்கள் என்போர்கள் என்ன என்னவோ புரட்டுகள் எல்லாம் செய்து தொழி லாளருக்குத் தனிப் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப் பார்க்கிறார்கள்.

ஏன்? தொழிலாளர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு இனிப்பிழைக்க முடியாமல் போய்விடுமே முதலாளிகளை ஏமாற்றி வயிறு வளர்க்க முடியாமல் போய்விடுமே என்கிற பயம்தான். எவ்வளவுதான் அரசியல் வாழ்வுக் காரர்களின் அயோக்கியத் தனங்களைத் தொழிலாளர்கள் பார்த்து அறிந்து வந்தாலும் அப்பொழுதும் சில தொழிலாளர்களுக்குப் புத்தி ஏமாந்து போவதையும் நாம் பார்த்து வந்திருக்கிறோம். இதுவரை எப்படி நடந்து வந்திருந்தாலும், இந்தத் தடவையாவது கண்டிப்பாய் அரசியல் அயோக்கியர்கள் வலையில் மாய்கையில் சிக்கி ஏமாந்து போகாமல், தொழிலாளிகளிடம் அனுதாபமுள்ள மக்கள் ஒவ்வொரு வரும் தொழிலாளர்களால் நிறுத்தப்பட்ட தொழிலாள அபேட்சகருக்கே ஓட்டுக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது?

– குடிஅரசு – கட்டுரை – 31.07.1927

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *