பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தின் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த செய்தி ஜூன் 4ஆம் தேதி இரவில் இருந்தே அனைத்து தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருந்தது.
மிகவும் துயரமான காட்சிகள். ஆனால், இது தொடர்கதை என்று பலருக்குத் தெரியாது.
இந்த ஆண்டு மட்டும் குறைந்தபட்சம் 100 பேர் கூட்ட நெரிசலில் இறந்துள்ளனர். இந்த நூறு என்பது அரசு கொடுத்தது. நேரடி சாட்சிகளின் பதிவுகளின்படி 400 அய்த் தாண்டும்.
பைசாவிற்கும் பயனில்லை
இந்தியர்கள் சமீப ஆண்டுகளாக தங்களின் பொன்னான நேரங்களை பைசாவிற்கும் பயனில்லாத காரணங்களுக்காக தெரிந்தே தேவையற்று செலவிடுகிறார்கள். இதனால் மிஞ்சுவது பெரும் உயிரிழப்புகள் உயிரிழந்த குடும்பத்தில் துயரங்களின் வடுக்கள் மட்டுமே.
மவுனி அமாவாசையில்…
ஜனவரி மாதம் கும்பமேளாவில் ‘மவுனி அமாவாசா குளியல்’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் ஆற்றை நோக்கி குளியல் போட ஓடிய கூட்டத்தில் சிக்கி 38 பேர் இறந்ததாக உத்தரப் பிரதேச அரசு கூறியது.
ஆனால், நேரடி சாட்சிகள் குறைந்த பட்சம் நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்கள் கொண்டு செல்லப்பட்டதாக கூறினர். ஆனால் அதற்கான சான்றுகள் தரப்படவில்லை.
டில்லி ரயில் நிலையம்
பிப்ரவரி மாதம் டில்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவிற்கு செல்ல காத்திருந்த கூட்டம் திடிரென ரயில் வேறு நடைமேடைக்கு வருவதாக அறிவிப்பு வர அந்த நடைமேடைக்குச் செல்லும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் இறந்தனர்.
ஹத்ரஸ்
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச ஹத்ரஸ் என்ற இடத்தில் சாமியார் ஒருவரின் காலடி மண்ணை எடுக்க ஓடிய கூட்டத்தில் மிதிபட்டு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெண்கள், குழந்தைகள் அதிகம். பட்டியல் போட்டுகொண்டே செல்லலாம் ஆனால் இந்த நெரிசல் இறப்புகளை தடுக்க முடியுமா என்றால் நிர்வாகம் மனதுவைத்தால் முடியும் என்கிறார்கள் , பிரெஞ்சு மற்றும் ஸ்பானிய ஆராய்ச்சியாளர்கள்.
கூட்ட நெரிசல்: எப்படி காப்பது?
‘த நேச்சர்’ என்ற ஆய்வு இதழில் கூட்ட நெரிசலில் இருந்து மக்களைக் காப்பது எப்படி என்ற ஒரு விரிவான கட்டுரை இடம் பெற்றுள்ளது.
இது உலகம் முழுவதும் நடக்கும் பெரும் கூட்ட விழாக்களில் எடுக்கபட்ட வீடியோக்களை ஆய்வு செய்கிறது. எந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும் அதை எப்படி தடுக்கலாம், கூட்ட நெரிசல் ஏற்படுவதை முன்கூட்டியே சரியாக அடையாளம் காண்பது மற்றும் ட்ரோன்கள் மற்றும் சிசிடிவிகள் மூலம் கண்காணிப்பது போன்றவற்றின் மூலம் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று அது கூறுகிறது.
பிப்ரவரி மாதம், ஸ்பெயினின் சான் ஃபெர்மின் விழாவின் காட்சிப் பதிவுகளை பகுப்பாய்வு செய்தார்கள்.
இந்த விழாவில் சாலைகளில் காளைகளை ஓட விடுவார்கள். வீதிகளில் காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் மற்றும் அதைக்கான பெருங்கூட்டம் கூடும்.
கூட்டத்தின் அடர்த்தி ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும்போது, தன்னிச்சையான மற்றும் தாள அலை வடிவங்கள் தோன்றுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதை ‘கூட்டு அலைவு’ (collective oscillation) என்று அழைக்கிறார்கள், கூட்டம் தானாகவே ஒழுங்கமைந்து, தன்னிச்சையான பெரிய அளவிலான, அலை போன்ற வடிவங்களை உருவாக்கத் தொடங்கியது. இந்த அலை உருவாக்கம் தெரிந்த உடனேயே பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக களத்தில் இறங்கி மக்களை பதட்டமிட்டாமல் அப்புறப்படுத்தும் அறிவிப்பை விடவேண்டும். மேலும் மக்கள் கூட்டம் கலைந்துசெல்ல தடுப்புகளை அகற்றவேண்டும், இதனால் அடர்த்தி உடனடியாக குறைந்து நெரிசலில் மக்கள் சிக்காமல் சென்றுவிடுவார்கள் என்கிறது அந்த ஆய்வு.
ஆய்வு
‘தி நியூயார்க் டைம்ஸ்’ (The New York Times) பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில், பிரான்சைச் சேர்ந்த இயற்பியலாளர் டாக்டர். டெனிஸ் பார்டோலோ, கூறும் போது கூட்டத்தின் இயக்கத்தைப் படமாக்க மைதானம் முழுவதும் பல கேமராக்களை வைத்தார்.
ஆரம்பத்தில், அது “சீரற்ற, குழப்பமான, கொந்தளிப்பான” ஒன்றாகத் தோன்றியது. அவரது குழுவும் திரவ இயக்கவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி “பொருளின் திசை மற்றும் வேகத்தைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் அதன் ஓட்டத்தை அளவிட” பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக மீன் தொட்டியின் மேற்பகுதியில் ஏற்படும் அலை அமைப்புகள் சில நேரங்களில் அதிகரித்துப் போகும் போது தொட்டியை விட்டு நீர் வெளியே சிதறும் இதேபோன்ற சுற்றுப்பாதை அசைவுகள் மைதானத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்டால் உடனடியாக செயல்பட்டு அதனை கட்டுப்படுத்த மக்களை அவசரப்படாமல் கலைந்துசெல்ல அறிவுரை கூறவேண்டும்
2010இல் ஜெர்மனியின் டுயிஸ்பர்க்கில் நடந்த விழா ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆபத்து உருவாகும் சில வினாடிகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது.
மக்கள் ஒரு குறிப்பிட்ட அடர்த்திக்கு மேல் இருக்கும்போது, இந்த அலைவுகள் எந்த வெளிப்புற வழிகாட்டுதலும் இல்லாமல் தானாகவே தோன்றுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த அலைவுகள், ஒருவரை ஒருவர் தள்ளுதல், வேகமாக நடக்க முற்படுதல் வேறு ஒரு திசையில் உடனடியாக செல்ல எத்தனித்தல் போன்ற மக்களின் தன்னிச்சையான செயல்களால் ஏற்படுகின்றன.
பெங்களூருவில் கூட்ட நெரிசலின் போது பலர் எதிர்திசையில் செல்ல முற்பட்டனர். அதாவது சரியான வழிகாட்டுதலோ அல்லது கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்கும் எந்த ஒரு பயிற்சியும் அவர்களிடம் இல்லை. இதனால் மீன் தொட்டி நீர் அலை வெளியே சிதறுதல் போன்று திடீர் மாற்றங்கள் ஏற்பட உயிரிழப்புகள் நிகழ்ந்தன.
டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் முன்னால் உள்ளவர்கள் மெதுவாக செல்ல திடீரென்று பின்னால் உள்ளவர்கள் வேகமாக வந்ததால் ஏற்பட்ட விளைவுகள்.
எதிர் எதிர் திசையில்…
கும்பமேளாவில் எதிர் எதிர் திசையில் வந்தவர்கள் ஒன்றோடு ஒன்று மோதிகொண்டனர். ‘மவுனி அமாவாசை’ அன்று குளிக்க ஒருபெருங்கூட்டம் ஆற்றை நோக்கி ஓடியது, ஏற்கெனவே குளித்துவிட்டு திரும்பிக்கொண்டு இருந்த கூட்டம் எதிர் எதிர் திசையில் சிக்கி நசுங்கி உயிரிவிட்டனர்.
இது போன்ற மக்கள் கூட்ட அலைவுகள் எங்கிருந்து, எப்போது தொடங்குகின்றன என்பதை வரைபடமாக்குவதன் மூலம், பெரிய நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்கள், ட்ரோன்கள் அல்லது சிசிடிவிகள் போன்ற கண்காணிப்பு கருவிகளைப் பயன்படுத்தி ஒரு பேரழிவு நடப்பதற்கு முன்பு கூட்டத்தில் உள்ள பகுதிகளை அடையாளம் காணலாம். இந்த கூட்ட அலைகள் கண்டறியப்பட்டால், சரியான நடவடிக்கை எடுத்து கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலைகளைத் தடுக்கலாம்.
எடுத்துக்காட்டு: மாரத்தான்
மாரத்தான் நிகழ்வுகளில் கூட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்றால் அங்கு ஓட்டப்பந்தய வீரர்கள் ஒரே திசையில் நகர்கிறார்கள். அனைவரும் ஒரு குறிப்பிட்ட வேக அளவோடு முன்னோக்கி நகர்கின்றனர். இது திட்டமிடப்பட்ட ஒன்று ஆகும். இது மிகவும் முக்கியமான மற்றும் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் ஆகும்.
நீரில் ஏற்படும் அலைகளைப் போலவே, கூட்டத்தில் அலை போன்ற வடிவங்கள் ஆரம்ப ஒரே மாதிரிதோன்றி பின்னர் தன்னிச்சையாக வேக வடிவங்கள் உருவாகின்றன என்பதை நாம் மிகத் தெளிவாகக் கவனிக்க முடியும்” என்று இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை கூறியது.
சரியான முன் ஏற்பாடு
குறிப்பாக கூட்டம் அதிகம் கூடும் என்ற தெரிந்த முன்னேற்பாடாக நெரிசலான பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு மக்கள் கூடுவதை தடுக்கலாம், மேலும் சாலைகளில் தடுப்புகள் வைத்து மக்களை திசை மாற்ற நினைப்பது அதிக கூட்ட நேரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கும்பமேளாவில் இதுதான் நடந்தது. இனி வரும் காலங்களில் கூட்ட நெரிசல் பகுதிகளை அறிவியல் நோக்கோடு அனுகி மக்களைக் காப்பது நிர்வாகத்தின் கடமை. இனிமேலாவது இதுபோன்ற நெரிசலில் மக்கள் உயிரிழப்பை அறிவியல்பூர்வமான முறையில் தடுக்க அரசுகள் முன்வரவேண்டும் இல்லை யென்றால் அடுத்த கூட்ட நெரிசலில் மீண்டும் மறுநாள் காலை இறப்பு செய்திகளால் நாளிதழ்கள் நிரம்பி வழியும்.