சென்னை, ஜூன் 6 வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன்
சென்னை உயர் நீதிமன்றத்தில் 12-ஆவது இடத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகி்த்த ஆர்எம்டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவர் அய்க்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் ஏற்பாட்டில் புதுடில்லியில் நடைபெற்ற எச்அய்வி பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சட்டப் பாதுகாப்பு குறித்த தேசிய கருத்தரங்குக்கு தலைமை வகித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணிக்காலத்தில் மொத்தம் 23,243 வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார்.
முக்கிய தீர்ப்புகள்: குறிப்பாக தங்களது பிள்ளைகளின் பெயர்களில் சொத்துகளை எழுதி வைத்து விட்டு முதியோர் இல்லங்களில் நாட்களை எண்ணி ஏமாந்த பெற்றோருக்கு ஆறுதலாக, இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவாய் கோட்டாட்சியரே அந்த தானப் பத்திரங்களை ரத்து செய்யலாம் என்ற இவரது தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு அருமருந்து.
அதேபோல ஜீவனாம்ச வழக்குகளில் கணவன் மார்களை நிராயுதபாணியாக விட்டுவிடக்கூடாது என்றும், கணவரின் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே மனைவி, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பும் முக்கியமானது.
இதேபோல சரியாக படிக்கவில்லை என திட்டியதால் மனமுடைந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதற்காக ஆசிரியர்களை பலிகடாவாக ஆக்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளார். இப்படி சமுதாயத்தில் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்காகவும், கல்வியாளர்களுக்காகவும் பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் என்பது குறி்ப்பிடத்தக்கது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான
நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு
சென்னை, ஜூன் 6 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 90 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மை தேர்வு ஜூன் 15ல் நடைபெற உள்ளது. துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 7 பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு அறிவிப்பு மார்ச் 28இல் வெளியானது.