புதுடில்லி, ஜூன் 4– திட்டுவது என்பது தற்கொலைக்கு தூண்டுதல் ஆகாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
திட்டியதால் தற்கொலை
தமிழ்நாட்டை சேர்ந்த பள்ளி நிர்வாகி ஒருவர், அந்த பள்ளியின் விடுதிக்கும் காப்பாளராக இருந்துள்ளார்.
விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவர் தவறு செய்ததால், மற்றொரு மாணவர் அந்த காப்பாளரிடம் புகாரளித்தார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட அந்த மாணவரை அழைத்து விடுதி காப்பாளர் திட்டினார்.
இதனால் மனமுடைந்த அந்த மாணவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வழக்கு
இது தொடர்பாக அந்த விடுதிக்காப்பாளர் மீது, மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே அந்த விடுதி காப்பாளர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, பிரசாந்த் குமார் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.
உத்தரவு ரத்து
பின்னர் விடுதி காப்பாளர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறுகையில், ‘திட்டுவது என்பது தற்கொலைக்கு தூண்டுதல் ஆகாது’ என தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு குறித்து அவர்கள் கூறும்போது, ‘இந்த விவகாரத்தை முழுமையாக பரிசீலித்தபோது, இதில் தலையிடுவதற்கான காரணம் உள்ளது. ஒரு திட்டுதல் அதுவும் மற்றொரு மாணவரின் புகாரின் பேரில் நடந்த இந்த திட்டுதல், இதைப்போன்ற ஒரு துயரத்தில் முடியும் என்பதை எந்த சாதாரண நபரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது’ என்று கூறினர்.
தனிப்பட்ட பகை இல்லை
தற்கொலை செய்து கொண்டவருக்கு எதிரான மற்றொரு மாணவரின் புகாரில், அவரை திட்டியது மிகக்குறைந்த நடவடிக்கை என்று கூறிய நீதிபதிகள். அதன் மூலம் புகாருக்கு நிவாரண நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இத்தகைய நிலைப்பாட்டின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர் (விடுதி நிர்வாகி) மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.
முன்னதாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் மீண்டும் அது போன்ற தவறு செய்யாமல் இருப்பதற்காகவும், விடுதியில் அமைதி ஏற்படுவதற்காகவுமே அவரை நிர்வாகி திட்டியதாக அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் இருவருக்கும் இடையே எந்தவித தனிப்பட்ட பகையும் இல்லை என்பதையும் எடுத்துக் கூறினார்.