சுயமரியாதை இயக்கம்
உலகத்தில் உயிரையுங்கூட கொடுத்துப் பெறவேண்டியதாக அவ்வளவு மதிப்பும் விலையும் பெறுமானமுமுள்ளது சுயமரியாதையேயாகும் என்றாலும் – சிலரால், தங்களுக்கு அவ்வார்த்தையே பிடிக்கவில்லை என்றும்; சிலரால், ஜஸ்டிஸ் கட்சி இருக்கும்போது சுயமரியாதை இயக்கம் ஒன்றுதனியாக எதற்கென்றும்; மதத்திலும், மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியிலும் கை வைப்பது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும்; சுய மரியாதை இயக்கத்தால் நாஸ்திகம் பரவுவதாகவும், அரசியல் கெட்டுப்போனதாகவும், தேசியம் தடைப்படுவதாகவும் இன்னும் பல மாதிரியாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.
இவற்றிற்கு நமக்குத் தோன்றிய பதிலைச் சொல்ல ஆசைப்படுகிறோம்.
ஒரு இயக்கத்திற்கு ஒரு பெயரை எதற்காக இடுவது என்றும், அது காதுக்கினிமையாக இருப்பதற்காகவா, அல்லது இயக்கத்தின் தத்துவத்திற்காகவா என்றும் கேட்கின்றோம். ‘சுயமரியாதை இயக்கம் என்றால், சுயமரியாதை இல்லாதவர்களின் இயக்கம் என்று பிறர் கருதமாட்டார்களா?’ என்கின்றார்கள். அப்படியானால், நாம் அவர்களை, சன்மார்க்க இயக்கம் என்றால் அது துன்மார்க்கர்களுடைய இயக்கமாகிவிடுமா? ஜீவகாருண்ய இயக்கம் என்றால் அது ஜீவகாருண்யமில்லாத சகாப்புக் கடைக்காரர்கள் இயக்கமென்றாகிவிடுமா! சைவ சித்தாந்த இயக்கம் என்பது அசைவர்கள் கூட்டமாகி விடுமா? அதுபோலவே, ஜஸ்டிஸ் இயக்கம் என்பது ‘இன்ஜஸ்டீஸ்’காரர்கள் இயக்கம் என்றாகிவிடுமா? என்று கேட்கின்றோம். ஒருசமயம் அப்படியே அர்த்தமாகிவிடும் என்று சொல்வதானாலும்கூட, சுயமரியாதை இயக்கம் என்பதற்குப் பொருள் – ‘சுயமரியாதை இல்லாதவர்கள், அதை அடைய ஏற்படுத்திக்கொண்ட இயக்கம்’ என்பது நமக்கு ஆட்சேபனை இல்லை என்றே சொல்லுவோம்.
இதற்கு உதாரணம், முதலாவது, சுயமரியாதை இயக்கம் என்கின்ற பெயர் பிடிக்க வில்லை என்று சொல்லுகின்றவர்கள் தங்களையே-அதாவது, தங்கள் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்து, ‘உனக்கு சுயமரியாதை இருக்கின்றதா?” என்பதாக ஒரு கேள்வி கேட்டுக்கொண்டு, தனது உருவம், நடை, உடை, குறி, கொள்கை இவைகளை வெளிப் பார்வையிலும்; தனது எண்ணம், நம்பிக்கை, தான் நடந்துகொண்டமுறை, நடத்து கொள்ள இருக்கின்ற கருத்து ஆகியவைகளை உள்ளுக்குள்ளாகவும்; தான் கட்டுப்பட் டிருக்கும் ஆட்சி, நான் பின்பற்றி வரும் மதம், மத உணர்ச்சி, மதச் சடங்கு, மதக் கொள்கை ஆகியவைகளை அனுபோகத்தைக் கொண்டும்; மற்றும் தங்களைப்பற்றி மற்றவர்கள் என்ன பேசிக்கொள்ளுகின்றார்கள் என்பதையும் சற்று யோசித்துப் பார்த்தால் எவ்வளவோ மோசமானவர்களாகவும் எவ்வளவோ சுயநலக்காரர்களாகவும் இருப்பவர்களுக்கூட தங்களின் சுயமரியாதையற்ற தன்மை-சூரிய வெளிச்சம் போல் விளங்காமல் போகாது என்றே நினைக்கின்றோம்.
மற்றும், ஜஸ்டிஸ் கட்சி இருக்கும்போது இது எதற்கு? என்பவர்கள் ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் 10 வருடகாலமாய் விளைந்து வந்த உணர்ச்சிகளையும் சுயமரியாதைக் கிளர்ச்சியில் இந்த இரண்டு வருடத்தில் விளைந்த உணர்ச்சியையும் கவனித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
சமீபகால வரை, ஜஸ்டிஸ் கட்சி அரசியலில் மாத்திரம் மிதவாதம், அமிதவாதம் என்கின்ற முறையில் மிதவாதிகளின் கொள்கைகள் என்பனவற்றைப் பின்பற்றிக்கொண்டு, பார்ப்பனரிடமிருந்து உத்தியோகங்களைப் பிடுங்கி எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் வேலையில் மாத்திரம் ஒருவாறு வெற்றிபெற்று வந்ததே ஒழிய, மற்றவைகளில் தாராளமாய் முன்னேற முடியாதபடி தடைப்படுத்தப்பட்டே வந்திருந்தது. சுருக்கமாகச் சொல்லப் போனால், பார்ப்பனரல்லாதார் என்கின்ற ஒரு குறிப்பிடத்தகுந்த சமூகம் தமிழ்நாட்டில் இருக்கும் சங்கதியே வெளி மாகாணங்களுக்குத் தெரிய முடியாமல் இருந்தது என்றும், கொஞ்ச நஞ்சம் தெரிந்தாலும் அது தேசத் துரோகிகள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என்று கருதும்படியாகச் செய்துவந்த எதிரிகளைச் சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததும் யாரும் மறுக்க முடியாது.
உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றிவிட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும், மற்றும் மத இயலையும் தானாகவே சரிப் படுத்திக்கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு; அரசியல் வேறு; தேசியம் வேறு; மத இயல் வேறு; ஒழுக்க இயல் வேறு: அன்பு இயல் வேறு என்கின்ற பாகுபாடுகளும் பிரிவுகளும் கண்டிப்பாய் மறைந்தோடி விடும்.
அன்றியும், அரசாங்கத்தாராலும் இது ஒரு தனி வகுப்புவாதக் கட்சியென்று மாத்திரம் மதிக்கப்பட்டு, அவர்களால் தங்கள் சுயநலத்திற்காக இது உபயோகப்படுத் தப்பட்டு வருவதாகவே கருதியும் வந்திருந்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் இதே ஜஸ்டிஸ் கட்சியை மதிக்கின்றார்கள் என்பதற்கும். அதற்கு எவ்வளவு கட்டுப்பட்டு இருக்கின்றார்கள் என்பதற்கும், இது வெளி மாகாணங்களில் எவ்வளவு மதிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கும் இந்த வருஷத்திய-அதாவது 1927-28ஆம் வருஷத்திய இந்திய கவர்ன்மெண்ட் ரிப்போர்ட்டைப் பார்த்தால் விளங்காமல் போகாது.
சமூக விஷயத்திலும் மக்களின் உணர்ச்சி எவ்வளவு முற்போக்கடைந்திருக்கின்றது என்பதற்கும், மதுரை மகாநாடு முதல் இதுவரை நடந்துவந்த பார்ப்பனரல்லாதார் மகா நாட்டு நடவடிக்கைகளையும், தீர்மானங்களையும், கவனிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. அரசியலில் ஜஸ்டிஸ் கட்சியை சர்க்கார் தாசர்கள் என்று தமது எதிரிகள் சொல்லி வந்ததைக் கோயமுத்தூர் தீர்மானத்தின் மூலமாகவும், அதற்குப்பின் அரசாங்கத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ள மதிப்பின் மூலமாகவும்தான் பொது ஜனங்களுக்குப் பொய்ப்பித்துக் காட்ட முடிந்தது.
ஆகவே, சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சிக்கு எவ்வளவு ஆதரவை தந்திருக்கின்றது என்பதைக் கவனித்தால், எந்த வகையிலும் அது அவசியமில்லாதது என்று சொல்ல முடியவே முடியாது என்று சொல்வோம்.
மதம் என்பது மனிதனின் வாழ்க்கை நலக் கூட்டுறவுக்கும் ஒழுக்கத்திற்கும் தேவை யானதே ஒழிய, மதத்திற்கு மனிதன் தேவையில்லை என்றே சொல்வோம். ஆனால், இப்போது வாழ்க்கை நலக் கூட்டுறவுக்கும். ஒழுக்கத்திற்கும் ஆதாரமான எந்த மதத்தில் அது பிரவேசித்து என்ன கெடுதியைச் செய்தது, அல்லது அதனால் என்ன விளைந்தது? யாராவது எடுத்துக்காட்ட முடியுமா? என்று கேட்கின்றோம். அன்றியும், கூட்டுறவு நலத்திற்கும், ஒழுக்கத்திற்கும் சமரச உணர்ச்சிக்கும் விரோதமாக எது இருந்தாலும் அதை அழிக்கவேண்டாமா என்றுதான் நாம் கேட்கின்றோம்.
எந்த விஷயத்தையும் மனிதன் தன் அறிவைப் பொறுத்து ஒரு விஷயத்தை நம்ப வேண்டுமா என்று கேட்கின்றோம். நமது இயக்கக் கொள்கைளை நடைபெறவொட்டாமல் தடுப்பதற்காகக் கடவுள் என்பதைக் கொண்டுவந்து தடையாகவோ முட்டுக் கட்டையாகவோ போடச் சூழ்ச்சி செய்தால், அதற்குச் சற்றும் இடம்கொடுக்க முடியாது என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் உறுதியான கொள்கையாகும். அறிவையும், தன்னம்பிக்கையையும், தன் முயற்சியையும், அன்பையும், ஒழுக்கத்தையும் தன்னகத்தில் கொண்ட எந்த சமயத்தினுடையவும் ஒத்துழைப்பை, சுயமரியாதை இயக்கம் வலிய வரவேற்கும் என்றும் உறுதி கூறுகிறோம்.
மக்களின் சுயமரியாதைக்காகத்தான், மக்கள் மானத்தோடு வாழ்வதற்காகத்தான் அரசாங்கமும், தேசியமும் வேண்டுமே ஒழிய, மற்றபடி, கேவலம் இவைகள் மனிதன் வயிறுவளர்க்க மாத்திரம் வேண்டியது என்றால், அதற்காக எந்த அரசாங்கமும் அரசியலும், தேசியமும் கண்டிப்பாய் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம். இதுவரை நமது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற எந்த அரசியல் இயக்கமாவது, தேசிய உணர்ச்சியாவது மக்கள் சுயமரியாதைக்கேற்றதான திட்டங்களுடன் அமைக்கப்பட்டிருந்தனவா என்று அரசியல் வாதிகளையும் தேசியவாதிகளையும் கேட்கின்றோம்.
எனவே, உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றிவிட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும், மற்றும் மத இயலையும் தானாகவே சரிப் படுத்திக்கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு; அரசியல் வேறு; தேசியம் வேறு; மத இயல் வேறு; ஒழுக்க இயல் வேறு: அன்பு இயல் வேறு என்கின்ற பாகுபாடுகளும் பிரிவுகளும் கண்டிப்பாய் மறைந்தோடி விடும்.
உதாரணமாக, நமக்கு மேலானதும் கீழானதுமான ஒரு வகுப்பு இருக்கக் கூடாது என்று சொன்னால்-அந்த வார்த்தையிலேயே, நமக்கு மேலானதாக ஒரு அரசாங்கமும் ஆட்சியும் இருக்கக் கூடாது என்பது உதயமாகிவிடும். அதுபோலவே, நமக்கு மேலாகவோ,கீழாகவோ ஒரு நாடு இருக்கக் கூடாது – என்பதும் தோன்றிவிடும்.
பொதுவாக, சுயமரியாதை என்கின்ற ஒரு இஞ்சினைப் பலப்படுத்தி, சரியாக ஓடத் தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்துவிட்டால், பிறகு எந்த எந்திரத்தைக் கொண்டுவந்து அதோடு இணைத்துத் தோல்பட்டையை மாட்டிவிட்டாலும் அது தானாகவே ஓடும். அது இன்ன விதமான இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை என்றே சொல்லுகின்றோம். மற்றபடி, எல்லா உணர்ச்சிகளையும் விட சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும் மதிக்கத் தக்கதுமாகும் என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடமிருக்காது. அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன் போராடத் தோன்றியதாகத் தோன்றலாம். இதுவே அல்ல அதன் இலட்சியம். ஒரு இயந்திரத்தை சுழற்றும்போது முதலில் சுற்றும் சிறு வேகம்போல், இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது; மற்றபடி, பின்னால் அது உலகத்தையே ஒன்றுபடுத்த – உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின் போதுதான் அதன் உண்மை சக்தியும் பெருமையும் வெளியாகும்.
அன்றியும், அது கிளம்பிவிட்டால் யாராலும் அதை அழிக்கவோ, அல்லது சற்றாவது அடக்கிவைக்கவோ கண்டிப்பாய் முடியாது என்பதுடன், அடிக்க அடிக்க எழும் பந்துபோல், எதிர்க்க எதிர்க்க வளர்ந்துகொண்டே போகும் சக்தி உடையது என்பதே நமது உறுதி. அன்றியும், எந்த விதத்திலும் எல்லோரும் எவ்வித அபிப்பிராயமுடையவர்களும் இதில் இன்றைக்கில்லாவிட்டாலும் நாளைக்காவது அல்லது எதிர்காலத்திலாவது சேர்ந்துதான் ஆகவேண்டும் என்பதும் நமது பலமான உறுதியாகும். அன்றியும், இவ்வியக்கம் ஒவ்வொன்றையும் ‘பெரிதும் வேண்டாம்’ என்று சொல்லும் விரக்தியைப்பற்றி இருக் கின்றதே ஒழிய – ‘வேண்டும்’ என்று சொல்லும்படியான ஆசையைப் பற்றி இல்லை. ஆதலால், இதில் யாரும் ஏமாற்றமடைவதற்கு இடமேயில்லை. அன்றியும், இதற்குள் போட்டிகளுக்கும் இடமில்லை. மற்றபடி, இதைப்பற்றி சர்க்கார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நமக்கு அதைப்பற்றிச் சற்றும் கவலையில்லை. உலக வாழ்க்கையில் இறங்கி ஆசையிலீடுபட்டு உழலும் சம்சாரவாதிகளிடமிருந்து நமக்கு யாதொரு உதவியும் ஒத்துழைப்பும் தேவையில்லாததாலும்; பெரிதும் பரிசுத்தமானதும் சுயநலமற்றதும் எதற்கும் எவ்விதத் தியாகத்திற்கும் தயாராயிருக்கும் இளங் காளைகளிடத்திலும் இளம் கன்னிகைகளிடத்திலும் திக்கற்றவர்களிடத்திலும் நமது இயக்கத்திற்குப் பெரிதும் உதவி எதிர்பார்க்கின்றபடியாலும்; அவர்களும் தாராளமாய் உதவி அளிக்கத் தயாராய் மேல் விழுந்து வருவதாலும், நாமும் இதன் முடிவைப்பற்றிச் சற்றும் கவலை கொள்ளாமல் கடமையையே பின்பற்றிக் கொண்டிருப்பதாலும் இந்த இயக்கத்தின் மூலம் எவ்வித நஷ்டமாவது, கஷ்டமாவது அடையவேண்டி வருமோ என்கின்ற எண்ணமே சிறிதும் கொள்ளாமலிருக்கிறோம்.
(‘குடிஅரசு’-தலையங்கம்-17-2-1929)