கலைஞர் பிறந்தநாள் அன்று மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

viduthalai
1 Min Read

சென்னை, மே 31- சென்னையில் மின்சார பேருந்து சேவையை கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில், மின்சார பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்கும் வகையில் ஒப்பந்தம் வெளியிடப்பட்டு, கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பேருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களே இவற்றை இயக்கும் வகையில் ஒப்பந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், பெண்களுக்கு இலவச சேவை வழங்கும் சாதாரண கட்டண பேருந்து, விரைவு பேருந்து, குளிர் சாதன பேருந்து என அனைத்து வகைகளிலும் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.

சென்னையை பொறுத்தவரை முதல்கட்டமாக 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக 5 பணிமனைகளில் முற்றிலுமாக மின்சார பேருந்து இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி 120 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதை தொடர்ந்து, மற்ற முக்கிய நகரங்களுக்கு மின்சார பேருந்து சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *