சென்னை, மே 28 வெளிநாட்டில் தானியங்கி வாடகை கார் செயலி யான Waymo குறித்து அமைச்சர் மா.சுப்பிர மணியன் விளக்கமளித்துள்ளார். அந்த காரில் சீட் பெல்ட் அணிந்தவுடன்தான் கார் புறப்படுமாம்.
தானியங்கி வாடகைக் கார்
இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிர மணியன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘waymo’செயலி மூலமாக பதிவு செய்தவுடன் கார் வந்து நிற்கிறது. காரில் ஏறி அமர்ந்து சீட் பெல்ட் அணிந்ததை உறுதி செய்யப்பட்ட பிறகு பயண நேரம் Display ஆகிறது. நாம் விரும்பும் பாடல்கள் கேட்டபடி பயணிக்கிறோம். போக்குவரத்து சிக்னல் உள்ளிட்ட விதிகளை மதித்து ஒரே சீராக செல்வது சிறப்பம்சம்.
Human Brain செயல்படுவதை போல் Sensors உதவியுடன் லாஸ் ஏஞ்சலஸ், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் உலா வரும் நூற்றுக்கணக்கான இக்கார்கள் ஓட்டுநர்கள் இல்லாமலேயே இயக்கப் பட்டு வருகிறது. விஞ்ஞான வளர்ச்சியின் உச்சமான இந்த ‘Waymo’ கார்களின் செயல்பாடு மிகவும் பிரமிப்பாக உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டு இருந்தார். தான் பயணம் செய்த காரின் காட்சிப் பதிவையும் பதிவிட்டிருந்தார்.
இது போன்று ஓட்டுநரே இல்லாத தானியங்கி கார்கள் வெளிநாடுகளில் இயக்கப்படுகின்றன. இந்த கார்களில் நவீன தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால் இதில் பயணிக்க எந்த பயமும் இன்றி பயணிக்கலாம் என்கிறார்கள். மேலும் இது போல் ஓட்டுநரே இல்லாமல் இருக்கும் கார் சேவையில் என்ன கூடுதல் வசதி என்றால் கொஞ்சம் காசை கூட்டிக் கொடுங்கள் என்று கேட்க ஓட்டுநர்கள் இருக்க மாட்டார்கள்.
கலிபோர்னியா-லாஸ் ஏஞ்செல்சில் நடைபெற்ற “மனநல மருத்துவ பன்னாட்டு மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் வளைகுடா தமிழ்மன்றத்தின் சார்பில் “தமிழ் வெற்றிநடை ஓடு” எனும் மாரத்தான் போட்டியிலும் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 21.1 கிமீ தூரம் ஓடி, 161ஆவது போட்டியை நிறைவு செய்தார். கடுமையான வேலை பளுவுக் கிடையிலேயும் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெருமக்கள் கலந்து கொண்டு ஓடி சிறப்பித்ததும், இளைஞர் களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நம் முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருவதும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்க்க கடந்த 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது அவர் ஜாகுவார் நிறுவனத்தின் தானியங்கி காரில் பயணித்த காட்சிப் பதிவு வைரலானது.
அந்த பதிவில் ‘‘இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை!’’
– தந்தை பெரியார் (இனி வரும் உலகம்) என்றவாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.