அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் 30ஆம் தேதி வெளியிடப்படும் அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, மே.28  அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ஆம் தேதி வெளியிடப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (27.5.2025) அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டில் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கி  மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 705 பேர் இணைய வழியில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் மாணவிகள் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 619 பேர். மாணவர்கள் 76 ஆயிரத்து 65 பேர். மூன்றாம் பாலினத்தவர் 78 பேர். விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 762 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

30ஆம் தேதி வெளியிடப்படும்

இதைத்தொடர்ந்து, சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் மே 29-ஆம் தேதியும் பொதுப்பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ஆம் தேதியும் அரசுக் கல்லூரிகளில் வெளியிடப்படும், இந்த பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்படுவதுடன் கல்லூரி இணை்யதளத்திலும் வெளியிடப்படும். மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், மேனாள் ராணுவத்தினரின் வாரிசுகள், உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 3-ஆம் தேதியும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4 முதல் 14-ஆம் தேதி வரையும் நடைபெறும்.

கலந்தாய்வு தொடர்பான தகவல் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அந்தந்த கல்லூரிகளில் இருந்து அனுப்பப்படும். மே 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் மற்றும் துணைத்தேர்வெழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் மே 30-ஆம் தேதி தொடங்கும். மாணவர் சேர்க்கை பணிகள் முடிவடைந்து முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஜூன் 30-ஆம் தேதி ஆரம்பமாகும்,” என்று அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *