தேவதாசி முறை ஒழிப்பில் ‘‘பிற நாட்டு புரட்சிப் பெண் ஏமிகார்மைக்கேல்’’ – அறிவோமா? (2)

viduthalai
6 Min Read

‘தேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல் என்ற நூலில், 4ஆவது பகுதியில் ‘புரட்சிப் பெண் ஏமிகார்மைக்கேல்’ என்பதில் எழுதியுள்ள சில முக்கிய பகுதிகள் இதோ:

‘‘இந்தியப்பெண் விடுதலைக்கு வித்திட்டவர் களுள்; அயர்லாந்து நாட்டு பெண்ணான ஏமிகார்மைக்கேல் என்பவர் முதன்மையானவர். இவரது இயற்பெயர் ஏமி பியட்ரிஸ் கார்மைக்கேல்.

கி.பி.1895ஆம் ஆண்டு கிறித்துவ சமயப் பணிக்கென்று இந்தியாவிற்குள் நுழைந்த இவரை இச்சமூகம் தன்னைச் சுத்திகரிக்கும் பணியில் பயன்படுத்திக் கொண்டது. இவரது இந்திய கால்பதிப்பு அவரது வாழ்வின் நோக்கத்தையே மாற்றிப்போட்டுவிட்டது. சமயப் பணியாளர் என்ற அவரது நிலைப்பாட்டை இந்தியசமூகக் கட்டமைப்பு திசை திருப்பி விட்டது. குறிப்பாக இந்தியப் பெண்களின் அடிமைத்தனம் அவரை வெகுவாகப் பாதித்து வெகுண்டெழ வைத்து, பெரும் புரட்சியாளராகவே அவரை மாற்றியது. ஆம். சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டு அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தியவர்களே புரட்சியாளர்கள். அந்த வகையில் ஏமிகார் மைக்கேல் எவரும் நினைத்திராத புரட்சிகரச் சிந்தனையாளராகவும், செயல்பாட்டாளராகவும் விளங்கினார்.

பல தலைமுறைகளாக ஒரு கூட்டப் பெண்ணினம், சமயச்சாயம் பூசப்பட்டுப் பக்தி வேடம் தரிப்பிக்கப்பட்டு ஒரு சாராரின் பாலியல் வேட்கைகளுக்காக அடிமையாக்கப்பட்டு கட்டுண்டுக் கிடந்ததை இச்சமூகத்திற்கும் பாதிக்கப் பட்டோருக்கும் உணர்த்தி அத்தகையோரை விடுவிக்க ஆரம்ப அடியெடுத்து வைத்த புரட்சி யாளர் ஏமிகார்மைக்கேல் என்ற இப்பெண்ணே ஆவார்.

பெண்களுக்கு எதிரான ஆதிக்கத்தை எதிர்த்து அறிவுப்போர் தொடுத்து, அதன் முழுவேர்களையும் அறுத்தெறிய மூலகாரணமான அவரது சிந்தனைகளையும் ஆளுமைகளையும் அவை அவருக்குள் வளர்த்த வாழ்க்கைப் பின்னணியத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.

வாழ்க்கைப் பின்னணியம்

அயர்லாந்தில் மில்ஜல் (Mill Isle) எனும் ஊரில் டேவிட் கார்மைக்கேல் காதரின் ஜேன்கார்மைக்கேல் ஆகியோருக்கு கி.பி.1867ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி முதல் மகளாகப் பிறந்தார். இறை நம்பிக்கை மிகுந்த அப்பெற்றோரால் சமயம் மற்றும் நல்லொழுக்கமுடையவராகவும்  வளர்க்கப்பட்டார். புத்திக் கூர்மையும் எதையும் நுணுகி ஆராயும் தன்மையுமுடையவராகிய ஏமிகார்மைக்கேல் சுதந்திர மனப்பான்மையையும், துணிச்சலையும் தம் பிறப்பிலேயே உடையவராகயிருந்தார்.

இவரது ஆளுமையின் மீது தாக்கம் செலுத்திய மற்றொரு சமூகச்சக்தி அய்ரோப்பாவின் வகுப்புவாதம். அங்கு மிகுந்த ஆடம்பர வாழ்வையே முழு வாழ்க்கையாக வாழ்ந்த பிரபுக்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உயர் வகுப்பினராக இருந்தனர். பகட்டும். ஆடம்பரமும் இவர்களின் குறியீடு. மத்திய வகுப்பினர் பெருவணிகர்களாகவும் தொழிலதிபராகவும் வசதியான வாழ்க்கையுடையவர்களாகவும் இருந்தனர். இவர்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதிலும், சமூகத்தில் தங்களது நிலை தாழ்ந்து விடக் கூடாதென்பதிலுமே கவனம் செலுத்தி வந்தனர். பிறரின் நலன் குறித்து எவ்வித அக்கறையும் அற்றவர்களாகவே திரிந்தனர்.

வாழ்வில் எக்குறைவுகளும் இன்றி வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்து வந்த தொழிலதிபரின் மகளான ஏமிகார்மைக்கேல் சமூக நலனை விரும்ப வேண்டும் என்ற நோக்கங்கொண்டு வளர்ந்தனர். இவரது இயல்பிற்கேற்ப அச்சமூகத்தின் மூன்றாவது பிரிவினரோடு தம் நேரத்தை செலவிட்டார். மூன்றாவது பிரிவினரோ தொழிற் கூடங்களிலும், நிலக்கரிச் சுரங்கங்களிலும் குறைந்த ஊதியத்திற்குப் பணியாற்றினர். இளம் பெண் களும், சிறுவர்களும்கூட மிகவும் இழிநிலையில் கடுமையாக உழைத்தனர். வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்த இவர்களின் பொழுது போக்குகள் தரக்குறைவானதாக இருந்தது. அரைவயிற்றுக் கஞ்சிக்காக ஓய்வின்றி உழைத்த இவர்களது சிந்தனையும், பேச்சும் மற்ற இரு தரப்பினர்களால் தூய்மை யற்றதாகப் பார்க்கப்பட்டது. இம்மூன்றுவிதமான பிரிவினர் களும் ஒரே சமூகத்தில் வெவ்வேறு தனித்தனி உலகில் வாழ்ந்ததை ஏமிகார் மைக்கேலால் உணரமுடிந்தது. இவர்களுள் இரண்டாம் நிலை வகுப்பிலிருந்த அவரால் மட்டும் மூன்றாம் நிலையினரின் துயரைப் பெரும் கொடுமையானதாகவே பார்க்க முடிந்தது. மற்றவர்களைப் போன்று அவர்களது வேதனையான வாழ்வைக் கண்டு, கடந்து சென்றுவிட முடியாமல் வெதும்பினார்.

பிரிட்டனில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த இவ்வகுப்பு வாதத்திற்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓரளவு சமத்துவத் திற்கான வழிவாசல்கள் திறக்கலாயின. சில சமூக நலனாளர்களாலும்,  அரசியல் ரீதியான சட்ட திட்டங்களாலும் இப்பாகுபாடுகள் மாற்றங்காணும் நிலையில் இருந்து வந்தது.

அங்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்திலேயே பல்வேறு இயந்திரத் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு தொழிற் புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதில் பணிபுரிய அமர்த்தப்பட்ட கடைநிலைத் தொழிலாளர்களான சிறுவர்களும், பெண்களும் வேலைக்கேற்ற கூலி கொடுக்கப்படாமல் கொடுமைக்குள்ளாகி தவித்து நின்றனர்.

இந்நிலையே அந்நூற்றாண்டின் இறுதியிலும் நிலவியது குறிப்பாகப் பெண்களின் நிலமை வேதனைக்குள்ளானதை நேரடியாகக் கண்டு கலங்கினார் ஏமிகார்மைக்கேல். சுகாதாரமற்ற குடிசைகளில் அத்தொழிலாளர்களின் குடியிருப் புகள் இருந்தன. அவர்களுக்கு அவர்தம் உரிமை களையும், நிலைமைகளையும் உணரச்செய்யக் கல்வியும், விழிப்புணர்வும் அவசியம் என்பதை யுணர்ந்த ஏமிகார் மைக்கேல் உடனடியாகச் செயலில் இறங்கினார். தொழிற்கூடங்களில் ஓய்வின்றி உழைத்தப் பெண்களின் நிலையை எண்ணி வருந்தினார்.   இந்த ஏழைப்பெண்களின் வாழக்கைத்தரம் உயர. கல்வியே அடிப்படை என்பதை அறிந்திருந்த ஏமிகார்மைக்கேல் இரவு நேரப் பள்ளியினை அவர்கள் வாழ்ந்த குடிசைப்பகுதிகளுக்குச் சென்று ஏற்படுத்தி, கல்விப் புகட்டினார்.

அவரது பெற்றோரும் அதற்கு ஆதரவளித்து ஊக்கம் அளித்தனர். அக்கம் பக்கத்தினர் ஏமிகார் மைக்கேலின் இச்சமூக சேவையினைத் தேவையற்ற செயலாகக் கருதி அவரை நோகச் செய்தபோதும் பதினெட்டே வயதினையுடைய அவர் அப்போதே புரட்சிகர சிந்தனையை தனக்குள் செய்திருந்தபடியினால் துணிச்சலோடு தம் பணியினைத் தொடர்ந்தார். அவரது இரவுப் பள்ளி தொடர்ந்தது; அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வந்து பயனடையத் தொடங்கினபடியால் அவர்களுக்கென்று ஒருதனிக் கட்டடம் கட்டத் திட்டமிட்டு வசதி படைத்த சமூக ஆர்வலர்களிடம் பணம் வசூலித்து ‘அன்பின் அழைப்பு’ (The Love Welcome) என்ற பெயரில் கட்டடம் கட்டி அதில் அப்பெண்களுக்குக் சுல்வி கற்பித்தார். அதிலிருந்த எதிர்ப்புகளையோ ஆபத்துக்களையோ பொருட்படுத்தாமல் எவ்வித சுயநலமுமற்ற அவரது சமூக அக்கறை அவரைத் திடமானதொரு சமூகவியலாளராக்கிக் கொண்டிருந்தது.  அதைத் தொடர்ந்து அடித்தள மக்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து பல கட்டுரைகளை எழுதி னார். அம்மக்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் இளவயதான அவரது மனதைப் பக்குவப்படுத்தி யிருந்தது.

இந்திய வருகை

இந்நிலையில் சமய நம்பிக் கையில் அதிக ஈடுபாடு கொண்ட வரான ஏமிகார்மைக்கேல் 19ஆம் நூற்றாண்டில் இங்கி லாந்தில் ஏற்பட்டிருந்த சமய மறுமலர்ச்சியினால் உண்டாகி யிருந்த புதுவித சமயக் கருத்தாக்கங்களால் மன எழுச்சி யடைந்து சமயப்பணியின் வாயிலாக சமூகப்பணிகளைச் செய்வதென்ற மனத்தாக்கம் அடைந்தார். அக்காலக் கட்டத்தில் அய்ரோப்பியர்களுள் அநேகர் பிற நாடுகளுக்கு மிஷனெரிகளாக சமயப்பணி செய்வதற்கென்று புறப்பட்டுச் சென்றனர். தானும் அவ்வாறானப் பணியினைச் செய்வதென்ற முடிவையெடுத்தார்.

தமிழ்நாட்டில் தனது பணியைச் செய்வதென்ற முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தில் பண்ணைவிளை என்ற ஊரில் ஏற்கெனவே அங்குச் சமயத்தொண்டு செய்து கொண்டிருந்த மிஷனெரி தாமஸ் உவாக்கர் இணையரோடு இணைந்து அப்பகுதியில் தனது சமயப்பணியைத் தொடங்கினார்.

தமிழில் புலமைப் பெற்றிருந்தவரான தாமஸ் உவாக்கர் ஏமிகார் மைக்கேலுக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசானாகவும், நல்வழிகாட்டியாகவும் விளங்கினார். அதோடு அவர் கிறித்துவக் கம்பர் என்று அழைக்கப்படும் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை என்பவரிடமும், தமிழைக் கற்றுத் தேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியின் மீதும், தமிழினத்தவர் மீதும் மிகுந்த பற்றும், பாசமுடையவரான ஏமிகார்மைக்கேல் தமிழ்நாட்டுப் பெண்களைப் போலவே புடவை (Saree) கட்டியே கடைசி வரை வாழ்ந்தார். அன்றைய அயல்நாட்டு சமயப்பணியாளர்கள் எவருமே தங்கள் நாட்டு நடையுடை பாவனைகளை மாற்றிக் கொள்ளாதவர்களாகவே இருந்துள்ளனர். இதனால் அத்தகையோரால் எழுந்த கேலியான விமர்சனங்களைக் கண்டுகொள்ளாதவரான ஏமிகார்மைக்கேல் பிறர் மனத்தையோ, வாழ்க்கையையோ வேதனைக்குள்ளாக்காத எனது மாற்றங்களை வேறெவருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றுரைத்து, ‘எனது பணித்தளம் பாமரப் பெண்களிடையே அவர்களுக்கு நானொரு அந்நிய பெண்ணாக அறியப்படக் கூடாது என்பதே தனது நோக்கமென்றும் விளக்கமளித்தார்.

தன்மீதான அய்ரோப்பிய சுலாச்சார தாக்குதல் களனைத்தையும் களைந்து தான் கொணர்ந்த சமய நம்பிக்கைகளை அளிக்க விழைந்த போது தான் இச்சமூகத்துப் பெண்களிடையே தான் வேறெங்கும் கண்டிராத பெரும் அவலநிலைகளைக் கண்டு வியந்தார். பெண்ணடிமைத்தனமும், ஜாதிய பாகுபாடுகளும், தீண்டாமை கொடுமைகளும் சமூகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் நிரம்பி வழியக்கண்டார்.தான் கண்டவற்றைக் கண்டு கொள்ளாததைப் போல வந்த நோக்கத்தை மட்டும் நிறைவேற்றிக் கொண்டால் போதுமென்ற சராசரி மனுஷியாக இருக்க முடியவில்லை ஏமிகார்மைக்கேலால்! தனது நாட்டில் தான் கண்ட வகுப்பு வாதத்திற்கும், இந்திய சமூக அசமத்துவ நிலைமைக்கும் இடையேயான மிகப்பெரிய வேறுபாட்டையுணர்ந்தார். இச்சமூக அமைப்பில் அனைத்துத் தரப்பிலும் பெண்கள் அந்தந்த ஜாதி, சமய, வர்க்க நிலைகளில் ஆண்களின் உடைமைகளாகவே வாழ வைக்கப்பட்டிருந்தனர்.

(தொடரும்)

குறிப்பு: கடந்த ‘வாழ்வியல் சிந்தனைகள்’  (23.5.2025)  கடைசி பத்தியில் ஏமிகார்மைக்கேல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் என்றுள்ளதை அயர்லாந்தைச் சேர்ந்தவர் என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறோம்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *