அச்சம் தேவையில்லை! தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று இல்லை மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

Viduthalai
2 Min Read

சென்னை, மே 23– தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மேற்கொள்ளப் பட்ட கரோனா மரபணு பகுப்பாய்வு பரிசோதனையில் ஒமைக்ரான் வகை தொற்றுகளும், அதன் உட்பிரிவுகளுமே கண்டறியப் பட்டதாகவும் கூறியுள்ளது.

சிங்கப்பூா், ஹாங்காங்கை தொடா்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு பரவி வருகிறது. கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொற்று பரவல் உயா்ந்திருப்பதாக ஒன்றிய அரசு தரவு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை அரசு சார்பில் பரவலாக மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் நிறுத்தப் பட்டுள்ளன. அதேவேளையில், தனியாா் மருத்துவமனைகளில் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

இதையடுத்து, கடந்த ஏப்ரலில் தொற்றுக்குள்ளானவா்களின் சளி மாதிரிகளை பொது சுகாதாரத் துறை சேகரித்து பகுப்பாய்வுக்காக புணேயில் உள்ள மரபணு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பியது. அதன் முடிவுகள் அண்மையில் வெளியானதில், புதிய வகை பாதிப்பு எதுவும் அவா்களுக்கு இல்லை என்பது உறுதியானது.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த மாதம் அனுப்பப்பட்ட மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு செய்ததில் அவை அனைத்துமே ஒமைக்ரான் வகை தொற்றுதான் என்பது தெரியவந்துள்ளது. அதிலும், அதன் உட்பிரிவுகளாக பிஏ 2, ஜெஎன் 1 உள்ளிட்ட வகை பாதிப்புகளே கண்டறியப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டில் தற்போது பரவி வருவது புதிய வகை தொற்று இல்லை.

ஒருவேளை மே மாதத்தில் புதிய வகை கரோனா பரவி இருந்தால், பாதிப்பின் தீவிரம் அதிகரித்திருக்கக் கூடும் அல்லது உயிரிழப்புகள் பதிவாகி இருக்கும். அத்தகைய நிலை எதுவும் இல்லை. இதனால் அச்சப்பட வேண்டிய சூழலோ, பரிசோதனைகளை விரிவுபடுத்த வேண்டிய நிலையோ எழவில்லை.

அதேவேளையில், இணை நோயாளிகள், குழந்தைகள், முதியவா்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தால் அடுத்த சில நாள்களுக்குள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிடும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *