பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
1929 ஆம் ஆண்டில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில்தான்!
அதே செங்கல்பட்டில்தான் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – அக்டோபர் மாதம் நடைபெறும்!
குடும்பம் குடும்பமாக நம்முடைய திராவிட மாணவர் கழகத்தினர், திராவிட இளைஞர்கள், எங்களைப் போன்ற ‘திராவிட முன்னாள் வாலிபர்கள்’ பங்கேற்க வேண்டும்!
சென்னை, மே 13 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு அக்டோபர் மாதம் செங்கல்பட்டில் நடைபெறும். ஏனென்றால், செங்கல்பட்டு சுயமரியாதை முதல் மாகாண மாநாடுதான் – பெண்களுக்குப் படிப்புரிமை, சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் போட்ட மாநாடு. தந்தை பெரியார் நடத்திய முதல் மாநாடுமாகும். இரண்டு நாள்கள் நடைபெறும் அம்மாநாட்டில், குடும்பம் குடும்பமாக நம்முடைய தோழர்கள் பங்கேற்கவேண்டும். அதில் முக்கியமாக மகளிர், திராவிட மாணவர் கழகத்தினர், திராவிட இளைஞர்கள், எங்களைப் போன்ற திராவிட மேனாள் வாலிபர்கள் பங்கேற்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
திராவிடர் மாணவர் கழகக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
நேற்று முன்தினம் (11.5.2025) காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை ஆகிய அமைப்புகளின் கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
இன்றைக்கு ஒவ்வொருவரும் சுதந்திரமாகப் பேசுகிறீர்கள்; சுதந்திரமாக வந்திருக்கிறீர்கள். இந்தக் கொள்கையை முழுமையாகக் கடைப்பிடித்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது.
மகளிரணியினர் மட்டுமே பங்கேற்ற கருத்தரங்கம்!
திருப்பத்தூர் எழிலரசனுடைய வாழ்விணையர் அகிலா அவர்கள், மகளிரணியினர் மட்டுமே பங்கேற்ற கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கருத்தரங்கத்திற்கு ஆண்களுக்கு அனுமதியில்லை.
ஏனென்றால், அந்தக் கருத்தரங்கில் மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர். மனோதத்துவ மருத்துவ அறிஞர்கள் வந்திருந்தார்கள். மகளிருக்கு ஏற்படுகின்ற உடல் பிரச்சினைகள் அல்லது மனோதத்துவ ரீதியாக சில பிரச்சினைகள் இருக்கும். அந்தக் கருத்தரங்கில் அவற்றையெல்லாம்பற்றி தங்களுடைய சந்தேகங்களை மருத்துவர்களிடம் மனம் விட்டு கேட்கவேண்டும்; உடல்நலம் பேணக்கூடிய நிகழ்வு.
பெரியார் கண்ட வாழ்வியல் என்பது சிக்கனம், அடக்கம், ஆடம்பரம் கூடாது, உழைப்பு என்பவைதான்.
இங்கே திருவாரூர் மாவட்டத் தோழர்களும் வந்தி ருக்கின்றார்கள். எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை சொல்கிறேன்.
முதன்முதலாக திராவிடர் கழகம்தான் சொல்லிற்று!
காவிரி நதிநீர் நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்று முதன்முதலாக திராவிடர் கழகம்தான் சொல்லிற்று. எதையும் நாம்தான் முதலில் சொல்வோம். வெற்றி பெற்றவுடன், நாம்தான் கடைசியாக நிற்போம். ‘‘நாங்கள்தான் வெற்றிக்குரியவர்கள்’’ என்று பலர் சொல்வார்கள். நாம்தான் செய்தோம் என்று சொல்பவர்கள் நாமல்ல; அந்த விஷயம் நடைமுறைக்கு வரவேண்டும் என்பதுதான் நமக்கு முக்கியம்.
போராட்டத்தில், பெண்கள் மட்டுமே பங்கேற்கவேண்டும்!
அப்போது நாம், நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கு ஒரு வாரத்திற்குமேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். விவசாய சங்க மகளிர் தோழர்கள் மிகத் தீவிரமாக, உற்சாகமாக செயல்படக் கூடியவர்கள். அவர்களிடம் நான் கேட்டேன், ‘‘காவிரி நதி நீருக்காக போராட்டம் நடத்தவேண்டி இருக்கும்; அப்படி நடத்தினால், சிறைச்சாலைக்குச் செல்லவேண்டி இருக்கும். அப்படி நடக்கவிருக்கும் போராட்டத்தில், பெண்கள் மட்டுமே பங்கேற்கவேண்டும். ஏனென்றால், போராட்டத்தில் பெண்கள் கலந்துகொண்டார்கள் என்பது முக்கியமல்ல; அவர்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்பது முதல் நோக்கம்; மற்றொரு நோக்கம் என்னவென்றால், பெண்கள் செய்கின்ற சமையலில் குறையைக் கண்டு பிடித்துத்தான் ஆண்களுக்குப் பழக்கமே தவிர, அதனைப் பாராட்டிப் பழக்கமில்லை. உப்பு இல்லை; கசக்கிறது என்றுதான் குறை சொல்வார்கள்.
வயிற்று வலி, உடல் உபாதையால் அவதிப்பட்டார் தந்தை பெரியார்!
அன்னை மணியம்மையார் அவர்கள் சமைய லைப்பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு சமைக்கவே தெரியாதாம். அன்னை நாகம்மையார் 1933 ஆம் ஆண்டே இறந்து போய்விட்டார். அதற்குப் பிறகு, பெரியார் அவர்கள் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு, வயிற்று வலி, உடல் உபாதையால் அவதிப்பட்டார். அப்போது அன்னை மணியம்மையார் அவர்கள் பத்திய சாப்பாட்டினை தயார் செய்து கொடுத்ததன் காரணமாக, அய்யா அவர்கள் 95 ஆண்டுகாலம் வாழக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
முதன்முதலில் அன்னை மணியம்மையார் அவர்கள், சமையல்பற்றிய ஆய்வை அய்யாவை வைத்துத்தான் செய்திருக்கிறார்கள்.
‘நல்லா இருக்கும்மா, நல்லா இருக்கும்மா!’’
அதுகுறித்து என்னிடம் அன்னை மணியம்மையார் சொல்வார்; ‘‘நான் ஏதாவது சமைத்துக் கொடுத்தால், அய்யா அவர்கள், ‘‘நல்லா இருக்கும்மா, நல்லா இருக்கும்மா’’ என்று சொல்வார்.
பிறகு நான் அதைச் சாப்பிட்டுப் பார்க்கும்போது, உப்பே இல்லையே, இதை எப்படி அய்யா சாப்பிட்டார்? காரம் இவ்வளவு இருக்கிறதே, இதை எப்படி அய்யா சாப்பிட்டார்? என்று நினைப்பேன்’’ என்பார்.
தோழர்கள் வீட்டிற்கு அய்யா சாப்பிடச் செல்லும்போது, தோழர்கள், மீன் மற்றும் அசைவ உணவு காரசாரமாக இருக்கவேண்டும் என்பதற்காக, மிளகாய்த் தூள் அதிகமாகப் போட்டு சமைத்து வைத்திருப்பார்கள்.
உணவு காரமாக இருக்கிறது என்று வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார்!
அதைச் சாப்பிடும்போது அய்யா அவர்கள், அந்த உணவு காரமாக இருக்கிறது என்று வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார். ஏனென்றால், தோழர்கள் மனது சங்கடப்படுவார்கள் என்பதால்.
‘‘கொஞ்சம் ரசம் இருக்கிறதா?’’ அல்லது ‘‘கொஞ்சம் மோர் இருக்கிறதா?” என்று கேட்டுவிட்டு, அவர்கள் கொஞ்சம் நகர்ந்ததும், தண்ணீர் இருக்கும் டம்ளரில், காரசாரமாக இருக்கும் மீனை போட்டு, கழுவி விடுவார். அதற்குப் பிறகு அந்த மீனை சாப்பிட்டுவிட்டு, ‘‘மோர் வந்துவிட்டதா?’’ என்று கேட்பார்.
பரிமாறும் தோழர்களுக்கே தெரியாது. ஏனென்றால், அவர்களுக்குத் தெரிந்து செய்தால், அவர்கள் சங்கடப்படு வார்கள் அல்லவா, அதற்காகத்தான். இதுதான் பெரியார்!
பெரியாருடைய பண்பாடு இருக்கிறதே, அது மிகச் சிறப்பானதாகும்.
அன்னை மணியம்மையார், தான் சமைத்ததை சாப்பிட்டுப் பார்த்து, ‘‘அய்யோ, நாம் உப்பு போட வில்லையே’’ என்று தெரிந்து கொள்வார். ‘‘இப்படித்தான் நான் சமையல் கற்றுக்கொண்டேன்’’ என்பார்.
ஆண்கள், சமையல் செய்யக் கற்றுக்கொள்வார்கள்!
ஆகவேதான் நான் சொன்னேன், ‘‘போராட்டத்தில் பங்கேற்று பெண்கள் ஆறு மாதம் அல்லது மூன்று மாதம் சிறைச்சாலைக்குப் போய்விடுங்கள். வேறு வழியில்லாமல் ஆண்கள், சமையல் செய்யக் கற்றுக்கொள்வார்கள்’’ என்று அவர்களிடம் கூறினேன்.
நானும் அப்படித்தான்; சுடு தண்ணீர் வேண்டு மென்றாலும், என்னுடைய வாழ்விணையரிடம்தான் கேட்பேன். நானாகச் சென்று சமையலறையில் தண்ணீரை சுட வைத்து எடுத்துக் கொண்டு வரமாட்டேன்.
இவையெல்லாம் ஆண்கள் ஆதிக்கத்தினால் வந்த கோளாறுகள்தான்.
அதனால்தான் நான் சொன்னேன், சிறைச்சாலையில் வேளை தவறாமல் சாப்பாடு கொடுப்பார்கள். சாப்பிடவில்லையென்றாலும், விடமாட்டார்கள். ‘‘தாயினும் சாலப்பரிந்து’’ கட்டாயப்படுத்துவார்கள். சிறைச்சாலையில். இரண்டு வேளை சாப்பிடவில்லை என்றால், சிறைத்துறை அதிகாரி வந்துவிடுவார்; ‘‘என்னங்க நீங்க சாப்பிடாமல் இருக்கிறீர்கள்’’ என்று கேட்பார். அந்த அளவிற்கு யாரும் வெளியே கவலைப்படமாட்டார்கள்.
காவிரி நதிநீர் போராட்டத்தில் பங்கேற்க 600 தாய்மார்கள் வந்துவிட்டார்கள்!
அப்போது நாம் வைத்த வேண்டுகோளை ஏற்று, காவிரி நதிநீர் போராட்டத்தில் பங்கேற்க 600 தாய்மார்கள் வந்துவிட்டார்கள். போராட்டத்தில் பங்கேற்ற எங்களை ஒரு மண்டபத்தில் வைத்திருந்தார்கள். ரிமாண்ட் செய்யப் போகிறார்களா? அல்லது வெளியில் விடப் போகிறார்களா? என்று மாலை 5 மணிவரையில் எங்க ளுக்கு எதுவுமே தெரியவில்லை.
மேலேயிருந்து ஒரு பதிலும் காவல்துறை அதிகாரி களுக்கு வரவில்லை. அதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால், எங்களை கைது செய்த காவல்துறை அதிகாரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் என்னோடு படித்தவர்.
பெண்களையெல்லாம் நாங்கள் கைது செய்வதாக இல்லை- அவர்களையெல்லாம் வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள்!
அவர் என்னிடம் வந்து, மிகவும் மரியாதையாக ‘‘அய்யா இவர்களையெல்லாம் அழைத்துச் செல்வதற்குப் பேருந்துகள் கிடையாது. ஆண்களை மட்டும் அழைத்துச் செல்வதற்காக 8 பேருந்துகள் இருக்கின்றன. இவ்வளவு பேர் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆகவே, போராட்டத்தில் பங்கேற்ற பெண்களையெல்லாம் நாங்கள் கைது செய்வ தாக இல்லை. அவர்களையெல்லாம் வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள்’’ என்றார்.
நானும், போராட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம், ‘‘காவல்துறை அதிகாரி எனக்கு மிகவும் வேண்டியவர்; அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது. ஆகவே, நீங்கள் எல்லாம் வீட்டிற்குச் சென்றுவிடுங்கள்’’ என்றேன்.
நாங்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாராக இருக்கிறோம்; வீட்டிற்குப் போகமாட்டோம்
உடனே அவர்கள், ‘‘நாங்களெல்லாம் வீட்டில் சொல்லி விட்டு வந்துவிட்டோம்; நாங்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாராக இருக்கிறோம்; வீட்டிற்குப் போகமாட்டோம்’’ என்று அந்தக் காவல்துறை அதிகாரி இருக்கும்போதே சொன்னார்கள்.
நம்முடைய தாய்மார்களுக்கு எவ்வளவு உறுதி என்பதைப் பாருங்கள். அவர்கள் படிக்காத தாய்மார்கள், விவசாயத் தாய்மார்கள்.
திருச்சி சிறைச்சாலையில் இடம் இல்லை என்பதால், வேலூர் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள்; பிறகு மதுரை சிறைச்சாலைக்கு மாற்றினார்கள்.
மதுரை பே.தேவசகாயம்
மதுரை பே.தேவசகாயம் அவர்கள், சிறைச்சாலையில் இருந்த மகளிர் தோழர்களைச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்தார்.
ஆகவேதான், மகளிர் போராட்டத்தில் பங்கேற்றால், வெற்றி உறுதி நமக்கு!
இவ்வளவு மகளிர் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. மகளிரணி அமைப்பு இன்னும் வளரவேண்டியது மிகவும் தேவையாகும்.
அதேபோன்று இளைஞரணித் தோழர்கள்!
மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொடுக்கவேண்டும் என்று போராடினார்!
மகளிரே பங்கேற்கும் போராட்டத்தைத் தனியாக நடத்தவேண்டும். உதாரணமாக, மகளிருக்கென இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். தந்தை பெரியார், அனைத்துத் துறைகளிலும் மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொடுக்கவேண்டும் என்று போராடினார்.
நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நகராட்சி யிலும், பஞ்சாயத்திலும் கொடுத்துவிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ளதுபோன்று
வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது!
வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது!
அதனால் இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், பெண் மேயர்கள், பெண் நகராட்சித் தலைவர்கள் மற்ற மற்ற பதவிகளில் பெண்கள் நிறைய வந்துவிட்டார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ளதுபோன்று இவ்வாறு வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது நீதிக்கட்சி ஆட்சியில்தான்.
எனவே, தோழமை உணர்வுடன் அனைவரும் நடந்துகொள்ளவேண்டும். ஆணாதிக்க சமுதாயத்தை ஒழிக்கவேண்டும். அதேநேரத்தில், உரிமை என்கிற பெயரால், அத்துமீறல்களும் இருக்கக்கூடாது.
மகளிரணியினருக்கு சீருடையை நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள்; அனைவரும் புடவை கட்டிக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதனால், உங்களுக்கு அசவுகரியமாக இருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரிகிறது. ஆகவே, எது உங்களுக்கு வசதியான சீருடையோ அதனை உருவாக்குங்கள். சீர்மையான கருப்புடையை உருவாக்குங்கள்.
அக்டோபரில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு!
அதோடு, நம்முடைய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு அக்டோபர் மாதம் நடைபெறும். இதுதான் முதல் அறிவிப்பு.
இரண்டாவது, அந்த மாநாடு பெரும்பாலும் செங்கல்பட்டில்தான் நடைபெறும். ஏனென்றால், செங்கல்பட்டு சுயமரியாதை முதல் மாகாண மாநாடுதான் – பெண்களுக்குப் படிப்புரிமை, சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் போட்ட மாநாடு. தந்தை பெரியார் நடத்திய முதல் மாநாடாகும். நம்மைப் போன்ற பலர் பிறக்காத காலத்தில், 1929 ஆம் ஆண்டு நடைபெற்றது.
எங்களைப் போன்ற திராவிட மேனாள் வாலிபர்கள் பங்கேற்க வேண்டும்!
ஆகவே, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு இரண்டு நாள்கள் நடைபெறும். அம்மாநாட்டில், குடும்பம் குடும்பமாக நம்முடைய தோழர்கள் பங்கேற்கவேண்டும். அதில் முக்கியமாக மகளிர், திராவிட மாணவர் கழகத்தினர், திராவிட இளைஞர்கள், எங்களைப் போன்ற திராவிட மேனாள் வாலிபர்கள் பங்கேற்க வேண்டும்.
‘‘முன்னாள் வாலிபர்கள்’’
பெரியார் அவர்கள் வயதானவர்களைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘‘முன்னாள் வாலிபர்கள்’’ என்று சொல்வார். அதுபோல, முன்னாள் வாலிபர்கள் மட்டுமல்ல; முன்னாள் வாலிபிகளையும் அழைத்துக் கொண்டு வரலாம்.
மே 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் போராட்டத்தில்…
அதேபோன்று இளைஞரணி தோழர்கள்; இளைஞர ணியில் இளைஞர்களை ஏராளமாகப் பார்க்கின்றேன். இப்படித்தான் புதிய இளைஞர்கள் முன்வரவேண்டும். சிறப்பாகச் செயல்படவேண்டும். மே 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் போராட்டத்தில், அந்தந்த மாவட்டத்தில். நீங்கள் அனைவரும் பங்கேற்கவேண்டும்.
மும்மொழித் திட்டத் திணிப்பை எதிர்த்து, 5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு என்று படிக்கின்ற பிள்ளைகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அப்போராட்டம் நடைபெறும்.
நம்முடைய தமிழ்நாடு அரசாங்கம், தாய்மார்களுக்கு சமையல் அறையிலிருந்து கொஞ்சம் விடுதலை கொடுத்திருக்கிறது. காலையில் பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்குத் தாய்மார்கள் காலைச் சிற்றுண்டியை சமைத்துத் தரவேண்டும் என்கிற அவசியமில்லை. பள்ளிக்கூடங்களிலேயே காலைச் சிற்றுண்டித் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
சத்துணவுத் திட்டமாக மதிய சாப்பாடும் பள்ளிக்கூடத்திலேயே கிடைக்கிறது. இன்னும் இரவு சாப்பாடு மட்டும்தான் மீதி. அதையும் கொடுத்துவிட்டால், பள்ளிக்கூடத்திலேயே மாணவர்கள் தங்கிவிடுவார்கள், வீட்டிற்கே வரமாட்டார்கள்.
எனவேதான், தோழர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில், படிப்பது, சிந்திப்பது, பெரியாருடைய வாழ்வியலைப் படிப்பது – ஆடம்பரத்தை நீக்கி, எளிமையாக வாழ்வது போன்ற சிறப்புகளைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.
மே 20 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் போராட்டத்தில், மாணவர் கழகத்தினர், மகளிரணியினரும் பங்கேற்கவேண்டும்.
(தொடரும்)