மேட்டுப்பாளையம், மே 4- மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பணி தீவிரமாக நடந்து வருகிறது.
காரமடை கல்வி வட்டாரத்தில் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என 144 பள்ளிகள் உள்ளன. இதில் 96 பள்ளிகள் துவக்கப் பள்ளிகள் ஆகும்.
தற்போது இந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக குழந்தைகளை கவரும் வண்ணம் பிரபல கார்டூன் கதாபத்திரமான மிக்கி மவுஸ் வேடமிட்ட நபர் ஒருவரை ஆசிரியர்கள் வீடு வீடாக அழைத்து சென்று, அரசு பள்ளிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. காலை உணவு திட்டம், உதவி தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் இடத்தில் எடுத்து சொல்லி, மாணவர்கள் சேர்க்கையில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, அரசு பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள ‘மாணவர் மனசு’ புகார் பெட்டி, பள்ளி மேலாண்மை குழு வாயிலாக ஏற்படுத்தப்படும் போக்சோ விழிப்புணர்வு, பள்ளி குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள், குட் டச், பேட் டச் போன்ற விழிப்புணர்வு, மலைக்கிராமங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர ஆட்டோ, ஜீப் போன்ற இலவச வாகன ஏற்பாடுகள் ஆகியவை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, காரமடை வட்டார வள மய்ய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் கூறுகையில், ”கடந்தாண்டு 540க்கும் மேற்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைத்தோம்.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் துவக்க பள்ளிகளுக்கு சென்று அங்கு 5ஆம் வகுப்பு படிப்பை முடிக்கும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, 6ஆம் வகுப்பை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர அறிவுறுத்தி வருகின்றனர்,” என்றார்.
மேட்டுப்பாளையம் லயன்ஸ் கிளப் உறுப்பினர் ஜெயராமன் கூறுகையில், ”கல்லாறு மற்றும் காந்தி நகர் அரசு பள்ளிகளில் முதலில் சேரும் 10 மாணவர்களுக்கு லயன்ஸ் கிளப் சார்பில் வெள்ளி காசு வழங்க உள்ளோம்,” என்றார்.