சென்னை, ஏப். 28- சென்னை பெருநகர காவல் துறை, 2025ஆம் ஆண்டில் இதுவரை பெறப்பட்ட 69,628 அவசரகால அழைப்புகளுக்கு சராசரியாக 5 நிமிடங்களுக்குள் பதிலளித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இது அவசர காலங்களில் பொதுமக்களுக்கு விரைவான உதவியை வழங்குவதில் காவல்துறையின் செயல்திறனைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையின் விரைவான செயல்பாடுகள் தொடர்பாக காவல்துறை ஆணையர் அருண் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
ரோந்து
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 12 காவல் மாவட்டங்களிலும் மொத்தம் 234 ரோந்து வாகனங்கள், கூடுதலாக 29 ரோந்து வாகனங்கள், 98 ஜிப்ஸி ரோந்து வாகனங்கள் மற்றும் 25 சிறப்பு மொபைல் ரோந்து வாகனங்கள் என மொத்தம் கணிசமான எண்ணிக்கையிலான வாகனங்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (SPMCR) அவசரகால உதவி எண் 100 மூலமாகவும், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பிற உதவி எண்கள் மூலமாகவும் வரும் அழைப்புகள் உடனடியாக வயர்லெஸ் மூலம் அருகிலுள்ள ரோந்து வாகனங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
அனைத்து ரோந்து வாகனங்களும் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படுவதாகவும், அவற்றின் நகர்வுகள் மற்றும் அழைப்புகளுக்குப் பதிலளிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோந்து வாகனங்கள் குற்றச்சம்பவங்கள் அதிகம் நிகழக்கூடிய அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து மய்யங்களுக்கு அருகில் வியூக ரீதியாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் அவசரகாலத் தேவைகளுக்குப் பதிலளிப்பது மட்டுமின்றி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், மின்சார வாரியம், சென்னை மாநகராட்சி போன்ற பிற அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பேரிடர் காலங்களிலும், பிற அவசரச் சூழ்நிலைகளிலும் உதவுகின்றன.
69 ஆயிரம் அழைப்புகள்
இந்த ஆண்டில் பெறப்பட்ட மொத்த 69,629 அவசரகால அழைப்புகளில், 100 உதவி எண்ணுக்கு மட்டும் 60,417 அழைப்புகள் வந்துள்ளன. மீதமுள்ள 9,211 அழைப்புகள் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக உதவி எண்களுக்கு வந்துள்ளன.
அண்டை வீடுகளில் ஏற்படும் சிறு பிரச்சினைகள் முதல் சாலை விபத்துகள், மருத்துவ அவசரங்கள் மற்றும் பிற சட்டம் ஒழுங்கு தொடர்பான நிகழ்வுகள் வரை பல்வேறு அழைப்புகளுக்கு இந்த ரோந்து வாகனங்கள் பதிலளித்துள்ளன.
போக்குவரத்து நெரிசல் அல்லது எதிர்பாராத உள்கட்டமைப்பு தொடர்பான தாமதங்கள் சில சமயங்களில் ஏற்படக்கூடும் என்றாலும், பெரும்பாலான அவசரகால அழைப்புகளுக்கு 5 நிமிட பதில் நேர இலக்கை அடைய முடிந்துள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இது, நகரின் பாதுகாப்பு மற்றும் மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் காவல் துறையின் விரைவான செயல்திறனைக் குறிக்கிறது என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அருண் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.