பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக  ‘நடுநிலை விசாரணைக்கு’ தயார்! பாக். பிரதமர் அறிவிப்பு

viduthalai
3 Min Read

சிறீநகர், ஏப்.27- பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ‘நடுநிலை விசாரணைக்கு’ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

“எந்தவொரு நடுநிலை, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் திறந்திருக்கிறது” என்று அபோதாபாத்தில் உள்ள இராணுவ அகாடமியில் நடந்த ஒரு விழாவின் போது ஷெரீப் கூறினார்.

அதேவேளையில், நாட்டின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க பாகிஸ்தான் படைகள் முழுத் திறனுடனும் தயாராக உள்ளதாகவும், 2019 பிப்ரவரி மாதம் இந்தியா நடத்தியது போல் ஒரு திட்டமிட்ட தாக்குதலை நடத்த நினைத்தால் பதிலடி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“பன்னாட்டு ஆய்வாளர்கள்” நடத்தும் எந்தவொரு விசாரணைக்கும் இஸ்லாமாபாத் “ஒத்துழைக்கத் தயாராக” இருப்பதாக பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியதைத் தொடர்ந்து பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் 26.4.2025 அன்று பல பயங்கரவாதிகளின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியதாகக் கூறப்படுகிறது.

 

பிளஸ் 1 மாணவர்களுக்கு நல்ல செய்தி!
கருணை மதிப்பெண் குறித்து முக்கிய அறிவிப்பு!

சென்னை, ஏப். 27- பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை 7,557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் 3316 தேர்வு மய்யங்களில் எழுதினர். இந்நிலையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 4ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24 கேள்வி தவறாக கேட்கப்பட்டதால் எந்த பதிலை எழுதி இருந்தாலும் 2 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை எற்படுத்தியுள்ளது. வரும் மே 19ஆம் தேதி 11ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே ஒரு மதிப்பெண் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேரடி விற்பனைத் துறையில் தமிழ்நாடு முன்னிலை
மகளிர் பங்களிப்பு 45 விழுக்காடு

சென்னை, ஏப்ரல் 27- நேரடி விற்பனை சங்க கூட்டமைப்பு, ஷூலினி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஏப்ரல் 24, 2025 அன்று சென்னையில் நேரடி விற்பனையாளர்களுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்ச்சியை பேசிய நேரடி விற்பனை சங்கங்களின் கூட்டமைப்பு  தலைவர் ஏ.பி.ரெட்டி கூறுகையில்,

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு எப்போதும் இத்துறையில்  முன்னணியில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தது ஒரு வெற்றிகரமான நேரடி விற்பனை நிறுவனத்தைக் கொண்டுள்ளது. இந்தத் துறை ஆண்டு விற்பனையில் ரூ.26,000 கோடியை ஈர்க்கக்கூடியதாக விரிவடைந்துள்ளது.

இதில் நேரடி விற்பனை சங்க உறுப்பினர் நிறுவனங்கள் கூட்டமைப்பு தோராயமாக 31 விழுக்காடு பங்களிக்கின்றன. நேரடி விற்பனையாளர்களில் 45 விழுக்காடு பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது, அவர்களில் பலர் தனிப்பட்ட மட்டத்தில் குறிப்பிட்ட நல்வாழ்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட சுகாதாரம் தொடர்பான தயாரிப்புகளில் கவனம் செலுத்துகிறார்கள்.

2020 ஆம் ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், சவாலான ஆண்டில்தான் நேரடி விற்பனை உண்மையிலேயே அதன் மதிப்பை நிரூபித்தது. வேலைகளை இழந்து மாற்று வருமான ஆதாரத்தைத் தேடும் பலருக்கு முதல் தேர்வாக இத்துறை வெளிப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் நேரடி விற்பனை விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த உந்துதல் மேலும் வலுப்படுத்தப்பட்டது, இதன் விளைவாக இத்துறை ஆண்டுக்கு ஆண்டு 12 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை நிலையான தொழில் வளர்ச்சி ஏற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *