விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட  3,935 காலிப் பணியிடங்களுக்கு ஜூலை 12ஆம் தேதி குரூப் 4 தேர்வு

viduthalai
3 Min Read

 

சென்னை, ஏப்.26– விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பணியில் காலியாக உள்ள 3935 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க மே 24ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 12ஆம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) 215 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 1,621, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, தட்டச்சர் 1,099, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 உள்ளிட்ட 25 வகையான பணிகளில் 3935 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றுள்ளன.

இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு 25ஆம் தேதி (நேற்று) முதல் மே 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இத்தேர்வுக்கு 10ஆம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். பகுதி ‘அ’வில் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 வினாக்களும், பகுதி ‘ஆ’வில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவு மனக்கணக்கில் 25 வினாக்கள் என 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பகுதி ‘அ’வில் குறைந்தபட்சம் 40 சதவீதம் (60 மதிப்பெண்கள்) பெற வேண்டும். இந்த மதிப்பெண் பெற்றால் மட்டுமே விடைத்தாளின் பகுதி ‘ஆ’ மதிப்பீடு செய்யப்படும். இந்த தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகுதி அ, ஆ ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் இந்த தேர்வானது நடைபெறும். தேர்வறைகளுக்குள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இதேபோல் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் போது இரு மாவட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றில் உள்ள தேர்வு மய்யங்களில் ஒன்றில் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

கடந்த 2024ஆம் ஆண்டு குரூப் 4 பதவியில் 9491 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு எழுத 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பித்தனர். அதேபோல இந்தாண்டு நிரப்பப்பட உள்ள தேர்வுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் 4 தேர்வு எழுத 10ஆம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி என்பதால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் போட்டி போட்டு தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *