சென்னை, ஏப். 23- விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100 வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ, விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அளித்த பதில்:
100 பேருக்கு பணி நியமன ஆணை
கடந்த ஆண்டு சட்டப் பேரவையில், மாற்றுத் திறனாளி வீரர்கள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்திருந்தேன். அதன்படி கடந்த ஆண்டு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 104 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டில் காவல் துறையில் 11 பேர் சேர்ந்துள்ளனர். தற்போது காவல் துறையில் 32 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. விரைவில் இரண்டாம் நிலை காவலர் பொறுப்புக்கும் அந்த விண்ணப்பங்கள் கோரப்படும்.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்பதற்கு முன்பே பயிற்சிக் கட்டணம், பயண கட்டணம் ஆகியவை தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுன்டேஷன் மூலம் தொடர்ந்து நிதி உதவிகளை அளித்து வருகிறோம். இதுவரை 198 பாரா விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் ரூ.4.50 கோடி செலவு செய்திருக்கிறோம். அவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி பெற்ற பின்பு, மற்ற வீரர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக இதுவரை 196 பாரா வீரர்களுக்கு ரூ.27 கோடி வழங்கியுள்ளது.
3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ்
இந்த 3 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 5 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 100 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ள நிலையில், அதில் குறைந்தபட்சம் 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்
தமிழ்நாட்டுக்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும்
கருநாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
புதுடில்லி, ஏப்.23- காவிரி மேலாண்மை ஆணையத்தின் 39ஆவது கூட்டம் டில்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று (22.4.2025) நடைபெற்றது. இதில் 4 மாநிலங்களில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வழக்கமான நடவடிக்கைகளுக்கு பிறகு நீர் பங்கீடு பற்றி பேசப்பட்டது. ஏற்கெனவே கடந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மே மாதம் வரை மாதத்துக்கு தலா 2.5 டி. எம்.சி. தண்ணீரை கருநாடகம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி மே மாதத்துக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் தவிர்க்காது வழங்க வேண்டும் என நேற்றைய கூட் டத்தில் உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.