உலகில் பல உயரமான பனிமலைகளின் குகைப்பகுதிகளில் பல்வேறு உருவங்களில் பனிக்கட்டிகள் உருவாகும்.
அப்படி ஒன்றுதான் காஷ்மீரின் பகல்காவ் பகுதிக்கு மேலே 12,800 அடி உயரத்தில் உள்ள அமர்நாத் என்னும் குகை. இந்தக் குகையின் ஒரு ஓரத்தில் உள்ள துளை வழியாக நீர் வழிந்து கொண்டே இருக்கும் – பனிக்காலத்தில் இந்த நீர் அப்படியே லிங்க உருவம்போல் உறைந்துவிடும்.
60 ஆண்டுகளுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டு சென்ற இஸ்லாமிய நாடோடிகள் இந்தக்குகையில் தங்கினர். அப்போது வித்தியாசமான வடிவில் பனி உறைந்து இருப்பதைக் கண்டு மலையடிவாரத்திற்கு வந்து பொது மக்களிடம் கூறினர். இதுதான் நடந்தது; அதன் பிறகு சிலர் அந்தப் பனிக் குகைக்குச் சென்றனர். அப்போது இதில் காசுபார்க்க திட்டமிட்ட ஒரு கூட்டம் பனிமலையில் லிங்கம் என்று கூறி கதை விட்டது, அப்படித் துவங்கியதுதான் இந்த அமர்நாத் குகை லிங்கத்தின் கதை!
பகுத்தறிவாளர் ஜோசப் எடமருகு இதை அறிவியல் ரீதியாக அம்பலப்படுத்தினார்.
இந்தப் பனிக் கட்டிக்கும் ஒரு கதைவிட்டனர். சிவன் கயிலாயத்தில் தாண்டவம் ஆடிய பிறகு கோபம் தணிந்து இந்தக் குகையில் தவமிருந்து அப்படியே பனிலிங்க வடிவில் தங்கிவிட்டார் என்று கதையளக்க – மெல்ல மெல்ல மக்கள் கூட்டம் அங்கு செல்ல ஆரம்பித்தது, 1990 களுக்குப் பிறகு தொலைக்காட்சிகள் பிரபலமான காலகட்டத்தில் இந்த அமர்நாத் பனிலிங்கம் குறித்தும் அதிகம் பேசப்பட்டது. பிறகு அங்கு செல்ல பெருங்கூட்டம் உருவானது.
இது தொடர்பாக பல்வேறு கதைகள் நாடுமுழுவதும் சொல்லப்பட ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை ஆன்மிக பயணம் என்ற பெயரில் பெரும் கூட்டம் அங்கு செல்லத் துவங்கியது. இந்தக் கூட்டத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படவே அமர்நாத் லிங்கம் மேலும் பிரபல மானது. இந்த நிலையில் தற்போது பாதுகாப்பிற்காக – பதிவு செய்பவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு உத்தர விட்டது. அமர்நாத் யாத்திரையை ஒருங்கிணைக்கும் அமைப்பு அங்கு செல்லும் பயணிகள் பதிவு செய்யவும் நுழைவுச்சீட்டு வாங்கவும் டில்லி, மும்பை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் அலுவலகங்களைத் திறந்துள்ளது. (பக்தி என்பது வியாபாரம் தானே!)
இங்கும் போலிகள் நுழைந்துவிட்டனர். கடந்த சில ஆண்டு களாக இவ்வாறு போலி அனுமதிச் சீட்டுகள் வழங்குவது அதிகரித்துவிட்டது. இந்தக் குகை கோவிலுக்கு இந்த ஆண்டு செல்வதற்கான பயணம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது; இது வரும் ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பயணம் மேற்கொள்ள விரும்பும் நபர்கள் அமர்நாத் கோவில் இணையதளம் மூலமாகவோ, அல்லது நேரடி பதிவு மய்யங்கள் மூலமாகவோ முன்பதிவு செய்து பதிவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுச்சீட்டுள் கத்துவா, சம்பா உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகளில் பரிசோதனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் முதல் நாளில் (1.7.2023) சுமார் 500 க்கும் மேற்பட்ட பயணிகள் குழு டில்லியிலிருந்து அமர்நாத் சென் றது, அவர்களை கத்துவா சோதனைச்சாவடியில் சோதனை செய்த போது அவர்களிடம் உள்ளவை அனைத்தும் இணைய தளத்தில் சென்ற ஆண்டு வந்து சென்றவர்கள் பதிவிட்ட பழைய அனுமதிச்சீட்டு என்பதும், அவர்கள் தேதி மற்றும் ஆண்டை மட்டும் ‘எடிட்’ செய்திருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டில்லியைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் அவரது உதவியாளர்கள் 2 பேர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அமர்நாத்தில் இருந்து வந்த சில சாமியார்கள் பக்தர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் நுழைவுச்சீட்டுத் தருவதாக கூறி சில நூறு சீட்டுகளை கொடுத்துள்ளனர். அவர்களும் அதனை கலர் போட்டோகாப்பி எடுத்து பல ஆயிரங்களுக்கு விற்றது தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த சாமியார்கள் யார் எங்கிருந்து வந்தனர்? மேலும் இவர்கள் எத்தனைப் பேர்களுக்கு இது போன்று போலி சீட்டுகளைக் கொடுத்துள்ளனர் என்று காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.
2017 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து வந்த ஒரு பயணிகள் குழுவும் இதே போல் ஒரு சாமியாரிடம் இருந்து அமர்நாத் பனிக்குகை நுழைவுச்சீட்டை வாங்கி ஏமாந்த செய்தி வெளியானது, கரோனா பரவலின் போது அமர்நாத் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது. (கடவுளைவிட கரோனா சக்தி வாய்ந்தது) – தற்போது மீண்டும் அமர்நாத் சீசன் துவங்கிய நிலையில் சாமியார்கள் தங்களின் கைவரிசையைக் காட்டத் துவங்கி உள்ளனர்.
இவ்வாறு போலி சீட்டுகள் விநியோகித்தவர்கள் ஒரே மாதிரி ஏமாற்றி வருவதால் நாடு முழுவதும் ஒரே கும்பல் சாமியார் வேடமிட்டு இந்த மோசடிகளைச் செய்ய வாய்ப்புள்ளது என்று விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர். மக்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய்களை எளிதில் சம்பாதிக்க சாமியார் வேடம் நன்றாக பயன்படுகிறது.
பக்தி ஒழுக்கத்தை வளர்க்கும் யோக்கியதை இதுதானா?
கடைசியில் ஒரு கேள்வி. அது என்ன “சீசன் கடவுள்?” பூக்கள்கூட பாம்பு படம் எடுப்பது போல காட்சி அளிக்கும். அது உடனே நாக சாமியா?
பகுத்தறிவின் அவசியத்தைத் தெரிந்து கொள்வீர்!