திருவண்ணாமலை, ஏப்.21- கலசபாக்கம் அருகே சுடுகாட்டில் நள்ளிரவில் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நள்ளிரவில் பூஜை நடத்திய 2 மந்திரவாதிகளை காவல் துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
சுடுகாட்டில் நள்ளிரவில் பூஜை
சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருவண்ணா மலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த கீழ்பார். – கிராமத்துக்கு வந்துள்ளனர். அவர்களுடன் மந்திரவாதி – ஒருவரும் வந்துள்ளார். அவர்கள் கீழ்பாலூரில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் அங்கும், இங்குமாக சுற்றிக் கொண் டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்களுடன் வந்த மந்திரவாதி மற்றும் மேல்சோழங்குப்பத்தை சேர்ந்த மந்திரவாதி உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் கோவில் அருகில் காஞ்சிகிராம எல்லை சுடுகாட்டில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் யாகம் வளர்த்து அதில் கோழி, பன்றி போன்றவற்றை பலி கொடுத்து பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் சுடுகாட்டில் நள்ளிரவில் சத்தம் கேட்டதை அறிந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே காவலர்கள் அங்கு வந்து 2 மந்திரவாதிகள் உள்பட சிலரை பிடித்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், “சென்னையில் இருந்து வந்த குடும்பத்தினருடன் கைக்குழந்தை இருந்தது. ஆனால் தற்போது குழந்தை இல்லை. இதனால் அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? என சந்தேகம் எழுகிறது. மேலும் குழந்தைக்கு பயன்படுத்திய பால் பாட்டில் சுடுகாட்டில் இருக்கிறது. அவர்கள் விட்டுச்சென்ற பைகளை பார்த்தபோது அதில் எலும்புகளும் இருந்துள்ளன என்றனர். இதுகுறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.