ஸ்ரீமான் ஆர்.என். ரவி என்கிற ஆன்மிக உபந்நியாசகர் (ஆளுநர் தான்) ஒவ்வொரு நாளும் தன் உபதேசங்களை அள்ளி விடுகிறார். சுருக்கமாகச் சொல்லப் போனால், ஆளுநர் என்கிற பதவிக்கான கடமைகளைத் தவிர, வேறு பிரச்சினைகளில் தலையிட்டு, வாய்க்கு வந்தவாறு உதறித் தள்ளிக் கொண்டு இருக்கிறார்.
எடுத்துக்காட்டாக சென்னை திருவல்லிக்கேணி சிறீ ராகவேந்திரா மடத்தின் பொன் விழாவையொட்டி புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தன் அணுக்களில் எல்லாம் தேக்கி வைத்துள்ள வேத இதிகாச, புராண, பார்ப்பனீய சங்கதிகளை எல்லாம் சகட்டு மேனிக்கு பிரசங்கம் செய்துள்ளார்.
“மனிதநேயத்தின் உருவமாக வாழ்ந்தவர் ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள். தமிழ்நாடு ஒரு புண்ணிய பூமி. பல ரிஷிகள், முனிவர்கள் வாழ்ந்த பூமி இது. சனாதன தர்மம்தான் பாரதத்தை உருவாக்கியது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வேதப்புரட்சி ஏற்பட்ட போது சனாதன தர்மம் என்ற ஒளி பரவத்தொடங்கியது. பாரதம் என்று சனாதன தர்ம இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு அறிமுகம் தேவைப்பட்டது, ஆனால் பாரதம் என்ற சொல்லுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தியா என்ற பெயரை ஆங்கிலேயர்கள்தான் வழங்கினார்கள். இந்தியாவின் அசல் அரசியலமைப்பில் முதல் வரைபடமாகக் குருகுலம்தான் இருந்தது. அதுவே நம் சமுதாயத்தின் தொடக்கம். சனாதன தர்மம் அனை வரையும் உள்ளடக்கியது. யாரையும் தவிர்க்காது.
1,000 ஆண்டுகளாக அந்நியர் படையெடுப்பு, ஆட்சி என்று இருந்ததால், இந்தியா என்பது 1947-இல் பிறந்ததாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.
ஸ்ரீ ராமானுஜர் உள்ளிட்ட பல ஞானிகளை உருவாக்கியது இந்த பூமி. இந்த பூமியில் பாகுபாடு கிடையாது. அந்த கலாசாரத்தில் உருவான புண்ணிய ஆத்மாவே ஸ்ரீராகவேந்திரர். இந்தியா என்னும் பாரதம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கலாசாரத்தை உடையது. இது இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டுக்கும் பொருந் தாது. சென்னை நகரம் பல கலைஞர்களுக்கும், அறிவார்ந்தவர் களுக்கும் சொந்தமானது. சனாதன தர்மம் என்பது பாகுபாடு பார்ப் பது, சமூகநீதிக்கு எதிரானது என்று யாராவது கூறினால், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இந்தியா, தமிழ்நாடு, சென்னை ஆகியவை சனாதன தர்மத்தால் உயிர்ப்புடன் உள்ளன.
பாரதத்தையும், சனாதன தர்மத்தையும் பிரிக்கவே முடியாது. சனாதன தர்மம் இல்லையென்று கூறினால் பாரதமும் இல்லையென்று கூற வேண்டும். பாரதம் இருந்தால் சனாதன தர்மமும் இருக்கும். மனிதர்கள் உள்பட உயிரினங்கள் வாழ்வது பூமியில்தான்; பிற கோள்களில் அல்ல. அதுபோல் இந்தியா என்னும் பாரதத்தில் தான் ரிஷிகள், முனிவர்கள் வாழ்ந்துள்ளனர். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதையே சனாதன தர்மம் பேசுகிறது.”
இதனைப் படித்துப் பார்த்தால் பாரத பிரசங்கியா – ஆளுநரா என்ற சந்தேகம் எழத்தான் செய்யும் – கையில் ஒரு ‘சிஞ்சான்’ இல்லாதது தான் பாக்கி. சனாதனம், சனாதனம் என்று சதா கச்சேரி நடத்திக் கொண்டு இருக்கிறாரே – இதுவரை “சனாதனம்” என்றால் என்ன என்ற கேள்விக்கு விளக்கம் சொன்னதுண்டா?
பஞ்ச பாண்டவர் என்றால் நான்கு விரல்களைக் காட்டி கரும்பலகையில் எழுதும்போது மூன்று என்ற எண்ணை எழுதுவது போன்ற கேலிக் கூத்தாக அல்லவா இருக்கிறது ஆளுநரின் ஆன்மிகச் சொற்பொழிவுகள்.
சனாதனத்தின் கருப்பைக்குள்ளிருக்கும் “புருஷசூக்தம்” என்ன கூறுகிறது?
தலையிலிருந்து பிராமணர்களும், தோள்களிலிருந்து ராஜ் யங்களை நடத்துகின்ற க்ஷத்திரியர்களும், தொடைப் பகுதிகளில் இருந்து வியாபாரம், தொழில் செய்கின்ற வைசியர்களும், பாதங்களி லிருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள். இந்த நான்கு வர்ணத்தாருமே ஒரே பிரம்மத்தின் ஆதி ஆற்றலின் உறுப்புகள்தான்.
சூத்திரர்கள் என்று சொல்லும்போது எந்தவித சிறப்புத் திறமையும் இல்லாத பொதுவானவர்கள் எனப்பட்டனர் என்கிறது புருஷசூக்தம்.
பிறப்பிலேயே நான்கு வருணங்களைக் குறிப்பிட்டு விட்டு, அந்த நான்கு வர்ணத்தாருக்கும் தனித்தனி தகுதிகளை, தொழில்களையும் உருவாக்கி வைத்துவிட்டு, சனாதனத்தைச் சாடுவோரைப் பார்த்து சனாதனம் சமூக நீதிக்கு எதிரானது என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று ஒருவர் கூறுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?
“கேட்பவன் கேணயனாக இருந்தால் எருமை மாடு ஏராப்ளேன் ஓட்டுகிறது” என்று கூறுவார்களாம். அந்தக் கதையைத் தானே ஆளுநர் பேச்சு நினைவூட்டுகிறது.
பிறப்பின் அடிப்படையில் தொழில் என்பது சனாதனம் புருஷ சூக்தம் என்றால், இவர் எப்படி ஆளுநராக வர முடியும்?
பார்ப்பனர்கள் எப்படி கோட், சூட் போட முடியும் – கடல் கடந்து சென்று படிக்க முடியும். உத்தியோகம் பார்க்க முடியும் என்ற கேள்வி எழாதா?
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதையே சனாதன தர்மம் பேசுகிறது என்று ஆளுநர் பேசி இருப்பது தான் நகைச்சுவையின் உச்சக் கட்டம்!
யாவரும் கேளிர் என்பதை சனாதனம் ஒப்புக் கொண்டால் ஜாதி இருப்பை ஏற்றுக் கொள்ள முடியுமா?
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று பேசும் இந்துத் துவா சக்திகள் “எல்லோரும் சமநிலை – ஒரே ஜாதி” என்று சொல்ல முன் வருவார்களா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி எங்கும் எழுப்பி வரும் கேள்விக்கு என்ன பதில்?
“பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் வேதப் புரட்சி ஏற்பட்டபோது, சனாதன தர்மம் என்ற ஒளி பரவத் தொடங் கியது” என்பதும் ஆளுநர் பெருமானின் “அருள்வாக்கு” தான்!
பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் வேதப் புரட்சி ஏற்பட்டதாம் – பிரசங்கம் செய்கிறார் ஆளுநர் பெருமான்.
அந்த வேதப் புரட்சிக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமே! ரிக்வேதம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது?
“தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்”
இதன் பொருள் என்ன?
“இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங் களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப் பட்டவை. பிராமணர்களே நமது கடவுள்”
இதுதான் ஸ்ரீமான் ஆளுநர் கூறும் வேதப் புரட்சியோ!
பதில் கூறட்டும் பார்க்கலாம்.