நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால் ஒன்றிய அரசு தகவல்

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஏப்.6- இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் பாா்வையாளா்களுக்கான நுழைவுக் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் நுழைவுக் கட்டணமாக ரூ.297 கோடி கிடைத்துள்ளது.
இது தொடா்பான கேள்விக்கு ஒன்றிய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட பொது மக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கடந்த 5 ஆண்டுகளாக தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. 5 ஆண்டுகளில் தாஜ்மஹாலைப் பாா்வையிட ரூ.297 கோடி நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
2023-2024 நிதியாண்டில் டில்லியில் உள்ள குதுப்மினாா் ரூ.23.80 கோடி நுழைவுக் கட்டணம் ஈட்டி இரண்டாவது இடத்திலும் டில்லி செங்கோட்டை ரூ.18.08 கோடி வருவாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மாமல்லபுரம்

2020-2021 நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டியதில் தாஜ்மஹாலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தது. ஒடிசா மாநிலம் கோனாா்க்கில் உள்ள சூரியனாா் கோயில் மூன்றாவது இடத்தில் இருந்தது.
2019-2020 நிதியாண்டில் ஆக்ரா கோட்டை இரண்டாவது இடத்திலும், குதுப்மினாா் மூன்றாவது இடத்திலும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றியத்தில் புதிய அரசு அமைந்தால் வக்பு சட்டம் ரத்து!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா

இந்தியா

கொல்கத்தா, ஏப்.6- ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இதனை மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜனதா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. ஒன்றியத்தில் உள்ள பா.ஜனதா அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும். அதற்கான திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

வக்பு மசோதாவை எதிர்ப்பது ஏன்?
உத்தவ் தாக்கரே பேட்டி

இந்தியா

மும்பை, ஏப்.6- வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காங்கிரசின் அழுத்தம் காரணம் இல்லை என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

வக்பு வாரிய திருத்த மசோதா குறித்து உத்தவ் சிவசேனா தலைவரும், மேனாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே 4.4.2025 அன்று மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் சில நல்ல கூறுகள் உள்ளன. ஆனால் நீங்கள் வக்பு நிலத்தின் மீது கண்வைத்துள்ள நோக்கம் வேறு.
அந்த நிலத்தை அபகரித்து உங்களது தொழில் அதிபர் நண்பர்களுக்கு கொடுக்க விரும்புகிறீர்கள். இந்த போலித்தனத்தால் நாங்கள் மசோதாவை எதிர்க்கிறோம். கோவில் அறக்கட்டளைகள், தேவாலயங்கள், குருத்வாராக்களிடமும் நிலம் உள்ளது. நீங்கள் நாளை இந்த நிலங்கள் மீதும் கண்வைக்கலாம். வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காங்கிரசின் அழுத்தம் காரணம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *