மதுரை, ஏப்,6- அரசுத்துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வரும் நிலையில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்தியா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
4.4.2025 அன்று மாநாட்டு வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு இதுகுறித்து கூறியது வருமாறு:
13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் முழு அதிகாரங்களை கொண்ட மாநில அரசை மீண்டும் ஏற்படுத்தவேண்டும், ஜனநாயகத்தை முழுமையாக மீட்டெடுக்கவேண்டும், கியூபா மீதான அமெரிக்காவின் மனிதநேயமற்ற பொருளாதார தடைகளை கண்டித்தும் தனியார் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு வேளாண் விளைபொருள் குறித்த ஒன்றிய அரசின் கொள்கையை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தனியார் துறையிலும் இட ஒதுக்கிடு
பொதுமக்களின் அடிப்படை தேவையை அடிப்படை உரிமையாக்க கோரும் தீர்மானம், அரசுத்துறைகளில் வேலை வாய்ப்பு குறைந்து வரும் நிலையில் தனியார் துறையிலும் எஸ்.சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியும், பொதுத்துறை மின்சார வாரியங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆழ் கடல் கனிம வளம் எடுக்க அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துள்ள வன்முறைக்கு எதிராகவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சம உரிமையும் அவர்கள் கண்ணியமான முறையில் வாழ்வதை உறுதிப்படுத்தவும், மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்துடனும் அவர்களுக்கு பாகுபாடற்ற முறையில் நீதியை உறுதிப்படுத்துவது உள்பட 13 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு பி.வி.ராகவலு கூறினார்.