அறிஞர் அண்ணா
“ஆர் யூ எவேடிங் தி இஷ்யூ” என்று சொன்னதால் தான் பலன் கிடைத்தது. ஒரு வாரத்தில் சொல்லுகிறார்.. “நான் ஒன்றும் நழுவவில்லை; அப்படி நழுவும் பழக்கம் எனக்கு இல்லை; இன்னும் சொன்னால் நான் எல்லாவற்றிலும் தலையிடுகிறேன் என்று எனது நண்பர்கள் குறை சொல்லு கிறார்கள். அது வளராமல் இருக்கவேண்டும் “- இப்படிக் குறிப்பிட்டுவிட்டு மகிழத்தக்க செய்தி சொன்னார்: “திரு. பிரும்மானந்த ரெட்டி அவர்களையும், திரு.நிஜலிங்கப்பா அவர் களையும் நான் பார்த்துக் கொள்கிறேன்; திரு. நம்பூதிரிபாத் அவர்களை நீ பார்த்துக்கொள் “-எனக்கு மூன்றில் இரண்டு பங்கு பளு குறைந்தது.
நான் எப்போதும் திருவள்ளுவரைப் பார்த்து விட்டுத் தான் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். வார்த்தைக்கு பயன் இருந்தால்தான் பயன்படுத்துவேன், இல்லாவிட்டால் பயன்படுத்தமாட்டேன். திரு. மார்டின் அவர்கள்கூட அந்த மாதிரித்தான் என்று நினைக்கிறேன்.
சட்டமன்றத்தில் யார் யார் எந்தெந்தப் பேச்சு பேசுவது என்று பிரித்துக்கொள்ளுவது எங்களுக்குப் பழக்கம் இல்லை. உங்களுக்கு அந்தப் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு முறை போட்டுக்கொண்டீர்களோ என்னவோ… அதில் தவறு இல்லை. திரு. சுப்பிரமணியம் அவர்கள் இன்னும் பங்குகொள்ள நிரம்ப இடம் இருக்கிறது. இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரை யில் – தீர்மானத்தினால் ஏற்படுகிற சங்கடங்களைப் பொறுத்த வரையில் இவர்கள் ஈடுபடவேண்டுமென்று விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
இந்த தமிழ் பாடமொழி – பயிற்சிமொழி என்ற பிரச்னை யைப் பொறுத்த வரையில் பல்வேறு கருத்துக்களெல்லாம் சொல்லப்பட்டன. நான் ஆங்கிலத்தைப் புறக்கணிக்கிறவன் அல்ல. ஆனால் ஆங்கிலம்தான் இருக்கவேண்டும். தமிழ் அதற்கு உரிய இடத்தைப் பெறவேண்டாம் என்ற எண்ணம் கொண்டவனும் அல்ல.
தயக்கமில்லை
ஆங்கிலம் எந்தெந்தக் காரியங்களுக்குப் பயன்படுத்தப் படுகிறதோ அந்த அந்தக் காரியங்களுக்கு இந்தியாவில் உள்ள மொழிகளில் எது தகுதி உள்ள மொழி என்றால் அது ‘தமிழ் தமிழ்’ என்று சொல்லத் தயக்கப்படமாட்டேன். அவ்வளவு வளம் உள்ள மொழி.
சென்றமுறை பேசியபடி எல்லாக் கல்லூரிகளிலும் பாடப் புத்தகங்கள் தயாரிப்பது, ஆசிரியர்களைத் தயாராக்குவது ஆகிய காரியங்களில் கொஞ்சம் தயக்கம் காட்டப்பட்டு வரு கிறது.
என்னுடைய திருத்தத்தில் அவர்கள் குறிப் பிட்ட அதையும் இணைத்திருக்கிறேன். அய்ந்து ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் எல்லாக் கல்லூரி களிலும் தமிழைப் பாடமொழியாகவும், பயிற்சி மொழியாகவும் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத் துக்கொள்ளும். நடவடிக்கை எடுத்துக்கொள்ளுவது மட்டு மல்ல. அடுத்த ஆண்டிலேயே சர்க்கார் கல்லூரிகள் அத்தனை யிலும் தமிழ் பாடமொழி ஆகும் என்பதை இன்றையதினம் அறிவிக்க விரும்புகிறேன்.
நண்பர் வினாயகம் குறைபட்டுக்கொண்டார்… “மாணவர் களைப் பிடித்துப் பிடித்து இழுக்கிறீர்கள். அவர்கள் ஓடி ஓடிப் போகிறார்கள் உங்கள் ஆட்சியில்” என்று. ஊரில் இருக்கிற எல்லாத் தொல்லைகளையும் நாங்கள் வந்தவுடன் எங்கள்மேல் போடுகிறீர்கள். ஆனால், புள்ளி விவரம் அப்படிச் சொல்ல வில்லை. நீங்கள் 1966-67-ல் இருந்தீர்கள் அந்த ஆண்டு பி.யூ. ஸி.யில் தமிழைப் பாடமொழியாகக் கொண்டு படித் தவர்களின் எண்ணிக்கை 4,600.
1967 – 68-ல் பாவிகள் நாங்கள் வந்தோம் குறைந்து விட்டது என்று அல்லவா சொன்னார்கள்? ஆம். 4,600 ஆக இருந்தது 6364 ஆகக் குறைந்துபோய் விட்டது
திரு. கே. வினாயகம்: எண்ணிக்கையைப் படித்துக் காட்டியதில் உயர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், அது எவ்வாறு உயர்ந்தது? அவர்களுக்கு வேறு வகுப்புகள் தரமாட்டோம் என்று முதல்வர்கள் மிரட்டி, நீங்கள் தமிழ் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் போய்விடுங்கள் என்று சொல்வதினாலே அந்தப் பிள்ளைகள் வேறு வழியில்லை என்று சேர்ந்திருக்கிறார்கள் என்பது தெரியுமா?
முதலமைச்சர் அறிஞர் அண்ணா: அவர்கள் குற்றச்சாட்டு என்று கருதிக்கொண்டு இதனைச் சொன்னார்கள். ஆனால், அதே முறையை எல்லா முதல்வர்களும் கையாளவில்லையே என்றுதான் நான் வருத்தப்படுகிறேன்.
அடுத்த வருடம் சர்க்கார் கல்லூரிகளிலே தமிழ் பாட மொழியாக இருக்கும் என்பது மட்டும் அல்ல; ஆங்கிலப் பிரிவு அகற்றப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஆனால், அதே நேரத்தில் ஆங்கில அறிவுப் புலமை வராமற் போனால் உலகத்திற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பு நல்லவிதத்திலே இருக்காது. இதைப்பற்றி டாக்டர் ஹண்டே அவர்கள் சொல்வதை வரவேற்கிறேன்.
ம. பொ. சி. அவர்கள்கூட ஆங்கிலத்தை ‘ஒரு’ மொழியாகப் படிப்பதை மறுக்கவில்லை என்கிறார்கள். ஆகையால் விரைவில் பல்கலைக்கழகத் துணைவேந்தரைக் கலந்து தமிழைப் பாட மொழியாகவும் பயிற்சி மொழியாகவும் ஆக்கி, அதனால் ஆங்கில அறிவு குறையும் என்று கருதினால் ஆங்கில அறிவை அதிகப்படுத்த என்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்பதைப் பற்றி ஆராய்ந்து, ஆங்கில அறிவும் கெடாமல் தமிழ் உரிமையும் பாதுகாக்கப்படக்கூடிய அளவில் நம்முடைய கல்வித்திட்டம் திருத்தி அமைக்கப்படவேண்டும் என்பதையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
தவறு செய்யமாட்டேன்
மற்றபடி முன்னாலே அப்படிப் பேசினோம். இப்பொழுது இப்படிப் பேசுகிறோம் என்று சொல்லுவது பத்திரிகைகளிலே இங்குமங்கும் பார்த்துவிட்டு அதைக்கொண்டு அப்படிப் பேசு கிறார்கள். ஒன்றை நம்முடைய நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அது இத்துடன் தொடர்புடையது அல்ல என்றாலும், அவ்வளவு சுலபத்திலே பிடி கிடைக்குமாறு நான் தவறுகள் செய்யமாட்டேன். ரொம்பத் தேடித் தேடிப் பார்ப்பதை விட்டுவிட்டு வேறு ஏதாவது இருந்தால் பார்க்க லாம் அவ்வளவு சுலபத்தில் பிடி கிடைக்காது. ஏனென் றால் சுயமரியாதைக் காலத்திலேயிருந்து எதையும் துருவித் துருவி ஆராய்ந்து பழக்கப்பட்டவன் நான். மற்றவர்களும் துருவித் துருவிப் பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியும். ஆகையால், என்னுடைய வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தாகத்தான் இருக்கும். அதை நம்முடைய வினாயகம்தான் புரிந்துகொண்டு சொன்னார், “நீங்கள் நேரடியாக வரமாட் டேன் என்கிறீர்களே” என்று. (சிரிப்பு)
அதுமட்டும் அல்ல. ரொம்ப பெரிய பந்தயங்கள் போன்றவைகளிலெல்லாம்கூட இப்பொழுது சுற்றிச்சுற்றி வருகிறார்களே; நான்கு சுற்று அய்ந்து சுற்று என்று, அதிலே இரண்டா வது சுற்றிலே மெதுவாக இருப்பவன் நான்காவது சுற்றிலே முதலிலே வருவான்; அது வளைந்து போவதில் இருக்கிறது.
நேராகப் போனால் கோல் போட இடமே கிடைக் காது, எனவே அவ்வாறு போவதில்லை. இப்படிப் பிடித்துக்கொள் ளலாம் என்று பார்க்கிறீர்கள், சிக்கமாட்டேன்.
நேருவின் உறுதிமொழி
ஆனால் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிற வன் என்று என்னைக் கருதாதீர்கள். எதைப்பற்றியும் ஒரு கட் டம் வைத்துப் பேசுகிறேன். எங்களுடைய இறுதி லட்சியம் 14 மொழிகள் தவிர ஆங்கிலம்; ஆங்கிலமே நீடித்திருக்க வேண்டுமானால் நேருவின் உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும்.
அதற்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் ஆட்சி மொழிச் சட்டமே தடையாக உள்ளது. அதனால் ஏற்படும் சங்கடங்களைத் தடுத்து நிறுத்துவதற்கே இத்தீர்மானத்தைக் கொண்டு வருகிறோம். இதிலேயே திருப்தியடைந்துவிடுவோமா என்றால் மாட்டோம். நம்முடைய கம்யூனிஸ்ட் நண்பருக்குத் தெரியும். தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் தெரியும்.
முதலாளிகளிடம் கோரிக்கைகளை வைக்கும் பொழுது 25 கோரிக்கைகளை வைப்பார்கள். ஆனால், அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் பொழுது முதலாளி 7, 9, 11 டிமாண்டுகளை ஏற்றுக்கொண்டால் போதும் என்று சொல்வார்கள். 7,9,11அய் மட்டும் வைத்தால் முதலாளி 9-வது டிமாண்டை மட்டும் ஏற் றுக்கொண்டு 7-வது டிமாண்டையும் 11-வது டிமாண்டையும் தள்ளிவிடுவாரே என்பதற்காக கோரிக்கைகளை வைக்கும் பொழுது நிறைய கோரிக்கைகளை வைத்து விடுவார்கள்.
அது போல் நம்முடைய கோரிக்கைகளை வைக்கும் போது நிறையக் கோரிக்கைகளை வைத்து அவைகளில் எது எதிலே வெற்றி கிடைக்கும் எனப் பார்த்து பிறகு மற்றவற்றிற்கு வரவேண் டும். இதை ரொம்பப் பெரியவர்கள் செய்தால் ராஜதந்திரம் என்பார்கள்.
சாதாரண ஆள் செய்வதால் நெளிகிறான், வளைகிறான் என்கிறார்கள். நீங்கள் பெரியவர்களாகி இத்தகைய காரியங்களைச் செய்து உலகம் உங்களை ராஜதந்திரி என்று பாராட்டினால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். மாற்றுவதற்காகச் செய்யப்படுவதே அல்ல; உள்ளத்திலே ஒரு துளியும் வஞ்சக நினைப்பில்லாமலேயே திட்டங்களையும், கொள்கைகளையும் வரையறுத்துக்கொண்டு வருகி றோம். நம்முடைய நண்பர் பூவராகன் அவர்கள் நிரம்பப் பேசினார்கள். பட்ஜெட் கூட் டத்திலேயும் நிரம்பப் பேசுவார்கள். பதில் சொல்ல விட்டு விட்டிருந்தால் அந்தச் சந்தர்ப்பத்திலே மொழியைப்பற்றி பேசலாம், இன்றே முடிந்துவிடுகிற பிரச்சினை அல்ல; இதை பட் ஜெட் விவாதத்திலே பேசப்போகிறோம்.
வஞ்சகமின்றி
நான் கொண்டுவந்திருக்கும் திருத்தங்களை ஏற்றுக் கொண்டு என்னுடைய நண்பர்கள் தங்களுடைய திருத்தங் களை வலியுறுத்தாமல் என்னுடைய திருத்தத்தோடு கூடிய தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலை வர்களையும், எல்லாக் கட்சித் தலைவர்களையும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் அண்ணா அவர்கள் சட்டப் பேரவையில் உரையாற்றினார்.
நிறைவு