கல்வி : சோனியா காந்தியின் குற்றச்சாட்டு!

Viduthalai
2 Min Read

இந்தியாவில் மோடி அரசின் கூட்டாட்சி கல்வி கட்டமைப்பை பலவீனப்படுத்தி வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவின் கல்விக் கொள்கை தொடர்பாக ‘3-சி’ நிகழ்ச்சியில், காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி, மோடி அரசைத் தாக்கியுள்ளார். ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சோனியா காந்தி, ‘‘தேசிய கல்விக் கொள்கை கல்வியை வணிகமயமாக்குகிறது. வகுப்புவாத மாக்குகிறது. ஒன்றிய அரசு கூட்டாட்சி கல்வி கட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது. முக்கிய மான கொள்கை முடிவுகளில் இருந்து மாநில அரசுகளை விலக்கி வைப்பதன் மூலம், மோடி அரசு கல்வியின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது.

89,000 பள்ளிகளை மூடுவது, பாஜக-ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடையவர்களைச் சேர்ப்பது போன்ற பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. இந்தியாவின் குழந்தைகள், இளைஞர்களின் கல்வி குறித்து தேசிய கல்விக் கொள்கை மிகவும் அலட்சியமாக உள்ளது. இதில், கல்வி முறை பொது சேவை மனப்பான்மையில் இருந்து பறிக்கப்பட்டு, கல்வியின் தரம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் கல்வி முறையைக் கொல்லுவது நிறுத்தப்பட வேண்டும். கடந்த 11 ஆண்டுகளாக இந்த அரசின் செயல்பாட்டில் கட்டுப்பாடற்ற மய்யப்படுத்தல் ஒரு சிறப்பு அம்சமாக இருந்து வருகிறது. ஆனால், அதன் மோசமான தாக்கம் கல்வித் துறையில்தான் உள்ளது. ஒன்றிய கல்வி ஆலோசனை வாரியம் 2019 முதல் கூடவில்லை. ஒன்றிய மற்றும் மாநில கல்வி அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். வாரியத்தின் கடைசி கூட்டம் செப்டம்பர் 2019-இல் நடைபெற்றது. ஜனநாயக ஆலோசனையை மோடி அரசு புறக்கணிக்கிறது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்பட்டது” என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

காங்கிரசின் மூத்த தலைவராக விளங்கக் கூடிய சோனியா காந்தி அவர்களின் தேசிய கல்விக் கொள்கையைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது – வெறும் அரசியல் பார்வைக்கண் கொண்டு நோக்கத்தக்கதல்ல.
இந்திய துணைக் கண்டத்தில் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி வழங்குவது தொடர்பாக இந்திய அரசமைப்பின் 21A பிரிவு மற்றும் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (Right to Education Act – RTE) என்பது முக்கியமானது.

2002ஆம் ஆண்டு 86ஆவது அரசமைப்பு திருத்தத்தின் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவது அரசின் அடிப்படைக் கடமையாக உறுதி செய்யப்பட்டது.
இதன்படி 100 விழுக்காடு செயல்படுத்தப் பட்டுள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.

கல்வியில் இடைநிற்றல் என்பது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதா? 9 முதல் 12ஆம் வகுப்பு வரை இடை நிற்றல் என்பது 2023–2024ஆம் ஆண்டில் 10.9 விழுக்காடு என்ற நிலை பெருமைப்படத்தக்கது தானா?
இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் புதிய கல்வி என்றும் மும்மொழி படிக்க வேண்டும் என்றும் விடாப்பிடியாகக் கட்டாயப்படுத்துவதும் – இந்தத் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கான கல்வி நிதியை தர மறுப்பதும் ஆரோக்கியமானதுதானா?
5,8,10,11,12ஆம் வகுப்புகளுக்கெல்லாம் அரசு தேர்வு என்பது எல்லாம் இடை நிற்றலை அதிகரிக்கத்தானே செய்யும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதிய கல்வி திட்டத்தைப்பற்றி தெரிவித்துள்ள கருத்து இந்தக் கண்ணோட்டத்திலும் முக்கியமாகக் கவனிக்கத்தக்கதாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *