கலைஞரின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் இன்றும் சிறப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன
சென்னை, மார்ச் 23- சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார்.
கடந்த சில நாட்களாக நடந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தனது உரையில் அவர் விரிவாக பதில் அளித்தார்.
நிதிநிலை அறிக்கை மீதான அமைச்சர் தங்கம் தென்னரசின் பதில் உரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
2 ஆயிரம் கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான மடிக்கணினி வழங்கிட முடியுமா? எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் தி.மு.க. அரசின் தரம் பற்றி யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத ஆல் ரவுண்ட் தமிழ்நாடு பட்ஜெட்-2025 அளித்து, பதிலுரையிலும் 100-100 வாங்கியிருக்கும் நிதி அமைச்சருக்குப் பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.