மதுரை, மார்ச் 11 நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் குறித்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் நேற்று (10.3.2025) போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடெங் கிலும் கடும் எதிர்ப்புத் தீ பற்றி எரிகிறது. பல இடங்களில் பிரதானின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அநாகரீகமானவர்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு நேற்று (10.3.2025) தொடங்கியது. தமிழ் நாட்டிற்கு கல்வி நிதி மறுப்பு விவகாரம் குறித்து திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழக மாணவர்களை திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழ டித்து வருகிறது. தமிழ்நாட்டு எம்.பி.க்கள் ஜனநாயகமற்றவர்கள், அநாகரீக மானவர்கள் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, அமைச்சர் தர்மேந்திரா பிரதான், நான் தமிழ்நாட்டு எம்.பி.க்களை தவறாக பேசவில்லை. எனினும் நான் பேசியது புண்படுத்தி இருந்தால், எனது வார்த்தைகளை திரும்ப பெற்று கொள்வதாக தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டு எம்.பி.க்களை ‘அநாகரீகமானவர்கள்’ என கருத்து தெரிவித்ததற்காக தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் நேற்று (10.3.2025) போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மயிலாப்பூரில் எம்எல்ஏ மயிலை வேலு தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் பகுதி திமுக சார்பில் சிந்தாதிரிப்பேட்டையிலும், தொடர்ந்து ஆழ்வார்ப்பேட்டை, சைதாப் பேட்டை யிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஆர்ப்பாட்டம்
திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை சந்திப்பு அருகே கட்சியின் மாநகர செயலாளர் ரகுபதி தலைமையில் திமுகவினர் 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஒன்றிய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து முழக்கங்களை எழுப்பினர். தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் தலைமையில் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகிலும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் தட்ர அள்ளி நாகராஜ் தலைமையில் கிருஷ்ணகிரி ரவுண்டானாவிலும் ஆர்ப் பாட்டம் நடந்தது.
உருவ பொம்மை எரிப்பு
மதுரையில் மாநகர இளைஞரணி துணை செயலாளர் மூவேந்தன் தலைமையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே ஒன்றிய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடந்தது. கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் கடலூர் பாரதி சாலையில் ஒன்றிய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தூத்துக்குடியில் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் உருவப்படங்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒன்றிய அமைச்சருக்கு
காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் கண்டனம்
நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் குறித்து பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செல்வப்பெருந்தகை: நாடாளுமன்றத்தில், தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்களை அநாகரீகமாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழக மக்கள் குறித்து தான் இவ்வகையில் பேசியுள்ளார்.
பாஜகவினர் கொண்டுவரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களை, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்ததை பேசுகின்றனர். உரிய நேரத்தில் மக்கள் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள்.
பெ.சண்முகம்: தமிழ்நாட்டின் நிதி உரிமை, கல்வி உரிமையை மறுப்பதை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். தமிழ்நாட்டு எம்.பி.க்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்திய ஒன்றிய அமைச்சர், தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளை நாகரீகமற்றவர்கள் என்று ஆணவமாக பேசியுள்ளார். பலதரப்பு கண்டனத்துக்கு பிறகு இந்தப் பேச்சை அவர் திரும்பப் பெற்றுள்ளார். ஒன்றிய அமைச்சர் தனது ஆணவப் போக்குக்காக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்பதுடன், நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.