நிலவுக்கே சென்றாலும் ஜாதியை தூக்கி செல்வார்கள்-உயர்நீதிமன்றம் காட்டம்

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 8- தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உச்சநீதிமன்றம், சங்கங்களை பதிவு செய்யும் சட்டத்தின் கீழ், ஜாதிகளை மய்யப்படுத்தக் கூடிய சங்கங்களை பதிவு செய்யலாமா? எனவும், பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா? என்பது குறித்து விளக்கமளிக்கும்படியும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு 6.3.32025 அன்று நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் இந்த வழக்கில் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஏற்கெனவே இரண்டு முறை அவகாசம் வழங்கப் பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, “அரசுப் பள்ளிகளில் சேரும்போது, ஜாதிகள் இல்லையடி பாப்பா, ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று கற்றுத்தரும் நிலையில், இன்று நான் நீதிபதியாக இருக்கும்போது படித்த பாடத்திற்கு ஏற்ப நான் நிற்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதோடு, குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே உறுப்பினராக இருக்கலாம் என்று விதியை திருத்தும்படி சங்கங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அந்த உத்தரவு காகிதத்தில் மட்டுமே இருப்பதாகவும், எந்த சங்கங்களும் தங்கள் விதிகளை திருத்தம் செய்யவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.

மேலும், “பள்ளிகளில் ஜாதி இருக்கக் கூடாது என்று மேனாள் நீதிபதி சந்துரு அளித்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டபோதும் கூட, பள்ளிகளின் பெயர்களில் இன்னும் ஜாதி நீடிக்கிறது என்றும், அரசுப் பள்ளிகளின் பெயர்களில் எப்படி ஜாதி பெயர் இருக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட ஜாதியை தூக்கி பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள் என்றும், நிலவுக்கே சென்றாலும் ஜாதியை தூக்கி செல்வார்கள் என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார். படிப்படியான மாற்றத்தை கொண்டு வருவதற்கான நேரம் இது என்றும் அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, கை ரிக்சாவை ஒழித்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட தி.மு.க. அரசு, இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுத்தால் நாளைய வரலாறு அதனை நினைவில் கொள்ளும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையடுத்து, கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஜாதிப் பெயரை நீக்குவது தொடர்பான அரசின் நிலைப் பாட்டை தெரிவிக்க கடைசி வாய்ப்பாக மார்ச் 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, அன்றைய நாள் இது தொடர்பாக நிச்சயம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *