தந்தை பெரியாரை வம்புக்கு இழுக்கும் ஆளுநர்!

Viduthalai
3 Min Read

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி வந்தாலும் வந்தார். கிண்டியில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் ஏதாவது வலுச் சண்டைக்கு வரும் வஸ்தாதாகத் தன்னைக் காட்டிக் கொண்டு வருகிறார்.
நாள்தோறும் தன்னைப் பற்றி ஊடகங்கள் பேச வேண்டும் என்கிற விளம்பரத் தொற்று – அவரைப் பற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.
ஆனால் அவர் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு சொல்லும் திராவிட மண்ணுக்கு ஒவ்வாததாக இருப்பதால் எதிர் விளைவைச் சந்தித்துக் கொண்டுள்ளார்.
ஆளுநர் பதவி ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பதவியல்ல என்பதைக் கூடத் தெரியாதவர் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நன்கு தெரியும் தான், தெரிந்திருந்தும் வீண் வம்புக்கு இழுக்கும் வகையில் எதிர்க்கட்சி அரசியல்வாதி அண்ணாமலையே பிச்சை வாங்கும் அளவுக்கு வாய் நீளம் காட்டுகிறார்.

இவர் பேச்சு தந்தை பெரியார் உழுது பக்குவப்படுத்தி வைத்துள்ள திராவிட மண்ணுக்கு எதிராக இருப்பதால், அதன் இலாபம் – ஆளும் திராவிட சிந்தாந்த தி.மு.க.வுக்கு ஆதாயமாக, நற்பலன் கூட்டுவதாக அமைந்து விடுகிறது.
இதனை நன்கு உணர்ந்த நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ‘‘ஆளுநர் ஆர்.என். ரவி இப்படியே பேசிக் கொண்டே இருக்கட்டும்; அது நமது ஆட்சிக்கு, கட்சிக்கு நற்பலனைத் தான் அளிக்கும்’’ என்று துல்லியமாகக் கூறியுள்ளார்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதைபோல, இப்பொழுது தந்தை பெரியாரிடமே மோத முன் கை நீட்டியுள்ளார். ‘விநாசகாலே விபரீத புத்தி’ என்பது இதுதான்.
இது எரியும் தீயில் நெய்யூற்றும் கதையாகத்தான் ஆகும் என்பது அவருக்குத் தெரியத்தான் போகிறது.
ஆளானப்பட்ட ஆச்சாரியாரே (ராஜாஜியே) தந்தை பெரியாரிடம் மோதி கடைசியில் அரசியல் அனாதையாகவே, போனார் என்ற வரலாற்று நடப்பு உண்மைகளைச் சொல்லிக் கொடுக்கும் ஆலோசகர்கள் அவர்களிடம் இல்லைபோலும்!
ஒரு முறை ஆச்சாரியார் ராஜாஜி எழுதினார்.

In Fact, on one occasion, Rajaji Proudly said that he valued his brahminhood more than his Chief Ministership என்றார். முதலமைச்சர் பதவியைவிட பிராமணனாக தான் இருப்பதுதான் பெருமை அளிக்கிறது என்றார் ராஜாஜி.
இன்னொன்றையும் அவர் ஒப்புக் கொண்டார்.
‘‘தேவர்கள் – அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை’’ என்று ஒப்புக் கொண்டார் (சென்னை திருவொற்றியூரில் 18.9.1953).
இதையே தந்தை பெரியார் அவர்கள் அவர்களுக்கே உரித்தான அனைவருக்கும் புரியும்படியான வகையில் வெட்டொன்று துண்டு இரண்டாகக் கூறினார்.

‘‘இன்றைய அரசியல் போராட்டம் என்பதே கம்யூனிஸ்டுகள் முதல் எல்லாக் கட்சிகளுக்கும் சமுதாயத் துறைத் தத்துவங்கள் தான் அடிப்படையே தவிர, மற்றபடி வாயால் சொல்வதற்குக்கூட கொள்கைகள் கிடையாதே! அதாவது, எதுவும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் அடிப் படையைக் கொண்டதுதான்’’ (‘விடுதலை’ 22.5.1969).
இவற்றை எல்லாம் புரிந்து கொண்டா (சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்) ஆளுநர் ரவி பேசியுள்ளார்?
‘கடந்த 60–70 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட, பரப்பப்பட்ட கதை, நம்மில் பலரும் அதை உண்மை என்று நினைக்கின்றனர். ‘ஆரியர்களை வந்தேறிகள்’ என்று தவறாக சித்தரித்தார் ஈ.வெ. ராமசாமி. அந்தக் கருத்தைத் தமிழ்நாட்டில் திணிக்க முயற்சித்தார். ஆரியர்களைப் பற்றி முழுமையாக தெரியாமல் தமிழ் நாட்டில் சில நூல்களை எழுதியுள்ளனர். நச்சு விதையை விதைக்கின்றனர். உண்மையில் ஆரியர் – திராவிடர் வெவ்வேறு இனம் என்பது பொய்’’ என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசி இருக்கிறார்.

‘திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அனேக சுலோகங்களாக இருக்கின்றன’’ (டாக்டர் ேராமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ. ‘பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்’ பக்கம் 22).
‘‘ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள், தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆரியக் கவிகள் திராவிடர்கள்மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகின்றது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்’’
(சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எல். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ. ஆகிய சரித்திரப் பேராசிரியர்கள் எழுதிய ‘இந்திய சரித்திரம் முதல் பாகம்’’ என்ற நூலில் ‘இந்து இந்தியா’’ எனும் தலைப்பில் பக்கங்கள் 16,17) ஆளுநர் ரவி அவர்களே, இவ்வாறு எழுதியது பெரியார் ஈ.வெ.ராமசாமி அல்ல இரண்டு அய்யங்கார் வரலாற்று ஆசிரியர்கள்.
இந்த அய்யங்கார்களையும், பெரியாரின் சீடர்கள் என்று ஆர்.என். ரவியைச் சேர்ந்தவர்கள் சொல்லு வார்களோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *