மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில்
மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறுகளை அமைக்கக் கூடாது
சென்னை,மார்ச் 5- தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.3.2025) எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கை குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொகுதிகளை ஏலம் விடுவதற்கான திறந்தவெளி பரப்புரிமை கொள்கை அறிவிப்பினை 11.02.2025 அன்று தொடங்கி இருப்பதாகக் கூறும், அந்த அறிவிப்பில் காவிரி படுகையில் CY-DWHP-2024/1 என்ற தொகுதி பெயரில் 9990.96 சதுர கி.மீ. பரப்பளவும் அடங்கும்.
உயிர்க்கோள் காப்பகம்
இது மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்திற்குள்ளும், பாக் விரிகுடா மற்றும் வாட்ஜ் கரைக்கு அருகிலும் உள்ளது. மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்காவை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடற்பகுதி, உயிர்க்கோள் காப்பகமாக ஒன்றிய அரசால் 18.02.1989 அன்று அறிவிக்கப்பட்டது.
இது பவளப்பாறைகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்றுப் படுகைகள், தீவுகள் மற்றும் காடுகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவிக்கிறேன்.
இந்த உயிர்க்கோள் காப்பகம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரையில் இருந்து 560 சதுர கி.மீ பரப்பளவில், பரந்து விரிந்து கிடக்கும் 21 தீவுகள் மற்றும் அருகில் உள்ள பவளப்பாறைகளின் சங்கிலியை கொண்டுள்ளது.
இது பல்வேறு வகையான கடல் விலங்கினங்களின் புகலிடமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு செப்டம்பர் 2021இல் பாக் விரிகுடாவில் மிக அரிதான கடற்பசு இனத்தை பாதுகாக்கும் வகையில், இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை அறிவித்துள்ளது. இது தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோர பகுதியில் 448 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கியது.
வாழ்வாதாரம் பறிபோகும்
இந்த பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்துளை எரிவாயு கிணறுகள், இந்த பகுதிகளில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு, அவற்றின் வளமான பல்லுயிர் பெருக்கம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் மற்றும் கடலின் ஒட்டுமொத்த பாதுகாப்பினையும் சீர்குலைக்கக்கூடும் என்று கவலையோடு குறிப்பிடுகிறேன்.
வண்டல் படிவுகள், நச்சுக் கழிவுகள் வெளியேற்றம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் அழிவு போன்ற அபாயங்கள் மட்டுமின்றி, மன்னார் வளைகுடாவை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.
ஒன்றிய அரசின் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கைகளால் ஏற்படும் இதுபோன்ற எந்தவொரு இடையூறும், முழு கடலோர பகுதியையும் பாதிக்கப்படைய செய்யும். இது கடலோர சமூகங்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ஏல அறிவிப்புக்கு முன்பாக ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசிடம் கருத்து எதையும் கேட்கவில்லை. உரிய ஆலோசனை கேட்கப்பட்டிருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் விரிவாக எடுத்துரைக்கப் பட்டிருக்கும்.
பிரதமர் மோடி தலையிட வேண்டும்
எனவே, இந்த சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இந்த ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கான ஏல முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறும், ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட அனைத்து பல்லுயிர் நிறைந்த பகுதிகளையும் OALP-லிருந்து நீக்க வேண்டும். எளிதில் பாதிக்கப்படக்கூடிய, பாதுகாக்கப்பட்ட இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு, இந்த முக்கியமான பிரச்சினையில் இந்திய பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.