ஜப்பான் திராவிடப் படிப்பகம் நிகழ்வு!

Viduthalai
7 Min Read

பிற மாநிலங்களை, தமிழ்நாடு போல உருவாக்குங்கள்!
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேச்சு!
தொகுப்பு: வி.சி.வில்வம்

பெரியார்தான் நமக்குப் பாதுகாப்பு அரண், அவர்தான் நமக்குப் பாதுகாப்பு வேலி” என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசினார். ஜப்பான் வாழ் தமிழர்கள் இணைந்து மாதந்தோறும் திராவிடப் படிப்பகம் எனும் நிகழ்ச்சியை ‘ட்விட்டர்’ தளத்தில் நடத்தி வருகிறார்கள். 22.02.2025 அன்று நடைபெற்ற நிகழ்வில் “ஏன் பரவ வேண்டும் பெரியாரியம்?” எனும் தலைப்பில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசியதாவது:

எனது இருக்கையை

உறுதி செய்தவர் பெரியார்!
எனது தாத்தா எனக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்தார், எனது அப்பா துணிமணிகள் எடுத்துக் கொடுத்தார், அவ்வளவுதான் அவர்களால் முடிந்தது.
அந்தக் காலத்தில் பள்ளிக் கூடங்கள் இருந்தன. ஆனால் உள்ளே நுழைவதற்கு அனுமதி இல்லை. எங்கள் காலத்திலேயே அப்படியென்றால் என் அப்பன், தாத்தன் காலம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என எண்ணிப் பாருங்கள்.
இப்படியான சூழலில் தான் பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் சென்று, எனக்கான இருக்கையை உறுதி செய்தார் பெரியார். ஆமாம்! நான் படித்ததற்குக் காரணம் பெரியார்தான்! அதனைத் தொடர்ந்து வேலை கிடைக்கவும், பொருளாதாரம் ஈட்டவும், சுயமரியாதைப் பெறவும் காரணமாய் இருந்தார்! பெரிய ஆவணங்களை, புள்ளி விவரங்களை நான் பேசவில்லை. ஒரு எளிய மனிதனாக இதைச் சொல்கிறேன். இதனால் பயன் பெற்ற மனிதனாகவும் நான் இருக்கிறேன். மிக வலிமையான போராட்டத்தாலும், உறுதியான தனது கொள்கைகளாலும், ஒவ்வொருக்குமான இட ஒதுக்கீட்டை உறுதி செய்தவர் தந்தை பெரியார்! தமிழ் மக்களுக்காக அரசியல் சட்டத்தையே திருத்தி சாதனை செய்தவர்!

நம் வீடுகளில்
பார்ப்பனர்களின் ஆதிக்கம்!
“பெரியார் எங்களுக்கு என்ன செய்தார்?”, என இடைநிலை ஜாதியினரும், தாழ்த்தப்பட்ட (பட்டியல்) இனத் தோழர்களும் கேட்கிறார்கள். பார்ப்பனீயம் அவர்களை அப்படிக் கேட்க வைத்து வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் ஒன்றை நான் அழுத்தமாகக் கூறுவேன். பெரியாரை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். பெரியாரை எதிர்ப்பவர்களை வலுவாக எதிர்க்க வேண்டும். உடனே வினையாற்றி முறியடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் பொது இடங்களில் ஜாதி மனப்பான்மை வெகுவாகக் குறைந்துவிட்டது. எனினும் வீடுகளில் பலரிடமும் இருந்து வருகிறது. ஒரு குழந்தை பிறந்தால் பார்ப்பனர் வந்து தண்ணீர் தெளித்தால்தான் நம் குழந்தைகளின் தீட்டே போகிறது. அதேபோல நம்முடைய குழந்தைக்கு பார்ப்பனர் தான் பெயர் வைக்க வேண்டியுள்ளது.
நம்முடைய திருமணத்திற்கு அம்மா, அப்பாவை விட, பார்ப்பனருக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம். திருமணம் செய்யும் தேதி தொடங்கி, சாந்தி முகூர்த்தம் வரை அவர்கள் சொல்வதையே கேட்கிறார்கள். அதேபோல ஒரு தொழிலை நாம் செய்ய விரும்பினால், அதைத் தொடங்கி வைக்கவும் பார்ப்பனரே வருகிறார்கள்.

முன்னோர்கள் ஒன்றும்

முட்டாள்கள் இல்லை?
இவையெல்லாம் நமது முன்னோர்கள் செய்தது. இதுதான் நமது கலாச்சாரம், பண்பாடு இவைகளை மாற்ற முடியாது என்கிறார்கள். அதுமட்டுமின்றி, நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை எனவும் கூறுகிறார்கள். இந்த இடத்தில் எனக்கொரு கேள்வி இருக்கிறது. நமது முன்னோர்கள் எத்தனை ஆண்டுகளாகப் புத்திசாலிகளாக இருந்தார்கள்?
உதாரணமாகத் தமிழரின் கலாச்சாரமாக வேட்டி, சேலையைக் கூறுகிறார்கள். வெளிநாடுகளில் கூட பொங்கல் விழாவில், பாரம்பரிய உடை என வேட்டி, சட்டை மற்றும் பட்டுச் சேலை கட்டி வருகிறார்கள். அதேநேரம் எங்கள் தாத்தா தனது திருமணத்தின் போது வெள்ளை சட்டை அணிந்திருந்தார், பாட்டி ஜாக்கெட் அணிந்து சேலை கட்டியிருந்தார். இதற்காகவே பெரும் பிரச்சினை செய்து, அவமானப்படுத்தினார்கள். நான் கேட்கிறேன், வேட்டி, சட்டைதான் தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுக் கலாச்சாரம் என்றால், சென்ற நூற்றாண்டில் எனது தாத்தா ஏன் கேவலப்படுத்தப்பட்டார்? தாத்தாவுக்கே இந்த நிலை என்றால், அதற்கு முந்தைய நம் தலைமுறை துண்டு கட்டிக் கொண்டும், கோவணம் மாட்டிக் கொண்டும் தானே தெருவில் திரிந்தார்கள்?

ஜாதி, மதமற்ற தமிழர்கள்!

முன்னோர்கள் குறித்து மட்டுமல்ல; நம் தமிழ் மன்னர்கள் யார் தெரியுமா? அவர்கள் பெருமைகள் என்ன தெரியுமா? என்றும் கேட்கிறார்கள். இவர்கள் சொல்லும் காலங்களில் நாம் அடிமையாகத்தான் வாழ்ந்தோம். எப்போது நாம் முற்போக்காக இருந்தோம் தெரியுமா? கீழடி காலத்தில் நாம் சிறப்பாக வாழ்ந்தோம். தமிழர்களுக்கு என்று ஜாதி, மதம் இல்லாத காலம்! அந்தக் காலத்து முன்னோர்கள் குறித்து இவர்கள் பேசுவதில்லை. இவர்களுக்கு ஜாதி வேண்டும், மதம் வேண்டும், பிற்போக்குத்தனம் வேண்டும் என்றால், அதற்கேற்ற முன்னோர்களை மட்டும் அழைத்துக் கொள்வார்கள்.
தமிழர்கள் நாம் இயற்கையோடு இணைந்தவர்கள். எந்த மூடத்தனமும் இல்லாத வாழ்வு நம்முடையது. நமக்கு இருந்த ஒரே விழா பொங்கல் மட்டுமே! அதையே பெரியாரும் வலியுறுத்தி, இன்றைக்கு இனவுணர்வு திருவிழாவாக மாற்றிவிட்டார். ஏனெனில் அதில் தான் ஏற்றத் தாழ்வுகள் இல்லை, பிற்போக்குத்தனம் இல்லை, மூடத்தனம் இல்லை!

பெரியாரை வெல்ல முடியாத கூட்டம்!

அதேபோல தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறிவிட்டதாகக் கதறுகிறார்கள். பெரியார் ஒரு கன்னடர் என்றும் கூறுகிறார்கள். ஒரு மனிதர் எந்தக் கருத்தைப் பேசுகிறார், அது சரியா தவறா? என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர அவர் கன்னடரா, தெலுங்கரா, மலையாளியா, ஜெர்மனியரா என்று பார்க்கக் கூடாது. பெரியாரைக் கருத்தியலாக வெல்ல முடியாத சிந்தனையற்றக் கூட்டம் தான், கன்னடியர் என்றும், மணியம்மையாரைத் திருமணம் செய்தார் என்றும் திசை திருப்ப முயல்கிறது.
சரி… இன்னொன்றும் கேட்கிறேன், தமிழர் நலனுக்காகப் பாடுபட்ட பெரியாரைக் கன்னடியர் என்கிறீர்கள். பார்ப்பன ராஜாஜியை தமிழர் என்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய முரண்? அதுவும் காலம் முழுவதும் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராஜாஜியை உங்களால் எப்படி ஏற்க முடிகிறது?

இது சமூகநீதி மண்! பெரியார் மண்!

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்கிறேன்! தமிழ்ச் சமூகத்தின் மாற்றங்கள் குறித்துப் பேசும் போதெல்லாம் பெரியார் மட்டும் தான் நினைவிற்கு வருகிறார்.
எனவே பெரியாருக்கு நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம். இது சமூகநீதி மண், இது பெரியார் மண் என்பதை அழுத்தம், திருத்தமாகப் பதிவு செய்கிறேன். உடனே சிலர், பெரியார் அப்படி என்ன செய்தார்? எந்த ஜாதியை ஒழித்தார்? இங்கே ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெறவில்லையா? என்று கேட்பார்கள்.
தமிழ்நாட்டில் எல்லா நிலைகளிலும் ஜாதி ஒழிந்துவிட்டது என யாரும் கூறவில்லை. அதேபோல ஆணவக் கொலைகள் நடைபெறுவதையும் மறுக்கவில்லை. வடநாட்டைப் போலவே இங்கும் கொலைகள் நடைபெறுகிறது. ஆனால் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறது. அதேநேரம் இப்படியான நிகழ்வின் போது வடநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்குமான எதிர்வினைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே இருக்கக் கூடிய பொதுமக்கள், பத்திரிகைகள், அரசியல் தலைவர்கள் போன்றோர் ஜாதி ஆதரவு நடவடிக்கைகளை எப்படி அணுகுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். யாருமே அதற்கு ஆதரவாக இருப்பதில்லை. வேண்டுமானால் அந்தக் குற்றச்செயல் செய்த சிறு குழு ஆதரவாக இருக்கும். மற்றபடி அதே ஜாதியில் இருப்பவர்கள் கூட எதிர் மனநிலையில்தான் இருப்பார்கள்.

வளமான நாடு தமிழ்நாடு!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் 1947 ஆம் ஆண்டுதான் சுதந்திரம் கிடைத்தது. அப்போதில் இருந்தே தமிழ்நாடு எல்லா வகைகளிலும் முன்னேறி வருகிறது. இது ஏதோ நமது கருத்து அல்ல; பல்வேறு ஆய்வுகளும், புள்ளி விவரங்களும் இதைக் கூறுகின்றன. வடநாட்டுத் தலைவர்களுக்கு, தமிழ்நாட்டைப் பார்த்தால் ஒரு அச்ச உணர்வு எழுகிறது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் சென்று பார்த்தால், வடநாட்டில் இருந்து குடும்பம் குடும்பமாக, கொத்துக் கொத்தாக வந்து இறங்குகிறார்கள்.
பொருளாதாரத்தில் வளமான நாட்டை நோக்கி இடம் பெயர்வது இயற்கையான ஒன்றுதான். தமிழர்கள் உலகம் முழுவதும் சென்றுவிட்டார்கள். வடமாநில மக்களுக்குத் தமிழ்நாடு தான் உலகமாக இருக்கிறது. அவர்கள் வெளிநாடு செல்லுமளவு வழியோ, வசதியோ, கல்வியோ இல்லாமல் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு போல உருவாக்குங்கள்!

இடஒதுக்கீடு, இருமொழிக் கொள்கை, சமூகநீதி போன்றவற்றில் அனைத்துக் கட்சித் தலைவர்களுமே தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்தில் இருப்பார்கள்.‌ இந்தியாவின் தலைசிறந்த 100 மருத்துவமனைகளில், 50 தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தியாவில் தமிழ்நாடு சிறப்பாக இருப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டைப் போலவே மற்ற மாநிலங்களையும் வளர்ச்சி அடையச் செய்யாமல், தமிழ்நாட்டை வீழ்ச்சி அடைய செய்யப் பார்க்கிறார்கள். அதனால் தான் ‘ஒரே தேர்தல், ஒரே மொழி’ எனச் சிதைக்க விரும்புகிறார்கள்.
தமிழ்நாட்டு உரிமைகளைக் கேட்கும் போது “தமிழர்கள்” என்கிற சொல்லைப் பெரியார் பயன்படுத்துவார். வடநாட்டார், ஆரியம் என்று வருகிற போது “திராவிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்துவார். சமூகம் சார்ந்து பேசும்போது “மனிதன்” என்பார். யார் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்கள் பக்கம் நிற்பவர் தான் பெரியார். ஒடுக்கப்படுகிறவர்களிலும் கடைநிலையில் யார் இருக்கிறார்களோ அவர்கள் பக்கம் நிற்பவர் பெரியார். தமக்காக எதையும் சிந்திக்காமல் 100 விழுக்காடு சமூகம் குறித்தே சிந்தித்தவர் தான் பெரியார்.
எனவே பெரியார் தான் நமக்கு அரண். பெரியார் தான் நமக்குப் பாதுகாப்பு வேலி. பெரியாரின் உயரத்தை யாராலும், எப்போதும் குறைத்துவிட முடியாது.” இவ்வாறு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *