நடிகை விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டு வழக்கு

Viduthalai
1 Min Read

27ஆம் தேதி சீமான் நேரில் வர காவல்துறை தாக்கீது

சென்னை,பிப்.25- நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் (பிப்.27) நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011இல் புகார் அளி்த்திருந்தார்.

அதையடுத்து காவல் துறையினர் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது.
இந்த வழக்கில் காவல் துறையினர் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, காவல் துறையினர் மீண்டும் விசாரணையில் இறங்கிஉள்ளனர். முதல்கட்டமாக வரும் 27ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் காவல் துறையினர் சீமானுக்கு நேற்று (24.2.2025) சம்மன் அனுப்பி உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *