பேரா.சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் அறிவுரை!
சென்னை, பிப். 23- சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டம் தலைவர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் தலைமையில், குழுவின் உறுப்பினர்களான முனைவர் கே.தனவேல், ஏ.ஜெய்சன், கோ.கருணாநிதி மற்றும் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் , பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமர குருபரன், முன்னிலையில் 20.02.2025 அன்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
சமூகநீதி அளவுகோல்
கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல் முறையாக முழுமையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பொருட்டு அரசின் சார்பில் சமூக நீதி கண்காணிப்புக் குழு அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சமூக நீதி கண்காணிப்புக் குழுவானது தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பொது நிறுவனங்கள்/பல்கலைக் கழகங்களில் ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகிறது.
20.02.2025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சி அலுவலர்களால் உரிய ஆவணங்கள் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும், தொழிலாளர் அய்க்கிய முன்னேற்ற சங்கம், டாக்டர் அம்பேத்கர் பணியாளர் சங்கம், இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் (பெருநகர சென்னை மாநகராட்சி பிரிவு) ஆகிய சங்கங்களை நேரடியாகஅழைத்து அவர்களின் கோரிக்கைகளை சமூக கண்காணிப்புக் குழுவினர் கேட்டறிந்தனர்.
உறுதி செய்க
ஆய்வின் முடிவில், மாநகராட்சியில் பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டினை முறையாக பின்பற்றுவதை உறுதிசெய்திடுமாறு சமூக நீதி கண்காணிப்புக் குழுவினர் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், இணைஆணையாளர் (கல்வி) முனைவர் ஜெ. விஜயா ராணி, உதவி ஆணையாளர் (பொ.நி.(ம.)ப.) செல்வி உமா மகேஸ்வரி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ். பானுமதி, கண்காணிப்புப்பொறியாளர் (பேருந்து சாலைகள்) சி.ஏ.பால முரளி, செயற்பொறியாளர் (மின்சாரம்) எம்.இளங்கோவன், முதுநிலை சட்ட அலுவலர் எஸ்.ஜேக்கப் ராஜன் பாபு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.