தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை எதிர்த்து
சென்னை,பிப்.19- “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை எற்க மாட்டோம்” என்ற கொள்கையை வலியுறுத்தியும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய மோடி பாஜக அரசைக் கண்டித்தும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்ற மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை பாரிமுனை ஒன்றிய சுங்கத்துறை அலுவலகம் அருகில் நேற்று (18.2.2025) மாலை நடைபெற்றது. இதில் தமிழர் தலைவர் பங்கேற்ற கண்டன உரையாற்றினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசிதமிழ்ச் சங்கமம் 3.0 நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசியபோது:-
“மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது, தமிழ்நாடு ஏற்க மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர் கூறுகையில், “தமிழ்நாட்டுக்கு நிதி நிலுவையில் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி ஒதுக்க சட்டத்தில் இடம் இல்லை” என்று கூறினார்.
இந்நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு மொழிக் கொள்கை விசயத்தில் ஒன்றிய அமைச்சர் திமிராகப் பேசினால் தமிழர்கள் தனிக் குணத்தை காட்டுவார்கள் என்றும் எச்சரித்தனர்.
இதன்படி தமிழ்நாட்டில் நடை முறையில் இருக்கும் இரு மொழிக் கொள்கைக்குப் புறம்பான ஒன்றிய பா.ஜ.க. அரசின் மும்மொழித் திட்டத்தை எதிர்த்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மாபெரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நேற்று (18.2.2025) மாலை ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தி.மு.க. ஏற்பாட்டில் நடைபெற்றது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருப்புச் சட்டையில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தின் நிறைவாகப் பேசினார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோரும் உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி, கனிமொழி சோமு, மேயர் பிரியா மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
“தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார்.
பதவிக் காலம் முடிந்துபோன ஆளுநரை வைத்துக் கொண்டு அத்து மீறல்கள்; யுஜிசி மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள்; தொடர்ச்சியான திராவிட – தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள்; மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டும்.
தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி – வேலைவாய்பபு – சமூகநீதி – வாழ்க்கைத் தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல் ரீதியாகப் பா.ஜ.க.வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.
வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்! எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்! அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டிக்கிறோம்” என தலைவர்கள் தங்களின் ஆர்ப்பாட்ட உரையில் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், பாவலர் மீனாட்சி சுந்தரம், சு.மோகன்ராஜ், சா.தாமோதரன், உடுமலை வடிவேல், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தனலட்சுமி, அம்பத்தூர் ராமலிங்கம், புதுவண்ணை செல்வம், கொளத்தூர் தி.செ.கணேசன், மயிலாப்பூர் சேதுராமன், மு. சண்முகப்பிரியன், மணிதுரை, பூவை க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் குணசேகரன், க.கலைமணி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தலைவர்கள் உரையாற்றியதாவது:-
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி
இது உங்கள் அப்பன் வீட்டு பணமா? 40 லட்சம் மாணவர்களின் வாழ்வில் விளையாடாதீர்கள். ஒன்றிய அமைச்சருக்கு ஒத்திசைவுப்பட்டியல் என்றால் என்ன என்றே தெரியவில்லை. அனைத்தையும் மூடி மறைக்கும் ரகசிய பட்டியலாக அதை வைத்துள்ளதால்தான் அனைத்து மாநிலங்களையும் ஏமாற்றுகிறார்கள். அதேபோல தமிழ்நாட்டை ஏமாற்றப் பார்க்கிறார்கள். மற்ற மாநிலங்களை நீங்்கள் ஏமாற்றலாம். ஆனால் இங்குள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஏமாற்ற இன்னும் ஒருவர் பிறந்துதான் வரவேண்டும்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி
ஒன்றிய அரசு இன்னும் பிடிவாதத்தோடு நிதியை தர முடியாது என்று ஆணவத்தோடு சொல்லுகிற நிலையை பார்க்கிறோம். இந்த நிலையில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இந்த அடையாள ஆர்ப்பாட்டம் தொடங்கி இருக்கிறது. மீண்டும் ஒரு மொழிப்போர் அறப்போராட்டம் தொடங்க உள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மொழியை பேசுகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தர்மேந்திர பிரதானுக்கு தமிழ் நாட்டில் நடைபெற்ற மொழிப்போர் தியாகம், போராட்டம் தெரியாது. மொழிக்காக தீக்குளித்து மாண்டவர்கள் உலகிலேயே தமிழர்கள் தான். நிதியை கொடுக்க முடியாது எனக்கூற நீ யார்? தமிழ்நாட்டை அச்சுறுத்த நினைத்தால் உங்கள் காலத்திலேயே இந்தியா துண்டுதுண்டாக சிதறுகிற நிலை ஏற்படும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
1965ஆம் ஆண்டு என்ன நடைபெற்றது என்று மோடிக்கும் தெரியாது, அந்த கட்சிக்கும் தெரியாது. இரு மொழிக் கொள்கை காலாவதியாகவில்லை, நீங்கள் தான் காலாவதி ஆகி விட்டீர்கள், ஒன்றிய கல்வி அமைச்சர் இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்
கல்வியில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் மற்றொரு மொழி திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க ஒன்றிய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இந்த நிலையை நிறுத்தாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்வோம். தமிழ்நாடே ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக திரண்டு வரும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை
இந்த போராட்டம், அடுத்த தலைமுறையை பாதுகாக்கின்ற போராட்டம். இன்று இந்தியாவில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாவது மாநிலமாக இருக்கிறது. மகாராஷ்டிரா, கருநாடகா மாநிலத்துக்கு பிறகு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி வரியை ஒன்றிய அரசிற்கு தருகிறோம், எங்களுக்கு உரிய உரிமையை ஏன் தர மறுக்கிறீர்கள் என்று கேட்டால் இதுதான் ஜனநாயகம் என்று பாஜ சொல்லுகிறது. இது தமிழ்நாடு. பின்புற வழியாக இந்தியை திணிக்க நினைத்தால் தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பாஜ ஒருபோதும் தமிழ்நாட்டில் கால் ஊன்றாது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
முதலமைச்சருக்கு அன்பான வேண்டுகோள் தமிழ்நாட்டில் இயங்குகின்ற ஒன்றிய அரசு அலுவலகத்தில் நாங்கள் ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று கூறுங்கள், சுங்க கட்டணங்கள் தர மறுப்போம், ஜிஎஸ்டி கொடுக்க ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று அனைவரும் கூறுங்கள். இவற்றை முதலமைச்சர் செய்தால் மோடி உங்கள் வழிக்கு வருவார். தமிழ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி அரசை நாடாளுமன்றத்தில் கிழித்து தொங்க விடுகிறார்கள், நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.