ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் பிப்.23 இல் கழக மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Viduthalai
6 Min Read

*தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது சட்டப்படியானது!
* மூன்றாவது மொழியாக ஹிந்தியை ஏற்றால்தான் கல்விக்கான வளர்ச்சி நிதியைத் தர முடியும் என்று ஒன்றிய அரசு கூறுவது கண்டனத்திற்குரியது – சட்டப்படியும் சரியானதல்ல!
தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை

தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை என்பது சட்டப்படி யானதாகும். அதற்கு மாறாக தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தர முடியும் என்று கூறும் ஒன்றிய அரசை எதிர்த்து, வரும் 23 ஆம் தேதியன்று தமிழ்நாடெங்கும் கழக மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டு, அமுலில் இருக்கும் முப்பெரும் சட்டங்களில் ஒன்று, தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை யாகும் (1968).

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது சட்டப்படியானதாகும்!
தமிழ் – ஆங்கிலம் இந்த இரு மொழிகளே தமிழ்நாட்டு அரசின் பாடத் திட்டத்தில் அமு லில் இருக்கும் என்பதை அரசின் முக்கிய கொள்கை முடிவாக்கி, அந்தத் தனிச் சட்டத்தையே அமுல்படுத்தி வருகிறார்கள். 57 ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது.
அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி யிலும் சரி, தமிழ்நாட்டில் இடையில் ஏற்பட்ட குடியரசுத் தலைவர் (டில்லி) ஆட்சிகளிலும் (மூன்று முறை) சரி, இக்கொள்கையில் எந்த மாறுதலும் இன்றி தொடரவே செய்கிறது.
காரணம், தமிழ்நாட்டில் 1938 – 1965 வரை ஆச்சாரியார் முதலமைச்சராக இருந்தபோதும், அதன் பின்னரும் கட்டாய ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடித்ததின் விளைவே இது.
மொழி உணர்வின் அடிப்படையில் பண்பாட்டுப் படையெடுப்பு – சமஸ்கிருத கலாச்சார ஆதிக்கத்தின் நுழைவு வாயில்தான், கட்டாய ஹிந்தி என்ற கருத்தின் அடிப்படை யில், பல்வேறு காலகட்டங்களில், ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள், வெடித்துக் கிளம்பியதை நன்கு புரிந்தே இந்த நிலை வாய்ப்பாகியது.
1938 இல் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற வலுவான போராட்டம், கட்சிகளைக் கடந்தது; மொழி உரிமை, பண்பாட்டுப் பாதுகாப்புக்கு ஒரு காவல் அரணாகும். தமிழ் உணர்வாளர்களும் களம் கண்டனர்.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் ஹிந்தியைத் திணிப்பதா?
இப்போதுள்ள ஒன்றிய அரசு, ‘‘தேசிய கல்விக் கொள்கை’’ என்ற ஒரு புதிய கல்வித் திட்டத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சிமீது திணிக்க முயல்வதற்கு முழு முனைப்பின் முதல் கட்டமே இந்த மும்மொழியை கட்டாய மாக ஏற்கவேண்டும் என்ற ஆணவப் பேச்சு! ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர், வற்றா நதியான ‘கல்வியில் சிறந்தோங்கிய தமிழ்நாடு’ என்ற பெயரையும், புகழையும் கண்டு எரிச்சல் பட்டு, அதைத் தடுக்க தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்குத் தரவேண்டிய முக்கிய தவணையான ரூ.2152 கோடியை தர மறுப்பதுடன், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு சில மாநிலங்களுக்குக் கூடுதல் நிதியாகப் பிரித்து வழங்க ஏற்பாடுகள் நடந்துள்ளன என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடே குமுறி கொந்த ளித்து எழுந்துள்ளது!
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் ஒன்றிய அரசு ‘தாரை’ வார்த்துள்ளது. சில கொத்தடிமை மனப்போக்குள்ளவர்கள் தவிர, அனைவரும் இதனை வன்மையாகக் கண்டித்து குரல் கொடுக்கத் தயங்கவில்லை.
ஆழந்தெரியாமல் காலை விட்டவர் கதி அதோகதிதான். மின் வயரில் கை வைத்து விளையாடும் விளையாட்டுப் பிள்ளையைப் போல், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்பவர், அகம்பாவத் தொனியில், ‘‘ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்றே தீரவேண்டும் என்றும், அதனை மறுப்பது அரசமைப்புச் சட்ட விதி களுக்கு எதிரானது’’ என்றும் கூறி, தமிழ்நாடு அரசினை மிரட்டிப் பார்க்கிறார்!
தமிழ்நாட்டைப் ‘பிளாக் மெயில்’ செய்ய முடியாது: முதலமைச்சர்
இதை நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர், ‘‘தமிழ்நாட்டை இப்படி ‘பிளாக் மெயில்’ செய்வது – ஒருபோதும் செல்லாது – திமிர் முறிக்கத் தமிழ்நாடு தானே எழும் என்பதை ஒன்றிய அமைச்சர் புரிந்துகொள்ளவேண்டும்’’ என்று எச்சரித்தும் உள்ளார்!

‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எந்த விதிப்படி ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மும்மொழித் திட்டத்தை கட்டாயமாக ஏற்க வேண்டும்; அதை ஏற்றால் மட்டுமே கல்வி நிதியை அளிக்க முடியும் என்பதற்கான ஆதார விதி என்ன?’’ என்று பொருத்தமான கேள்வியை எழுப்பி, ஒட்டுமொத்த 8 கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளார்!
கல்வி முன்பு ‘‘மாநிலப் பட்டியலில்’’தான் – அரசமைப்புச் சட்ட அட்டவணை ஏழாவது அட்டவணை அதிகாரங்கள் பற்றிய வரையறுப்பில்.
நெருக்கடி காலத்தில் – யாருக்கும் தெரி யாமல் அதனை ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றி, சட்டத் திருத்தம் செய்தனர்.
அது செல்லாது என்ற வழக்கும்கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டு, அவ்வழக்குப் பாதி விசாரிக்கப்பட்டு, நிலுவை யில் உள்ளது!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில்
மட்டுமே ஹிந்தி!
தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. என்ற செகண்டரி பள்ளிகள், ஒன்றிய அரசு அதிகாரப்படி நடக்கின்றன.
மற்ற மெட்ரிகுலேசன், மற்ற அரசு உயர்நிலைப்பள்ளிகள், மாநில அரசின் கல்வித் திட்டத்தின்படிதான் நடைபெறும் – இருமொழித் திட்டம்தான் அங்கு.
பல ஆண்டுகளாக உள்ள இந்த நிலையை அறவே மாற்றி, புதிய ‘‘தேசியக் கல்விக் கொள்கை’’ என்ற திட்டத்தினால் தமிழ்நாடு அரசின், அதன் கொள்கை முடிவை மாற்ற முடியுமா? முடியாது!
அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒத்திசைவு (Concurrent) பட்டியலில் 25 ஆவது அயிட்டம் என்ன கூறுகிறது?
“Education, including technical education, medical education and universities, subject to the provisions of entries 63, 64, 65 and 66 of List I; vocational and technical training of labour”.

கல்வி ஒத்திசைவுப் பட்டியலில்தான் உள்ளது!
இதன்படி கல்வி ‘‘ஒத்திசைவு’’ப் பட்டியலில் உள்ளபோது, வலுக்கட்டாய மாக இதை ஒன்றியப் பட்டியலுக்கே மடைமாற்றம் செய்யும் நடைமுறைதானே இது?
இதை உரிமை மறக்காத எந்த மாநில மாவது ஏற்க முடியுமா?
அதே அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில், தேசிய மொழி என்ற தனித்தகுதி ஹிந்திக்கு, சமஸ்கிருதத்திற்கு அளிக்கவே இல்லை.
மாறாக, (Article 344(1), 351) படி தலைப்பில் வெறும் மொழிகள் ‘Language’ என்பதில் உள்ள 22 மொழிகளில் எதுவும் தேசிய என்ற தனித்தகுதியோ, அடைமொழி சிறப்பையோ பெற்ற மொழிகள் அல்ல.
மேலும், ‘‘கூட்டுறவுக் கூட்டாட்சி’’ (Cooperative Federalism) என்று ஒரு பக்கத்தில் பேசிக்கொண்டே, பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அரசு இப்படி ஓர் உரிமைப் பறிப்பை நடத்த விரும்பினால், அது நியாயமா? முடியுமா?
ஏற்கெனவே நீறுபூத்த நெருப்பாக உள்ள ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் பிரச்சினையை ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் வேகமாக விசிறிவிடுவதின் விளைவு எதில் போய் முடியும்?
இதனை மாணவர்கள், பெற்றோர் ஏற்கவில்லை என்பதற்கான மக்கள் மன்றம் ஆர்ப்பரித்து கிளர்ந்தெழுவது கண்கூடாகத் தெரியும்.

கழக மாவட்டத் தலைநகரங்களில்
கண்டன ஆர்ப்பாட்டம்!
வருகிற 23.2.2025 ஞாயிறு அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகம், ஒத்தக் கருத்துள்ள வர்களோடு இணைந்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முதல் கட்டமாக தொடங்கும்!
ஹிந்தித் திணிப்பாளர்கள் – ஆதிக்க வாதிகளான ஹிந்தி முகவர்களின் திமிரை முறித்துக் காட்டுவதற்குப் பெரும் உரிமை அறப்போரின் முதல் தொடக்க மாக அதுவே அமையும்.
தமிழ் இன உணர்வாளர்களே, மாநில உரிமையைக் காக்க அனைவரும் ஆயத்தமாவீர்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை 
17.2.2025 

 

குறிப்பு: 23.2.2025 ஞாயிறு மாலை தாம்பரத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *