சென்னை,பிப்.15- சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் வீடு மற்றும் வீட்டுமனைக் கண்காட்சியை நேற்று (14.2.2025) தொடங்கி வைத்துப் பேசுகையில், 136 நகரங்களின் வளர்ச்சிக்கான புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் தயாரிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- கடந்த 2023-ஆம் ஆண்டு போலவே, ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் முதலீட்டாளர்கள் பங்குதாரர்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் மிகப்பெரிய கண்காட்சியை இந்த சென்னை வர்த்தக மய்யத்தில் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று முதலில் உணர்ந்து கொள்வது கட்டடங்கள்தான். அந்த வகையில், உங்களுடைய அமைப்பையும், நீங்கள் நடத்தி வரும் இந்தக் கண்காட்சியையும் வளர்ச்சியின் அடையாளமாகதான் நான் பார்க்கிறேன்.
முக்கியமான தேவைகள்
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இதுதான் ஒவ்வொரு மனிதனுடைய முக்கியமான தேவைகளாக அமைந்திருக்கிறது. அதில் ஒரு தேவையைப் பூர்த்தி செய்பவர்கள்தான் நீங்கள். அதனால் நீங்கள் மக்களுக்கு மட்டுமல்ல, அரசுக்கும் முக்கியமானவர்கள். அதை உணர்ந்துதான் உங்கள் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ள இங்கே வருகை தந்திருக்கிறேன்.
மக்கள்தொகைப் பெருக்கம் அதிகம் இருக்கக்கூடிய நாட்டில் மக்களின் எல்லாத் தேவைகளையும் அரசே செய்துவிட முடியாது. உங்களை போன்ற அமைப்புகளும் இணைந்து செயல்படவேண்டும். அப்படி மிகச் சிறப்பாக செயல் பட்டுக் கொண்டு வருகிறீர்கள்.
கிரெடாய் அமைப்பு தொழில் முன்னேற்ற கொள்கைகளை உருவாக்குகிறீர்கள். ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள எண்ணற்ற தொழில் முனைவோர்களையும், அரசையும் இணைக்கும் நல்லுறவுப் பாலமாகவும் நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ரியல் எஸ்டேட் துறையின் வெளிப்படைத்தன்மை, ஒழுங்கு மற்றும் பொறுப்புடன் கூடிய செயல்பாட்டை கிரெடாய் உறுதி செய்வதை நான் மனதார பாராட்டுகிறேன்.
பொருளாதார வளர்ச்சி
ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் ஒரு முக்கியமான துறையாக அமைந்திருக்கிறது. நம்முடைய மாநில மக்கள் தொகையில், 48 விழுக்காடு மக்கள் நகர்ப்புறத்தில் வசிக்கிறார்கள். இதனால் நாம் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறோம். இது வரும் ஆண்டுகளில் மேலும் உயரும். இதனால், நீடித்து நிலைக்கக்கூடிய வீட்டு வசதிக்கான தேவைகள் அதிகரிக்கும். அதனால் புதுமையான நகரமைப்புத் திட்டங்களை தீட்டவேண்டும்.சென்னை பெருநகர பகுதிக்கான முதல் மற்றும் இரண்டாம் முழுமைத் திட்டங்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மூன்றாவது முழுமைத் திட்டத்தையும் நம்முடைய அரசுதான் முனைப்போடு தயாரித்துக் கொண்டு வருகிறது. நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்முயற்சிகள் ஆகியவற்றை மய்யமாகக் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுத்து செல்லவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம்தான் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சென்னை பெருநகர பகுதியின் வளர்ச்சியை வழிநடத்தப் போகிறது.
முழுமைத் திட்டம்
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டலத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர், மதுரை, ஒசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் திருநெல்வேலியை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஓசூருக்கான முழுமைத் திட்டமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய 9 வளர்ச்சி மய்யங்களான மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், திருப்பெரும்புதூர் மற்றும் பரந்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக, புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதுநகர் திட்டங்களின் நோக்கம் என்னவென்றால் சென்னையின் நெரிசலைக் குறைக்கவேண்டும், பொருளாதார மய்யங்களை உருவாக்க வேண்டும், போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும், சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளில் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் நோக்கம். கடந்த 10 ஆண்டுகளில், இப்படிப்பட்ட திட்டங்கள் தயாரிக்கும் பணி தேக்கமடைந்து இருந்தது. அந்த நிலையை மாற்ற நம்முடைய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
ஒற்றைச் சாளர முறை
நான் கிரெடாய் 2023-இல் கலந்து கொண்டபோது, ஒரு உறுதி அளித்தேன். அதை செயல்படுத்தும் வகையில் ஒற்றைச் சாளர முறை மற்றும் இணையதள கட்டட அனுமதி பெறும் முறை தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
வளர்ச்சிக்கான சேவையை ஆற்றுவதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப் பையும் என்னுடைய அரசு எப்போதும் நிச்சயம் வழங்கும். எப்போதுமே முதலமைச்சர் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், அந்த நிகழ்ச்சியில் கோரிக்கை வைப்பதுண்டு. ஏற்கெனவே, கோரிக்கையை வைத்து விட்டார்கள்.
அதையும் கையில் கொடுத்திருக் கிறார்கள். அது நிச்சயம் பரிசீலிக்கப் படும். ஆனால், கோரிக்கை வைத்தவர்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறேன். என்ன கோரிக்கை என்றால், நான் உங்களிடம் வைக்கக்கூடிய கோரிக்கை – நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது பல முதலீட்டாளர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அவர்கள் பெரும்பாலும் என்னிடத்தில் கேட்டது என்னவென்றால், சென்னையிலும், மாநிலம் முழுவதும் இன்னும் கூடுதலாக தொழில் பூங்காக்களும், இன்னும் கூடுதல் அலுவலகக் கட்டடங்கள் தேவைப்படுகிறது என்று சொன்னார்கள். எனவே, கிரெடாய் மூலமாக இந்தத் தொழில் துறை கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றவேண்டும். நீங்கள் கட்டக்கூடிய பெரிய அடுக்குமாடிக் கட்டடத்தின் அருகிலேயே இந்த பூங்காக்கள் நீர்நிலைகளை அழகுபடுத்தி பராமரித்துக் கொள்வதற்கு உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.