அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா…? டிரம்ப் சொன்னது என்ன?

viduthalai
1 Min Read

வாசிங்டன், பிப்.9 அமெரிக்காவில் வசிக்கும் பிரிட்டன் இளவரசர் ஹாரியை நாடு கடத்த விரும்பவில்லை,” என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹாரி, மனைவி மேகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர், தனது சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ என்ற புத்தகத்தில், தான் பலவிதமான போதைப்பொருட்களை சோதித்துப் பார்த்ததாகக் கூறியிருந்தார். ஆனால், போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கும் பட்சத்தில் அவருக்கு அமெரிக்கா விசா கொடுத்திருக்க முடியாது. இதனையடுத்து, ஹரி, தனது விசா விண்ணப்பத்தில் தனது போதைப்பொருள் பயன்பாடு குறித்து பொய் கூறியுள்ளாரா என ‘ தி ஹெரிடேஜ் ‘ என்ற தொண்டு நிறுவனம் கேள்வி எழுப்பி இருந்தது. இது குறித்து அமெரிக்க அரசுக்கு எதிராக அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே, கடந்த காலங்களில் இந்த விவகாரத்தில் ஹாரியையும், அப்போது ஆட்சியில் இருந்த ஜோ பைடன் அரசையும் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். தற்போது அதிபராகி உள்ள டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றி வருகிறார்.

இந்நிலையில், இளவரசர் ஹாரி அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவாரா என்பது தொடர்பாக அமெரிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளதாவது: ஹாரியை நாடு கடத்த நான் விரும்பவில்லை. அவரை தனியாக விட்டு விடலாம். மனைவியுடன் அவருக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *