பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, புத்தர் கலைக்குழு இணைந்து நடத்திய பறை இசையின் வரலாற்றைச் சொல்லும் ”சொல்” ஆவணப்படம் திரையிடல்!

viduthalai
2 Min Read

சென்னை. பிப். 8- பறை இசையின் பரிணாம வரலாற்றைப் பேசும் ஆவணப்படம் திரையிடலில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சு.பிரின்சு என்னாரெசு பெரியார் கலந்து கொண்டு உரையாற்றினார். புத்தர் கலைக்குழு சார்பில் மணிமாறன், மகிழினி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புத்தர் கலைக்குழு

சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் குளுமை அரங்கில், ”பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை” மற்றும் ”புத்தர் கலைக்குழு” இணைந்து, 2.2.2025 அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரை ”சொல்” எனும் ஆவணப்படம் திரையிடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் மணிமாறன் தலைமையேற்று சிறப்பித்ததுடன், நாட்டுப்புறப் பாடல் புகழ் மகிழினி மணிமாறனுடன் அவர்களுடன் இணைந்து, ”அம்மா” வைப் பற்றியும், ”நம்ம ஊரு உலகமுங்க” என்ற பாடலையும் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு தோழர் சுரேஷ்குமார் வரவேற்பு வழங்க, பெரியார் வலைக்காட்சி சுரேஷ், த,மரகதமணி ஆகியோர் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

பறை

ஆவணப்படம், ’பறை என்பது வாழ்வுக்கானது. சாவுக்கானது அல்ல என்றும், இதுவொரு ஜாதிக்கான தொழில் அல்ல; பயிற்சி அல்ல; அனை வரும் கற்றுக் கொள்ளலாம் என்றும், பறைக் கருவியைக் கையாண்ட மக்க ளின் வலிமிக்க அவமானங்களைப் பட்டவர்த்தனமாகப் பேசியது. அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசைக் கல்லூரி மாணவர்கள் தோழர் நிலா, ராகுல் ராஜா, தனலட்சுமி மற்றும் இசைக் கல்லூரிப் பேராசிரியர் வைரம் ஆகியோர் ஆவணப்படம் குறித்த தங்கள் கருத்துகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

சு.பிரின்சு என்னாரெசு பெரியார்

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சு.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் பரந்துபட்ட நோக்கத்தையும், தொடர் செயல்பாடுகளையும் எடுத்துரைத்து, இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்து களைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஆவணப்படம் குறித்து கேள்வி, பதில் நடைபெற்றது. இதில் ஆவணப்படத்தின் ஒளிப்படக் கலைஞர் கணேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் இயக்குநர் மனோஜ் குமார் ஆவணப்படம் உருவாக்கம் குறித்துப் பேசிவிட்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பறை இசை குறித்த இப்படியொரு ஆரோக்கியமான உரையாடலை நிகழ்த்தக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகத் தோழர் மாணிக்கம், வழக்குரைஞர் வேலவன், சாரல் இன்பன், இனியன், நா.பார்த்திபன், காவியா மற்றும் பறையிசைப்பயிற்சி மாணவர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *