ஒரு கருத்தியல் மீதான தாக்குதல் மூலமாக, அந்தக் கருத்தியல் சார்ந்த அரசு உருவாகுவதை தடுக்கலாம், உருவாக்கப்பட்ட அரசை வீழ்த்தலாம்.
பெரியார், திராவிடம் என்று பரப்புரை செய்து, ஓர் அரசு இனிமேல் அமைந்து விடக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம்.
காரணம், ‘பெரியார்’ என்ற கருத்தியலும், ‘திராவிடம்’ என்ற கருத்தியலும் மிக ஆழமான, வலுவான எல்லாத் தரப்பு மக்களுக்குமான கருத்தியல். இது தொடர்ந்தால் ஆரிய சித்தாந்த ஆட்சி அமையவே முடியாது என்றுதான், பெரியார் மீதும் திராவிட சித்தாந்தம் மீதும் சிலபல அடிமைகளைக் கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர்.
‘‘பெரியாருக்குப் பிறகுதான் எல்லாம் நடந்ததா? அவருக்கு முன்பு யாரும் செய்யவில்லையா.? யாரும் படிக்கவில்லையா.? எங்கள் முப்பாட்டன் திருவள்ளுவன் படிக்கவில்லையா, கம்பன் படிக்கவில்லையா, அவ்வையார் படிக்கவில்லையா?
திராவிடம்தான் எல்லாவற்றையும் வழங்கியதா? குஜராத், மராட்டியத்தில் பெண்கள் படிக்கவில்லையா? எத்தனை திண்ணை பள்ளிகள் இருந்தன.
நாலந்தா, தக்சஷீலா பல்கலைக்கழகங்கள் இருந்ததே. எல்லா வற்றையும் பிரிட்டிஷ் வந்து அழித்து விட்டார்களே.!’’
இந்த கேள்விகளைக் கேள்விப்படும் நமக்கும், ‘ஆமாம்ேல’ என்று எண்ணத் தோன்றும்.!
‘இரட்டைமலை சீனிவாசன் ஜாதிய ஒழிப்பிற்குப் போராடவில்லையா.! அயோத்திதாச பண்டிதர் போராட வில்லையா? பாரதி பெண்ணுரிமை பேசவில்லையா.? செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று பாரதி பாடினாரே. தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து எங்க அப்பன் சங்கர லிங்கம் உயிர் விட்டாரே! அண்ணாத்துரை வந்து தான் தமிழ்நாட்டை கண்டுபிடித்தாரா? தமிழ்நாடு என்ற பெயர் வைத்தாரா.?’
இப்படி கேள்விகளை அடுக்குவார்கள்.! இளைஞர் களுக்கும் ஏதும் புரியாமல்…, ஆமாம்… ஏன் திராவிடம், பெரியார், அண்ணா, கலைஞர் என்றே பேசுகின்றனர்’ என்ற கேள்விகள் எழும்.
சரி…
இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் இருவரும் ஜாதி தீண்டாமையைப் பற்றிப் பேசினார்களே தவிர, ஜாதி ஒழிப்பிற்காக செய்த காரியங்கள் என்னென்ன. எத்தனை பொதுக் கூட்டங்கள் நடத்தியுள்ளனர். எத்தனை போராட்டங்களை நடத்திச் சிறைச் சென்றனர். என்ன கருத்தியலை உருவாக்கி, அந்தக் கருத்தியல் சார்ந்த அரசு உருவாகக் காரணமாக இருந்தனர்? எத்தனை தலைவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர்? அவர்களுக்குப் பிறகான கொள்கைத் தலைவர்கள் யார்? அவர்கள் முன்னெடுத்த சிந்தனைகளை வழிநடத்தியவர்கள் யார்? அவர்கள் தொடக்கப் புள்ளிகள்தானே.
பாரதியின் கருத்தியல் சார்ந்து எந்த அரசு உருவானது? பாரதியின் கருத்தை எந்த அரசு சட்டமாக்கியது? பாரதி ஒரு பார்ப்பனர் என்று மார்தட்டிக் கூறுகின்றனர். பாரதியின் பெண்ணுரிமையை, அம்பேத்கர் சட்டமாக்க முயற்சித்த போது, அந்த சட்டத்தை ஒழித்தவர்கள் யார்? ஸநாதன பார்ப்பனர்கள்தானே!
எத்தனையோ தாக்குதல்களை தாண்டி திருமதி சாவித்திரி பூலே அவர்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக் கப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு கல்வியை வழங்கினாரே. அவரது பிறந்தநாளைத்தானே ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும். ஏன் பார்ப்பனர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றோம்? கேள்வி கேட்டோமா?
வளர்ச்சியின் பெயரில் கடலூர் முதல் ராமநாதபுரம் வரை உள்ள இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா பகுதியை அழித்து, இயற்கை வளங்களை எடுக்க சட்டமியற்றும் இந்திய அரசு, ராமர் பாலம் என்ற இல்லாத ஒன்றை வைத்து சேது சமுத்திர திட்டத்தை முடக்கி வைத்துள்ளதே! ஏன் என்ற கேள்வியை கேட்டோமா?
‘‘காமராஜர்தான் பள்ளிகளை கட்டினார். தமிழ்நாடு வளர என்.எல்.சி., பெல், அய்.சி.எப்., போன்ற தொழிற் சாலைகளை உருவாக்கினார். அணைகளை கட்டினார். காமராஜர், கக்கன் மாதிரி ஆகுமா.!
இதுதான் ஆரிய சித்தாந்தம் சார்ந்த அரசு. ஆரிய கருத்தியலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட அரசு. அந்த ஆரிய கருத்தியலை எதிர்ப்பதுதான் திராவிட கருத்தியல். அந்தக் கருத்தியலின் பிம்பம்தான் பெரியார்.!
‘‘காமராஜருக்கு முன்பும் பின்பும் யாரும் பள்ளிக் கூடங்களை உருவாக்கவில்லையா? காமராஜருக்கு முன்பு உருவாக்கப்பட்ட 17,000 பள்ளிகள், சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை, காரைக்குடி பல்கலைக்கழகம், ஸ்டான்லி, வேலூர் மருத்துவ கல்லூரிகள், மேட்டூர் அணை, முல்ைலப் பெரியாறு அணை, பேச்சிப்பாறை அணை, வெலிங்டன் அணை, இரயில் பாதைகள், பிண்ணி, மதுரா ஃபேப்ரிக்ஸ் போன்ற துணி நெசவாலைகள் இவைகளையெல்லாம் உருவாக்கியது யார்.?
பெரியவர் பக்தவத்சலம், சி. சுப்ரமணியன், ஆர். வெங்கட்ராமன், இராமமூர்த்தி இவர்களெல்லாம் ஏதும் செய்யவில்லையா?
காந்தி மட்டும்தான் விடுதலை வாங்கி தந்தாரா? நேரு, படேல், போஸ், வ.உ.சி இவர்களெல்லாம் சுதந்திரத்திற்கு பாடுபடவில்லையா?’’
இப்படி கேள்விகளை எழுப்பலாம்.!
ஆனால் ஒரு கருத்தியலை பேசும் போது, ஒருவரை மட்டுமே அடையாளமாக வைக்க முடியும். அப்போதுதான் அந்தக் கருத்தியல் நிலைத்து நிற்கும்.
சீனிவாசன் பிள்ளை, புருசோத்தம நாயுடு என்ற இரண்டு சட்ட மேதைகள் சேர்ந்து பார்ப்பனரல்லாத இயக்கம் ஆரம்பித்தாலும், அதனைத் தொடர முடியாமல் விட்டு விட்டனரே!
பிறகு டாக்டர். நடேசனார் பார்ப்பனரல்லாதோர் இயக் கத்தை தொடங்கி, அதனை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று மாற்றி, ஒவ்வொரு சிறு நகரங்களுக்கும் சென்று பார்ப்பனரல்லாத இளைஞர்களைப் படிக்க உற்சாகமூட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் விடுதி கட்டி, வெளியூர் இளைஞர்களை தங்க வைத்து பார்ப்பனரல்லாத இளைஞர்களை படிக்கத் தூண்டினாரே!
அந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சியால், பல ஆயிரம் பள்ளிகள் உருவாக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் படிக்க, அரசு வேலைக்கு செல்ல ஏதுவாக இட உரிமை உருவாக்கப்பட்டது.
அது முதல் படி
காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய பெரியார் சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்து மூடநம்பிக்கை, பிற்போக்குவாத எண்ணங்களுக்கு எதிராக, ஜாதிய இழிவுகளுக்கு எதிராக, பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவாக பல போராட்டங்களை, பல பொதுக் கூட்டங்களை, பல தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்தினார். இவற்றுக்கு ஆதரவாக பல தீர்மானங்களை போட்டார். குலக்கல்வி கொண்டு வந்த பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து தீவிரமாகப் போராடினார். தகப்பன் சொத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை வேண்டும் என்றார். புரோகிதர் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். கருவறையில் பூஜை செய்ய, எல்லோருக்கும் உரிமை வேண்டும் என்றார்.
பெரியார் கருத்துகளை உள்வாங்கிய அரசு தமிழ் நாட்டில் அறிஞர் அண்ணா தலைமையில் உருவானது. பெரியாரின் கருத்துகள் சட்டமாக்கப்பட்டன.
பலதரப்பட்ட மக்கள் பயன்பெறும் அளவிற்கு ஒரு கருத்தியலை எடுக்க வேண்டும். அந்தக் கருத்தியலை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். அந்தக் கருத்தியல் சார்ந்த அரசு உருவாக்கப்பட வேண்டும். அந்தக் கருத்தியல் சார்ந்த அரசின் மூலமாக அந்த கருத்தியல் சிந்தனைகள் சட்டமாக்கப்பட வேண்டும். அந்தச் சட்டங்கள் மூலமாக எல்லாத் தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும்.
இதைத்தான் பெரியார் முன்னெடுத்தார். அண்ணா சட்டம் ஆக்கினார். கலைஞர் கட்டிக் காத்தார்.! அந்தப் பாதுகாப்பு திராவிட சித்தாந்த அரசின் மூலமாக பாதுகாக்கப்படுகிறது.! இந்தப் பாதுகாப்பை சிதைப்பதற்காகத்தான் ‘பெரியார்’, ‘திராவிட’ என்ற வார்த்தைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
பெரியார், திராவிடம் என்பது தனிப்பட்ட சொல் அல்ல. அது கருத்தியல். அந்தக் கருத்தியலை பாது காப்பாக அடுத்த 1000 ஆண்டுகளுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உள்ளது.
பெரியாரைப் புரிந்தால்தான் திராவிடம் புரியும். திராவிடம் புரிந்தால்தான் சமூகநீதி புரியும். சமூகநீதி புரிந்தால்தான் சமத்துவம் புரியும். அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வரை யார் என உணர முடியும்.
இதை ஒட்டு மொத்தமாக அழித்து, ஆரியத்தை மீண்டும் தழைக்கச் செய்வதற்கே பெரியார்மீது தொடுக்கப்படும் தாக்குதல், இதை உணர்ந்து. நம் இனம், மொழி, எதிர்கால தலைமுறை தழைத்தோங்க, பெரியாரைப் படிப்போம், திராவிடத்தைக் காப்போம்.
கந்தசாமி மாரியப்பன் – புலனத்திலிருந்து…
நன்றி: ‘முகம்’ பிப்ரவரி – 2025