இந்துமதம் என்பது ஒரு போலி மதம் – ஒரு கொள்கையும் அற்றது பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்பிற்கே கடவுள் – ராதா கல்யாணம்!

Viduthalai
6 Min Read

– செந்துறை மதியழகன்

ஒரு பக்கம் உத்திரப் பிரதேசம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பிஜேபி அரசின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ‘நெரிசலில் சிக்குண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தைக் கடந்து விட்டதாக’ நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அச்சம் தெரிவிக்கிறார்.
அதற்குள்ளாக பக்தர்கள் அடுத்த பஜனைக்குத் தயாராகி விட்டனர். இம்மாதம் முழுவதும் சிறீ ராதா கல்யாண மஹோத்ஸவம் ஊருக்கு ஊர் நடத்தப் போகிறார்களாம்.
“மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கமே இறைவனை உணர்ந்து அவரது திருவடி பற்றுவது (அடைதல்) தான் – அந்த உயரிய எண்ணத்தை பக்தனுக்கு திரும்பத் திரும்ப உணர்த்துவதுதான் ராதா கல்யாண உற்சவமாம்” என்கிறார் பக்த சிரோன்மணி ஒருவர்.
ராதா கல்யாணம் பற்றி ‘ஆலங்குடி பஜனை’ என்னும் பெயரில் நூல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அப்புத்தகத்தில் இருக்கும் ‘க்யூஆர்’ கோடை ஸ்கேன் செய்தால் டிவி அல்லது கைபேசியில் அந்த பஜனை நிகழ்ச்சிகளை நேரில் பார்க்கலாம் வாங்கோ… என அழைக்கிறார்கள்.
இதனை ஏன் சொல்கிறோம் என்றால், பக்தியை மூலதனமாகக் கொண்டு அதை வைத்து பிழைக்கக் கூடியவர்கள் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள்.

தொலைநோக்காளர் தந்தை பெரியார் அவர்கள் இந்துமதம் பற்றியும், பார்ப்பனர்களைப் பற்றியும் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்!
“இந்துமதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்ற தென்றும், பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்பிற்குமே கடவுளின் பெயராலும், முனிகள் பெயராலும், ரிஷிகள் பெயராலும் பல ஆபாசங்களையும் சுயநலக் கொள்கைகளையும் கற்பனை செய்து அவற்றைப் பாமர மக்கள் நம்பும்படி, பல மிரட்டுதலான நிபந்தனைகளை ஏற்பாடு செய்து, அவைகள் நிலைப்பதற்குத் தகுந்த தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள் என்றும்; அதை அறியாமல் பல தமிழ் மக்களும் சைவம் என்றும். வைணவ மென்றும், அர்த்தமற்ற சில கடவுள்களின் பேரால் சமயங்கள் என்பதாக வைத்துக்கொண்டு சிவன், விஷ்ணு என்னும் பெயர்கள் உடைய பல கடவுள்கள் இருப்பதாகவும் அவர்கள் பல ரூபங்களாகவும், பல ஆதாரங்களாகவும் இருப்பதாகவும், அவற்றை வணங்குவதும் துதி பாடுவதுமே சைவ, வைணவக் கொள்கையென்றும் வைத்துக்கொண்டு, அதன் மூலம் பார்ப்பனர்கள் சூழ்ச்சிக்கு இடம்கொடுத்து வரப்படுகிறது என்றும், நாம் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம்.

இதுவரையில் நம் நாட்டில் இதைப்பற்றித் தக்க காரணம் காட்டி மறுத்தோ அல்லது சமாதானமோ யோக்கியமான வழியில் சொல்லவோ எழுதவோ இல்லை” என்று சொன்னார்கள். (‘குடி அரசு’ – 15.4.1928)
ஆனால். அப்பாவி பக்தர்களுக்கோ இது புரிவதேயில்லை. உறவினர்கள், நண்பர்கள் இல்ல திருமணம் என்றால் உடனே கீழ்காணும் பஜனையை முகநூலில் கூட பதிவிட்டு வாழ்த்துகின்றனர். கொஞ்சம் பணக்காரர் வீட்டுத் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். இந்த பஜனையை பாடுவதற்கென்றே ஒரு குரூப் தயாராகவே இருக்கும்.
சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!
கௌரி கல்யாண வைபோகமே!
ராதா கல்யாண வைபோகமே!
என் தோழியின் கல்யாண வைபோகமே! என்று எல்லோரும் பி.சுசிலாவாகி பாடத் தொடங்கி விடுவார்கள்.
சிறீ ராதா கல்யாணம் என்ற வைபவம் தொன்று தொட்டு நடைபெறும் ஒரு கலாச்சார நிகழ்ச்சி என்றும், இந்த கோயிலுக்கு இது பாரம்பரியம். இந்தக் கோயிலுக்கு இது சம்பிரதாயம் – சடங்கு என்று கம்பு சுத்துவார்கள். இதனால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது? என்று தந்தை பெரியார் அவர்கள் கேட்டதற்கு எங்காவது பதில் சொல்லப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லையே!
இராமாயணம் நடந்த கதையா? ராமன் பிறப்பு உண்மையா? ராதை கிருஷ்ணன் திருமணம் நடந்த கதையா? எந்த ஆய்வையும் பக்தர்கள் செய்வதில்லை என்பது இந்த நூற்றாண்டிலும் தொடரும் அவலம் அல்லவா?
கிருஷ்ணன், ராதா திருமணம் நடந்ததா? இவர்களின் யோக்கியதை தான் என்ன?

ஒருமுறை விஷ்ணுவின் பக்தர் ஒருவர் பல ஆண்டுகளாக பிரார்த்தனை செய்து தியானம் செய்தார். விஷ்ணு பகவான் மகிழ்ந்து அவனுடைய விருப்பத்தைக் கேட்டார். அப்போது அந்த பக்தர், “எனக்கு லட்சுமியே மனைவியாக வரவேண்டும்” என்று வரம் வேண்டுகிறார். ஒரு பக்தனின் வேண்டுதலால் கடவுள் மகிழ்ச்சியடைந்தால், பக்தன் விரும்பியதைக் கொடுக்க வேண்டும். எனவே விஷ்ணு ‘நீ அடுத்த பிறவியில் லட்சுமியை மனைவியாகப் பெறுவாய்’ என்று வரம் கொடுத்து உறுதியளித்து விட்டார்.
லட்சுமியோ கடவுளான விஷ்ணுவின் மனைவி. விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களின் போதெல்லாம், லட்சுமியும் அவருடன் கூடுவிட்டுக் கூடு பாய்கிறவர். உதாரணமாக, விஷ்ணுவின் அவதாரங்களான ராமர் மற்றும் கிருஷ்ணரின் மனைவிகளாக சீதை, ராதை அல்லது ருக்மணி இப்படி அவதாரங்கள் இந்தியாதி இந்தியாதி!

மறுபிறவியில் லட்சுமியானவள். ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவந்தி மற்றும் ராதா என 4 மறு அவதாரங்களை எடுத்தாளாம்.
ராதாவும் கிருஷ்ணாவும் குழந்தைப் பருவத்திலிருந்தே ஆத்ம காதலர்களாகினர். ராதா கிருஷ்ணனைக் காதலிப்பதில் பைத்தியமாக இருக்கிறாள். ஆனால், ஒரு கட்டத்தில் லட்சுமி ஏன் ராதையாக அவதாரம் எடுத்தாள் என்பதை இருவரும் உணர்ந்து, அந்த அவதார நோக்கத்தை நிறைவேற்ற, ராதா கிருஷ்ணரை நேசித்த போதிலும் அயனை மணக்க வேண்டியதானது.
விஷ்ணு, லட்சுமியை திருமணம் செய்து கொள்ள பக்தனுக்கு வரம் கொடுத்தார் அல்லவா? வரம் என்னவோ கொடுத்துவிட்டார். லட்சுமியோ விஷ்ணுவின் நித்திய காதலி. அப்படியே இன்னொருவருக்கு தூக்கிக் கொடுத்து விடுவாரா பகவான் விஷ்ணு. எனவே, அயன் ஹிஜ்தாவாக (திருநங்கை அல்லது ஆண்மைக்குறைவாக) பிறந்தான். அல்லது பிறக்க வைக்கப்படுகிறான். அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும், அவர்களால் ஒருபோதும் ஒன்றாக முடியாது விஷ்ணுவின் கணக்குப்படி.
ராதாவாக அவதாரம் எடுத்த லட்சுமியின் கணக்கு அப்படியில்லை. திருமணத்திற்குப் பிறகும் ராதா கிருஷ்ணரின் காதல் முறியவில்லை. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து ஒருவரையொருவர் சந்தித்தனர். ராதா உடல் ரீதியாக அயனுடன் தங்கியிருந்தாலும் அவள் இதயம் எப்போதும் அவளது காதலன் கிருஷ்ணனுக்காகவே துடிக்கிறது.

வெட்கக்கேடு! மானக்கேடு!
இந்தக் கதையை நம் வீட்டுப் பிள்ளைகளின் திருமண நிகழ்ச்சியில் ‘ராதா கல்யாண வைபோகமே…’ என்று பாடினால் அந்தப் பிள்ளைகளுடைய ஒழுக்க வாழ்விற்கு பங்கம் ஏற்படாதா? என்று சிந்தித்தோமா? மேலும் கதையைப் பாருங்கள்!
ஒருமுறை அவள் காட்டிற்குச் செல்வதைக் கண்ட அவளது கணவன் அயன், தனது ஆண்மைக்குறைவு காரணமாக யாருடனேனும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டிருக்கிறாளா என்ற சந்தேகம் எழுந்து, ஒரு நாள் ராதா உண்மையில் எங்கு செல்கிறாள் என்று வேவு பார்க்க சிலருடன் சேர்ந்து ராதாவைப் பின்தொடர்ந்தானாம். கிருஷ்ணன் இப்படி எல்லாம் நடக்கும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தான். இவர்களின் சங்கத்தை தெரிந்தும் அயனும் அதனை பெரிதாக எதுவும் கண்டு கொள்ளவில்லை.
என்ன கொடுமை! இதெல்லாம் காட்டுமிராண்டி காலத்து கதை என்று நமக்கே தோன்றவில்லையா?
கிருஷ்ணரால் ராதாவை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்றாலும், ராதா இல்லாமல் கிருஷ்ணர் முழுமையடைவதில்லையாம்! அந்த அயோக்கிய கிருஷ்ணன் லட்சுமியின் மற்ற 3 மறுபிறவிகளையும் மணந்தார். இறுதியில் அவர் முழு லட்சுமியையும் (நான்கு வடிவங்களையும்) கொண்டிருந்தான். இப்படி அப்பட்டமாக ஒழுக்கக் கேட்டை விதைக்கிறது இவர்களின் புராணக் கதைகள் என்பது ஒரு புறம்.
மகாபாரதம் மற்றும் அனைத்து புராணங்களின் ஆசிரியரான வியாசர். மகாபாரதம், பாகவதம், விஷ்ணுபுராணம் போன்ற எந்த ஒரு முக்கியப் பகுதியிலும் ராதாவைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்றும் சொல்கின்றனர். மேலும் இந்தோ கங்கை சமவெளியில் உள்ள கிருஷ்ணனின் பக்தர்களின் கருத்துப்படி பகவான் வாழ்க்கையில் ராதா பெறும் முக்கியத்துவம் பெற்றுவிட்டாள் என்கின்றனர்.
ஒரே குழப்பமாக இருக்கிறது அல்லவா? இதற்கு தந்தை பெரியார் அவர்கள் கிருஷ்ணனும் – அர்ஜுனனும் சம்வாதம் செய்து அவர்களே பதில் சொல்வதாக அமைத்திருப்பதைப் பாருங்கள்.

கிருஷ்ணன்: ஒருவனுக்குத் தெரியாததையும், புரியாததையும் சொன்னால்தான் மனிதர்கள் பயப்படுவார்கள். புரியும்படியானதாக எதைச் சொன்னாலும் திருப்பிக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் தான் அது செய்தால் பாவம், இது செய்தால் பாவம், நினைத்தால் பாவம் என்றெல்லாம் மிரட்டி வைத்திருக்கிறார்கள்.
அர்ஜுனன்: இந்த மாதிரி எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்?
கிருஷ்ணன்: முடிந்த வரையில் முடியட்டும்.
அர்ஜுனன்: இந்த புரட்டு வெளியாகிவிட்டால் அப்புறம் என்ன செய்வது?
கிருஷ்ணன்: அப்புறம் வேறுபுரட்டை உண்டாக்கிக்கொள்ள அவர்களுக்குத்தெரியும்.
(“குடி அரசு”, சித்திர புத்திரன் 9.11.1930)
சம்பாஷணை கிருஷ்ணனின் நம்பிக்கை பொய்க்கவில்லை..! பிள்ளையார் வந்து பால் குடிப்பதும், அத்திவரதர் மரக்கட்டை வந்து காட்சியளிப்பதும், கைதட்டினால் கரோனா ஓடிவிடும் என்பதும், கோமியம் குடித்தால் நோய் குணமாகிவிடும் என்பதைப் போன்று புரட்டுக்கள் தொடர்கிறது தானே? எல்லாவற்றிற்கும் முதலீடு எது? பக்தி என்ற பெயரில் மக்கள் கொண்டிருக்கும் மடமைத்தனம் தானே? பக்தி என்ற பெயரால் மக்களின் மூளையில் போடப்பட்ட விலங்கை அகற்றுவதற்கு நாம் ஒவ்வொருவரும் தந்தை பெரியார் என்னும் சம்மட்டியைக்கொண்டு உடைக்க வேண்டிய காலகட்டம் இது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *