இயக்க மகளிர் சந்திப்பு (51) என் தலைசாயும் வரை இந்தக் கொடி பறக்கும்!

Viduthalai
5 Min Read

வி.சி.வில்வம்

இந்தத் தலைப்பை வாசித்துவிட்டு, அருகில் இருக்கும் ஜைனம்பு அம்மாவைப் பாருங்கள்! தம் ஊரில் இருக்கும் கல்வெட்டு மற்றும் கொடிக்குச் சிறு பிரச்சினை வந்த போது அவர் முழங்கிய வார்த்தை தான், “என் தலை சாயும் வரை இந்தக் கொடி பறக்கும்”, என்பது! திராவிடர் கழகக் கொடிக்கு, அதன் கொள்கைக்குச் சிறு ஊறு நேர்கிறபோது சிற்றூராக இருந்தாலும் அங்கே சிலர் இருப்பர்.
இவ்வளவிற்கும் ஜைனம்பு அம்மா வசிக்கும் வடவோடை பகுதியில் 10, 15 வீடுகள் இருந்தால் அதுவே அதிகம்.‌ அந்த ஊரில் பத்துக்குப் பத்து அளவு கொண்ட நூறு சதுரடி வீட்டில் இந்த அம்மா வாழ்கிறார். இணையர் நடேசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட, தான் மட்டும் அங்கே வசிக்கிறார்.
குக்கிராமத்தை விட, சிறு கிராமம். அங்கே இருக்கும் தமது வீட்டுச் சுவற்றில் பெரியார் பிறந்தநாள் விழா சுவரொட்டியைக் கொண்டு வரச்சொல்லி, ஒட்ட வைத்துள்ளார் என்றால் இந்தச் சமூக மக்களை எவ்வளவு கவர்ந்திருப்பார் பெரியார். ஜைனம்பு அவர்கள் இளம் வயதில் மட்டுமல்ல, நாம் சந்தித்த நாளன்றும் கொள்கை உறுதியோடு பேசினார்.
கடவுள் தேவையில்லை, மதம் வேண்டாம், ஜாதியை ஒழிப்போம் எனக் கூறிக் கொண்டு, பெரியார் படத்தைச் சுவற்றிலும் ஒட்டி வைத்து, முதிர்ந்த நிலைக்கு வந்த பிறகும், தனியாக வசித்திடும் ஒரு மகளிர் இவ்வளவு பேசுகிறார் என்றால் எவ்வளவு சுயமரியாதையை, எவ்வளவு தைரியத்தை, எவ்வளவு நம்பிக்கையை அவர் பெற்றிருக்க வேண்டும்!

அதேநேரம் அந்தக் கிராம மக்கள் ஜைனம்பு அம்மாவிடம் மிகுந்த அன்போடு இருக்கிறார்கள். முரண்பாடுகள் இன்றி, பக்குவம் நிறைந்த சமூகம் என்பதாலேயே இது பெரியார் மண் என்று அழைக்கப்படுகிறது.
இயக்க மகளிர் சந்திப்பின் 51 ஆவது நேர்காணலுக்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வடவோடை கிராமத்திற்குச் சென்றோம். அங்குதான் 75 வயது நிறைந்த ஜைனம்பு அம்மாவைச் சந்தித்தோம்.
அம்மா வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் மட்டும்தான் வசிக்கிறீர்களா?
நான் நன்றாக இருக்கிறேன். இந்தச் சின்ன ஊருக்கு வந்து என்னைப் பேட்டி எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மட்டும் தான் வீட்டில் இருக்கிறேன். எனது இணையர் பெயர் நடேசன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.
எங்களின் சுயமரியாதைத் திருமணத்தைச் சோழங்கநல்லூர் அந்தோணிசாமி அவர்கள் நடத்தி வைத்தார்கள்.‌ அப்போது எனக்கு வயது 12. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இருவருக்கும் தாலி இல்லாத, சுயமரியாதைத் திருமணம் தான் நடைபெற்றது. எனது சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் பூண்டி. இப்போது வசிப்பது வடவோடை.

பெரியார் இயக்கம் உங்களுக்கு எப்போது அறிமுகம்?
எனது அண்ணன் இந்த இயக்கத்தில் தான் இருந்தார். அதனால் இயக்கக் குடும்பத்திலேயே எனக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும் நிகழ்ச்சிகளுக்குச் சென்றுள்ளேன். ஒன்றிய மகளிரணி தலைவராகவும் இருந்துள்ளேன்.
காவிரிப் பிரச்சினைக்காக நடந்த போராட்டத்தில் மதுரையில் ஒரு மாதம் சிறையில் இருந்தேன். பிறகு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்று வேலூர் சிறையில் ஒரு மாதம் இருந்தேன்.

உங்கள் ஊருக்கு நுழையும் போது கல்வெட்டு, கொடிக்கம்பம் உள்ளதே?
ஆமாம்! இதே கிராமத்தில் முன்பிருந்த தோழர்கள் இணைந்து படிப்பகம், கல்வெட்டு, கொடிக்கம்பம் நிறுவினார்கள். படிப்பகம் இடிந்துவிட்டது. கல்வெட்டு, கொடிக்கம்பம் இருக்கிறது. அதை எடுக்க வேண்டும் என அப்போது சிலர் முயற்சி செய்தனர்.‌ நானும், இணையரும் கடுமையாகப் போராடி அதைத் தடுத்து நிறுத்தினோம்.
தந்தை பெரியாரின் 126 ஆவது பிறந்த நாளையொட்டி 28.11.2004 அன்று கி.வீரமணி அய்யா அவர்களால் கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.
உ.சாமிக்கண்ணு வரவேற்புரை வழங்க, வீ.மோகன் தலைமை வகித்தார். எஸ்.எஸ்.மணியம் அய்யா, ஊராட்சி மன்றத் தலைவர் ஜான்சிராணி மற்றும் நான் முன்னிலை ஏற்க அந்தக் கல்வெட்டுத் திறப்பு விழா நடைபெற்றது.

ஆசிரியர் அய்யாவை சந்திக்கும்
வாய்ப்புக் கிடைத்ததா?
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் சந்தித்தால் அன்புடன் நலம் விசாரிப்பார்கள்.‌ சோழங்கநல்லூர் மருத்துவமனைத் திறப்பு விழாவின் போது என்னால் நன்கொடை கொடுக்க முடியவில்லை.
விடுதலைப் பத்திரிகையை ஆர்வமாகப் படிப்பேன். ஆனால் எழுத்துக் கூட்டியே படிப்பேன். ஆசிரியர் அவர்கள் ஏற்பாட்டில் எனக்கு விடுதலை வந்து கொண்டிருக்கிறது. அதைக் கிராமத்திலும் சிலர் வாங்கிப் படிப்பார்கள்”, என உடலில் தளர்வு இருந்தாலும், உள்ளத்துக் கொள்கையைத் தெளிவாக எடுத்துரைத்தார் ஜைனம்பு அம்மா!
“சமயம் என்ன சொல்கிறது, சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதோடு, கடவுள் வந்து சொப்பனத்தில் ஏதாவது சொல்வார் என மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்”, எனப் பெரியார் வேடிக்கையாகச் சொல்வார். (குடிஅரசு – 15.06.1930) கடவுளால் மனிதர்களுக்கு எந்தப் பயனும் கிடைத்திருக்காது. ஆனாலும் ஆங்காங்கே கடவுள் படங்களை மாட்டி வைத்திருப்பார்கள்.

ஜைனம்பு அம்மாவோ பெரியார் பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு செய்த ஆசிரியர் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் படத்தை வீட்டில் ஒட்டி வைத்துள்ளார். அதேபோல மகளிரணியில் இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி 24.12.2017 அன்று, பெரியார் திடலில் வழங்கிய பாராட்டுச் சான்றிதழும் அங்கு மாட்டப்பட்டிருந்தது. ஆகச் சிறு கிராமங்களில் கூட பெரியார் பெருந்தொண்டர்கள் உணர்வோடு வாழ்கிறார்கள்.‌ அதேபோல அவர்களின் போராட்டங்களும் வீண் போகவில்லை. பெரியார் கொள்கையின் தலைகீழ் புரட்சி என்பது இதுதான்!
வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்கிற குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. காரணம் மண் தோண்டியவர் தம் பிள்ளையை, மண் தோண்ட விடுவதில்லை.‌ எப்படியாவது படிக்க வைத்து வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்.
அதேபோன்று “அப்பன்” தொழிலைச் செய்ய வேண்டும் என்கிற ஹிந்து மத ஸநாதனத்தை எந்த அப்பாக்களும் கேட்பதில்லை. அவர்கள் பிள்ளைகளும் உயர்கல்வி முடித்து உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்கள்.
கிராமங்கள் எல்லாம் நகரங்கள் போல ஆக வேண்டும் எனப் பெரியார் விரும்பினார். இப்போதைக்குக் கிராமத்துப் பிள்ளைகள் அனைவரும் உலகெங்கிலும் பரவி சுயமரியாதை வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள். “சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு” என்கிற பெரியாரின் முழக்கம் தமிழர்களின் வாழ்வியலாகவே மாறிவிட்டது. இந்த வரலாற்று வெற்றியில் ஜைனம்பு போன்ற மகளிரின் பங்கும் குறிப்பிடத்தக்கது என்பதை வரலாறு பதிவு செய்யும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *