சென்னை, பிப்.6 விமர்சனங்களை முன் வைக்காது சிலையை அவமதிக்கும் கும்பல்மீது நடவடிக்கைக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் அறிக்கை வருமாறு:
தந்தை பெரியார் அவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசி இழித்தும் பழித்தும் பேசி வருகிற ஒரு கும்பல், அமைதி பூங்காவான தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகின்றது. இதன் பின்னணியில்தான் 3.2.2025 அன்று இரவு 8 மணி அளவில் சென்னை ஜாபர்கான்பேட்ட பிள்ளையார் கோயில் தெரு கங்கை அம்மன் தெரு சந்திப்பில் தென் சென்னை மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் நிறுவப்பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை மீது ஏறி நின்று காலணியால் அடித்திருக்கிறார்கள். இச்செயல் கடும் கண்டனத்துக்குரியதாகும். உட னடியாக அந்தப் பகுதியில் உள்ள மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் பெரியார் சிலையை அவமதித்த நபரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
மறியல் போராட்டம்
தந்தை பெரியார் சிலையை அவமதித்த நபர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும், இதன் பின்னணியில் உள்ள கும்பலை கைது செய்யக்கோரியும் தென் சென்னை மதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் சைதை சுப்பிரமணி தலைமையில் தோழர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தந்தை பெரியார் சிலையை அவ மதித்த கும்பலை குண்டர் சட்டத்தின் கீழ் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். தந்தை பெரியார் அவர்களின் கோட்பாடுகளுக்கு எதிராக கருத்தியல் ரீதியாக விமர்சனங்களை முன் வைப்பது என்பது வேறு. ஆனால் பெரியாரை இழிவு படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற துடிக்கும் கூட்டத்தின் சதி திட்டத்தை முறியடித்து தக்கப் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு வைகோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.