இந்நாள் – அந்நாள்

Viduthalai
1 Min Read

ஓமந்தூரார் பிறந்த நாள் இன்று [1.2.1895]

இராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர். இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள் செல்ல உரிமையளிக்கப்பட்டது. அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத் துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை செயல்படுத்தினார். இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றை இயற்றினார்
பார்ப்பனப் பையன்களுக்கோ சூடான உப்புமா, ஓமந்தூரார் பையனுக்கோ பழையசோறும் வத்தலும்.

வ.வே.சு. அய்யர், காங்கிரசின் கொள்கையான தேசியத்தைப் பரப்ப வேண்டி சேரன்மாதேவி என்ற இடத்தில், ‘பாலபாரதி தமிழ்க் குருகுலம் பரத்துவாஜ ஆசிரமம்’ என்ற பெயரில் தேசிய வீரர்கள் பயிற்சிக் கூடமொன்றை, காங்கிரஸ் இயக்கத்தின் நிதியையும் தமிழ் மக்களின் நன்கொடையையும் கொண்டு நடத்தி வந்தார். இதில் பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உப்புமாவும், மற்றவர்களுக்கு பழைய சோறும், தனி இடத்தில் வெளியில் சாப்பாடும், இருவருக்கும் தனித்தனி தண்ணீர்ப் பானைகளில் குடிநீரும், பார்ப்பனர்க்கு வேதபாராயணமும், அல்லாதவர்க்கு தேவா ரம், திருவாசகமும்; இப்படியாக வேறுபாடு காட்டப்பட்டது. இக்குருகுலத் திலேயே பயின்ற ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மகன், பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உள்ள தண்ணீர்ப் பானையில் தண்ணீர் குடித்ததற்காகத் தண்டிக்கப்பட்டான். இது பெரியார் கவனத்துக்கு வந்து, வெகுண்டெழுந்து, அதற்கு காங்கிரஸ் நிதி உதவியை மேற்கொண்டு வழங்க மறுத்ததோடு, மக்கள் மத்தியில் தேசியத்தின் பேரால் பார்ப்பனர் செய்யும் அட்டூழியத்தை விளக்கியதுடன், குருகுலத்தை விரைவில் ஒழியும் நிலைக்கு ஆளாக்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *